Search This Blog

Tuesday 29 April 2014

தேர்தலோ....தேர்தல்......?


தேர்தலோ ,தேர்தல்….?

    மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்த, உலகின் மகத்தான மிகப்பெரிய சுதந்திர நாடு நமது இந்தியா. மாறுபட்ட மத, இன, மொழி, மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும்  ஒன்றே என ஒருங்கிணைந்து வாழும் பாரதம் போன்ற சிறந்த ஒரு பெரிய திருநாட்டை உலகில் வேறெங்கும் காண இயலாது. ஆயினும் நமது நாட்டின் மனித்தன்மை என்னவெனில், ஏழை - பணக்காரன், வேலையுள்ளவன்வேலையற்றவன், பசியுள்ளவன்தின்று கொழுத்து உணவை வீணடிப்பவன் என மக்களிடையே நிலைத்திருக்கும்  ஏற்றதாழ்வுகளை அனைவரும் உணர்ந்து வாழ்வதுதான். ஆனால், சில அரசியல்வாதிகள் மட்டும் தங்களைத் தாங்களே நாணயஸ்தர்களாக் கருதிக்கொள்கின்றனர். ஆனால், நடைமுறையில் அவர்கள் ‘?’ .

   வராஹிமிகிரர் மற்றும் கர்க மகரிஷிகளின் கூற்றுப்படி ஒவ்வொரு கிரகமும் உலகின் ஒவ்வொரு பகுதியையும் ஆள்கின்றன. அதன்படி  நமது இந்தியப் பெருநாட்டை ஆட்சி செய்பவர் குரு ஆவார். அவரே நமது நாட்டின் அரசியல் நிலவரங்களை ஆட்சி செய்பவராவார்.

    முண்டேன் அஸ்ட்ராலஜி எனும் இகலோகஜோதிடத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் அதையொத்த தேர்தல்கள் என்பது மக்களின், வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையையும், பேராதரவையும் பெருவாரியாகக் காட்டும் ஒரு நிகழ்வாகும்இவர்தான் நமது நம்பிக்கைக்கு உரியவர் என மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பவரே மிகச்சிறந்த வேட்பாளர் ஆவார். இதை நிலைநாட்ட முக்கிய மூன்று காரணிகள் உண்டு, முதலாவது வாக்காளர் அடுத்து வேட்பாளர் மற்றும்  அவர்கள் நிற்கும் மாநிலமாகும். வாக்காளர்களையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. புத்திசாலிகள்எதையும் ஆராய்ந்து ஓட்டளிப்பவர்கள். 2. உடன் பிறப்புக்கள், ரத்தத்தின் ரத்தங்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் தீவிரமான தொண்டர்கள் மற்றும் மூன்றாவதாக நடுநிலையாளர்கள் ஆவர். அதேபோல் வேட்பாளரையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. சமூகசேவையில் ஆர்வமுள்ளவர்கள் 2. கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் 3. சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

     இத்தகைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான காரகக் கிரகம் இராஜக்கிரகமான சூரியனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் ? சாத்திரங்களும் இதையே வழிமொழிகின்றன. வாக்காளர்களாகிய பொதுமக்களைக் குறிப்பது மற்றொரு இராஜக்கிரகமான சந்திரனே ஆவார். அடுத்து தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணயத்தைக் குறிப்பது அந்தந்த நாட்டுக்குரிய 10 ஆம் அதிபதியாகும்.  

    இந்தியாவுக்கான இராசி மகரம் ஆகும். எனவே, தேர்தல் நடக்கும் பிரதேசத்தின் ஜாதகத்தில் அரசு மற்றும் நிர்வாகத்துக்குரிய இராஜக்கிரகமான சூரியனின் நிலையை ஆராய்ந்து, அத் தேர்தல் பிரச்சனைகள் ஏதுமின்றி, ஒழுங்காக, அராஜகம், கலகம் போன்றவைகள் ஏற்படாமல், நியாயமான, நேர்மையான முறையில் நடைபெறுமா ? - என்பதைத் தீர்மானிக்க முடியும்.

    உதாரணமாக, உத்திரப் பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அலகாபாத்துக்கான இராசி மிதுனமாகும். அப்போது சூரியன் மேஷத்தில் உச்சநிலையில் இருப்பதாகக் கொண்டால், அது மிதுன இராசிக்கு லாப பாவமாகும். அந்தப் 11 ஆம் இடம், வழிமுறையற்ற லாபங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை  அள்ளி வீசுதல் போன்றவற்றிற்கும் காரகம் பெறுவதால், கட்சிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

    அடுத்து, மிதுனத்துக்கு மூன்றாம் வீட்டு அதிபதியான சூரியன், தன் வீட்டுக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது, தேர்தலை நடத்தும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை முழுவதுமாக அறிந்தவர்களாக, அதைச் சரிவர நிறைவேற்றுபவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடப்பதையும் குறிக்கும்.

    மனோகாரகன் சந்திரன், தேர்தல் நேரத்தில், வாக்குகளை  அளிப்பதில் மக்களின் நிலையான மனதையும், உறுதியான எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.
    நாம் வாக்காளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதன்படி புத்தி கூர்மையுள்ளவர்களை, நவாம்சத்தில் குரு இடம்பெற்ற இராசி மூலமாகவும், பொதுமக்களை சனியைக் கொண்டும் மற்றும் கட்சித் தொண்டர்களைச் செவ்வாயைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

    அதேபோல், வேட்பாளர்களில் ஒரு தலைவரை மற்றும் கட்சிகளைக் கண்மூடித்தனமாகத் தொடரும் அரசியல்வாதிகளைக் கேதுவாலும், தன்னலமற்ற மற்றும் பொதுச் சேவைகளில் முழு ஈடுபாடுள்ள வேட்பாளரை 7 ஆம் இடத்து அதிபதியாலும், 7 இல் உள்ள அல்லது ஏழைப் பார்க்கும் கிரகம் குறிக்கும் (இவற்றில் எது பலம் மிக்கதோ, அதைப்பொருத்தது).

    இனி, இதேபோல் 24 – ஏப்ரல், 2014 அன்று, தமிழ் நாட்டில் நடக்கப் போகும் தேர்தலைப் பற்றி அலசவோம். அன்றைய கோசார நிலை:


கேது,புத
சூரி
லக்///

குரு

குரு

கேது
சுக்
சனி()
புத,செவ்
(),சூரி
சுக்
சந்
24-4-2014
07-30
சென்னை



நவாம்சம்



லக்///



இராகு
சனி()
செவ்()

இராகு
சந்


    ஜாதகத்தில் 4 ஆம் அதிபதி உச்ச சூரியன் 12 இல் மற்றும் தமிழ்நாடு இராசி சிம்மத்திற்கு  9 இல் கேது மற்றும் புதனுடன் இணைந்துள்ளார். 12 ஆம் இடத்தை செவ்வாய், இராகு மற்றும் சனி பார்க்கிறது. சூரியன் பகை நவாம்சம் பெற்றுள்ளார்  இந்நிலைகள் தேர்தல் அதிகாரிகளை ஒருதலைப்பட்சமாக நடக்கவும் மற்றும் கட்டாயம் காரணமாக, வேறுவொரு கட்சிக்கு மறைமுகமாக உதவும் நிலையையும் ஏற்படுத்தலாம். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் நியாய உணர்வுகள் அவர்களுக்கே மனவருத்தத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

    ஏழாம் அதிபதியான செவ்வாய் பகை வீட்டில் அமர்ந்துள்ளார். அதன் காரணமாக, மக்களின் மனநிலையைப் புரிந்திகொள்ள முடியாத நிலை ஏற்படும். செவ்வாய், சனி இருவரும் 8, 12 ஆம் இடங்களையும், சூரியன் மற்றும் புதனையும், சனி 3 ஆம் இடத்தையும் பார்ப்பதால் வேட்பாளர்கள், சட்டம் பாயும் என்ற பயந்த நிலையில் காணப்படுவர். ஆனால், இத்தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வுகளும், குழப்பங்களும் ஏற்படலாம். இரகசியக் குற்றங்கள் அதிகரிக்கலாம்.

    இலக்னாதிபதி சந்திரனோடு இணைந்து, சந்திரன், சுக்கிரன் மற்றும் சனிக்கு இடையில் இருப்பதால், ஆட்சிக்கு வரப்போகும் கட்சி தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி, தனித்துச் செயல்படாத நிலையையே குறிகாட்டுகிறது.

    இவ்வாறாக அரசியலில் எந்தவிதமான தேர்தல்களையும் கட்டுக்குள் வைக்கப் பல காரணிகள் உள்ளன. எனவே, வரப்போகும் நிலைகளை முன்னரே அறிந்து சொல்லும் அல்லது அனுமானிக்கக் கூடிய திறமைகள் ஜோதிடப் பெருமக்களுக்கு இருந்தாலும், ஜோதிடர்கள் தேவையின்றி அல்லது சம்மன் இன்றி ஆஜராகாதிருப்பது அவர்களுக்கு நல்லதுதானே ?  

--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி)





Monday 28 April 2014

தசா வரிசை கேது முதல் ஆரம்பிப்பது ஏன் ?





ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ

தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

   விம்சோத்ரி தசாமுறையில் விரியும் கிரக வரிசை ;கேது – 7 வருடம், சுக்கிரன் – 20, சூரியன் – 6, சந்திரன் -- 10, செவ்வாய் – 7, இராகு – 18, குரு – 16, சனி – 19, புதன் – 17 வருடங்கள் என்பதை நாம் அறிவோம்.

    இவை ஏன், இந்த முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன ? – என்ற சிந்தனை மற்றும் கேள்வி பல ஆண்டுகளாய்ப் பலர் மனதில் உள்ளன. இந்த தசாவரிசையில் செயல்படுவதில், பல புதிதான பொருத்தங்கள் உள்ளன. இந்த தசாமுறையானது மனித வாழ்க்கைக்கு மிகுந்த சீரான முறையாக மற்றும் நுண்ணிய முறையாகப் பார்க்கப்படவேண்டும்.

    கேதுகடவுளுக்கு அருகே நம்மை அழைத்துச்செல்லும் கிரகமாகும். எனவே கேது தசாவில் ஆரம்பமாவது சரிதானே ? அதாவது எங்கே ? – ஆன்மா உடலில் வேர்விட்டிராத காலத்தில் அதை நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிற மிகச் சிறிய குழந்தைப் பருவம் அது. கேது தசாக் காலத்தில்தான் நாம் நமக்குத் தேவையானது எது ? தேவையற்றது எது ? – என்பதை உணர்கிறோம். சிறு குழந்தையாக, நமக்குத் தேவை, சிறிது சுவாசமும், சிறுதளவு உணவும் ஆகும். அதுவும் திடவுணவாக அன்றி, திரவ உணவே போதுமானதாகும். இக்குழந்தைப் பருவம் 0 – 1 வருடமாகும்.

    சுக்கிரதசா ;- இச் சிறு குழந்தை போஷிக்கப்பட வேண்டிய காலமாகும். எனவே, போஷிப்பாளரான சுக்கிரன் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறாள். குழந்தைக்குத் தேவையான கொழுப்புச் சத்தைக் குழந்தைக்குத் தருபவள் அவளே. நாம் இந்த பூமியில் ஒருவருக்கொருவர் மனதளவில் புரிந்து கொண்டும், அனுசரணையாக வாழ்வதற்காக ஏற்பட்ட நீண்டதொரு தசாக்காலம் சுக்கிரனின் தசாக்காலமாகும். இந்த உடலுக்குத்தேவையானது நல்ல கவனிப்பும், உபசரிப்புமாகும். நமது, மனம் மற்றும் உடலைப்பற்றி நாம் அறியும் சக்தியை உருவாக்கித்தருவது இந்த தசாக் காலமேயாகும். சுக்கிர தசாக்காலமே நமது வாழ்க்கையின் முக்கியக் காலங்களில் ஒன்றாகும். இக் காலமானது 1 முதல் 3 வயதினைக் குறிப்பதாகும்.

    சூரிய தசா ;- பிறரின்  உதவியின்றி நாம் நமது சுய அடையாளத்தை வெளிப்படுத்தி, அவனுடைய பிரகாசமான ஒளியைப் பெற்று, ஒளிரத் தயாராகும் உன்னதக் காலமாகும். ஆரோக்கியமான சுயஅறிவை, இந்த சுயநலம் அனுமதிப்பதோடு, ஒரு ஆரோக்கியமான சுய கர்வத்தால், நமது எல்லையைப் பிறர் தாண்டிச் செல்லாவண்ணம் பார்த்துக் கொள்ளும் அளவற்ற சக்தியை அவன் நமக்கு அளித்திருப்பதாக உணர்கிறோம். அதேபோல் நாமும் மற்றவர்களின் எல்லையைத் தாண்டி ஓட முற்படுவதில்லை. இந்த வயதானது 4 முதல் 12 வரையாலானதாகும்.

    சந்திர தசா ;- இக்காலத்தில் நாம் பெரும் சுய அனுபவங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள வழியில், பிறரோடு பகிர்ந்துகொண்டு வாழும் இனிய வாழ்க்கைக்குத் தேவையான தசாக் காலமாகும். நாம் நம்மை மற்றவர் கண்களின் பிரதிபலிப்பாகக் கொண்டு, அவர்களின் அனுபவங்கள், இச்சமூகத்தில் நமக்கே மீண்டும் பிரதிபலிப்பதாகக் கருதி, அதன் மூலமாகப் புதியனவற்றைக் கற்றுக் கொள்ள முற்படவேண்டும். ஏனெனில் நாம் மட்டுமே ஓளிர வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. இந்த சந்திர தசையில் நாம் கவர்ச்சி மிக்க இளைஞனாக, உணர்வுபூர்வமாக வலம்வருகிறோம். இக்காலம் 13 முதல் 19 வயதுவரையாகும்.

     செவ்வாய் தசா;- இந்த தசையில், இவ்வுலகில் எப்போது நாம் மற்றவர்களோடு போட்டிபோடக் கற்றுக் கொள்வதோடு, அவர்களை எதிரிகளாக்கிக் கொள்வதைவிட, நண்பர்களாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். பல முடிவுகள் நிறைந்த இவ்வுலகில், செவ்வாயின் கூடிவாழும் குணம் மற்றும் கடினமான சக்தியின் மூலமாகவும், தைரியத்தின் மூலமாகவும், ஒழுக்கமான செயல்களாலும் நமது கொள்கைகளைச் சோதிக்கவேண்டும். இந்த வயதானது 20 முதல் 27 ஆண்டு வரையாகும்.

     இராகு தசா ;- இராகு தசாக்காலத்தில் நமது உலக வாழ்க்கையும், அதில் நாம் நிலைந்திருத்தலையும் காட்டுகிறது. நமக்குள் இருந்து, குதூகலிக்கும் இளமையோடு, இந்த உலக மாயையில் சிக்கித் தவிக்கிறோம். திருமணம், குழந்தைகள், தொழில் மற்றும் அதன் மூலமாக ஞானத்தை, ஆன்மாவில் மறைத்துவைக்கும் கலையையும் இராகு தசாவில் கற்றுத் தெளிகிறோம்.

     குரு தசா ;- பேராசை குணங்களால் நம்மை ஓடவைத்த இராகு தசாவைத் தாண்டி, குரு தசை வரும் போது, நாம் நம் முன்னோர்களின் பாண்டித்யங்கள் அனைத்தையும்  திரும்பப் பெறமுடியும். இக்காலத்தில்தான் நமது மனபாரங்கள் அனைத்தும் குறைந்ததாக உணர்கிறோம் அல்லது மீண்டும் நம் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக உணர்கிறோம். குரு, நமக்கு உள்ளொளி, மனமுதிர்ச்சி மற்றும் வாழ்வியல் பாடங்களை அளிக்க வருகிறார். அவர் குருவாதலால், நம் பாண்டித்தியங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளமுடியும். இதற்குச் சம்மான மனித வாழ்வு 40 முதல் 55 வயது வரையானதாகும்.

     சனி தசா ;- நமக்குள்ள எல்லைகளை நாம் சனி திசையில்தான் உணர்ந்து கொள்கிறோம். குரு தசாவில் குதூகலமாக, உற்சாகமாக உலவிய நாம், சனியால் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, உண்மையின் முன் நிறுத்தப்படுகிறோம். உண்மை நிலை என்பது, குருவின்எல்லாம் நன்மைக்கே என்ற நிலையல்லஇது சனியின் குளிர்ச்சியுடன் கூடிய கடுமையான உண்மை நிலையாகும். அவன், நமது உடலின் தற்காலிக குணங்கொண்ட, இயற்கையான வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கூறுகிறான். தனிமையில். நமது கர்மவினைகளை மேற்கொள்ள, நமக்கு நேரத்தை அளிக்கிறான் சனி. இக்காலம் 55 வயது முதல் 65 வயதுவரையானதாகும்.

     புதன் தசா ;- இந்த தசையில் நாம் மீண்டும் குழந்தைகளாக மாறிவிடுக்கிறோம். விளையாட்டுத் தனம், நியாயமற்ற தன்மை என்பது அறிவு வளர்ச்சி, ஆணித்தரமான சிந்தனை, ஆகியவற்றினாலன்றி அறியாமையால் வருவதல்ல. சனி கொடுத்த உண்மையான பழுவை இறக்கி, நம் மனம் சுத்தமாகவும், திறந்த நிலையிலும், எதையும் பகுத்துணர ஞானயோகம் பெறுகிறது. இதன் வயது 65 வயதுக்கு மேல் உள்ள காலமாகும்.
      இவ்வாறு தசா மாற்றங்கள் ஏற்படும் போது, தசாசந்தியில் ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதன் காரணமாக தசா மாற்றத்தின் போது ஒரே இரவில் ஒருவரின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பூர்ண மாற்றங்களுக்கு முன் நாம் நம்மைத் தயார்ப்படுத்தி கொள்ளும் நேரமாக, தசாவின் கடைசிப் புத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புத்தியின் சக்தியானது அடுத்த தசாவில் ஏற்படும் நிகழ்வுகளைத் தாங்கும் சக்தியாக அமைந்துவிடுகிறது.

   கேது தசாவின் கடைசிப்புத்தி, புதன் புத்தியாகும். புதன் ஒரு கட்டுமான நிபுணனாவார். அவர் உணர்ச்சி பூர்வமான உலகவாழ்க்கையில் மாற்றங்களை விரும்புபவர். அவர் வேறு உலகக் கேதுவுடன், இவ்வுலக சுக்கிரனுக்குப் பாலமாக இணைக்க உதவுகிறார். இவ்வாறாக புதன் புத்தி, சுக்கிரன் புத்திக்குள் நுழைய ஒருவரின் மனதைத் தயார்ப்படுத்துகிறது.

    சுக்கிர தசாவின் கடைசி புத்தி கேது புத்தியாகும். கேது புத்தி ஒருவர் மனதைக் குழப்பிக் கஷ்டப்படவைத்து, சூரியதசாவை வரவேற்கத் தயார்ப்படுத்துகிறது. 20 வருட சுக்கிர தசாவிற்குப் பிறகு, அதன் கடைசிப் பதினான்கு மாதக் கேது புத்தி நமக்குத் தேவையில்லாதவற்றை நம்மிடமிருந்து ஒதுக்கிவிடுகிறது.

    சூரியதசாவின் கடைசிப் புத்தி சுக்கிர புத்தியாகும். சுக்கிர புத்தி, சந்திர தசா மாற்றத்துக்கு நம் மனதைத் தயார்படுத்துகிறது. சந்திரன் எங்கிருக்கிறானோ அங்கே நாம் உலகத் தொடர்பையும், சந்தோஷத்தையும் நம் குடும்பம் மற்றும் மக்கள் மூலமாக அடைய முற்படுகிறோம். சூரியதசாவில் ஆன்மாவைத் தொடரும் ஆவலுடையவர்களாக நாம் இருப்போம்.

    சந்திர தசாவின் கடைசிப் புத்தி சூரிய புத்தியாகும். சூரியபுத்தியானது அடுத்து வரப்போகிற, செவ்வாய் தசாவிற்கு நம் மனதைத் தயார்ப்படுத்தி அழைத்துச் செல்லுகிறது. ஏனெனில் சூரியனைப் போன்றே சந்திரனும் சுதந்திரமானவர். செவ்வாய் தசாக்காலத்தில் நாம் நமது உலக சக்தி மற்றும் தைரியத்தை நாடுவோம். அதற்கு சூரியன் நமது மனதில் நெருப்பின் மாற்றத்தைக் கொண்டு வருகிறார்.

    செவ்வாய் தசாவின் கடைசிப் புத்தி சந்திர புத்தி. சந்திர புத்தி இராகுதசாவை நெருங்கும் மனநிலையை உருவாக்க உதவுகிறது. இராகுவால் மனதைக் (சந்திரனை) கிரகணிக்க முடியும். இராகு என்பது உள்மனம். இவ்வாறாக சந்திரன் இங்கு உதவுகிறார்.

    இராகு தசாவின் கடைசிப் புத்தி செவ்வாய் புத்தியாகும். செவ்வாய் புத்தி தனது ஒழுக்கம் மற்றும் தைரியத்தால், மிகவும் நல்ல உள்ளமும், கருணையுள்ளமும் கொண்ட குருவின் தசையை அடைய நம்மைத் தாயர்ப்படுத்துகிறது. இராகு தசாவின் கடைசிப் புத்தியிலிருந்து, கடவுளின் தளபதியான செவ்வாய் தைரியத்தாலும், மனவுறுதியாலும்,தெளிவான வழியில், நல்வழியமைத்து, குரு தசாவை அடையச் செய்கிறார். இங்கு குரு நமக்கு உயர்ந்த பாடங்களுக்கான வகுப்பறை அமைத்துப் பாடம் நடத்துகிறார்.

    குரு தசாவின் கடைசி புத்தி இராகு புத்தியாகும், இராகு புத்தி தனது அழுத்தத்திலிருந்தும், உலக நடவடிக்கைகளிலிருந்தும் நம்மை விடுவித்து, சனியின் அனுபவபூர்வமான மற்றும் உண்மையான மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவுகிறது. சனியின் கற்பனையில்லாத உண்மை நிலைக்குக் குருவின் எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை எண்ணம் வழிவிட வேண்டும். உலகத்தோடு நமது தொடர்பை, பந்தத்தைக் குறிக்கும் இராகு உள்மனவழியாக சனியின் அழுத்தத்தை நமக்குக் கொண்டு வருகிறது.

    சனியின் கடைசி புத்தி குரு புத்தியாகும். குரு தனது எப்போதுமே நல்லதே நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலமாக, நமது மனதை, புதன் திசைக்குத் தயார்ப்படுத்த உதவுகிறது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, புதன் தசாவிற்குப் புதிய பாதை அமைத்துத் தருகிறது. இந்தப் புதியபாதை மூலமாக புதன், நமது திறமைகளையும், பரிசோதனை மற்றும் விளையாட்டுக்களிலும், முன்னேற்றத்தை அளிக்கிறது. உலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைக் கற்பதே புதனின் நாடகம் ஆகும்.

    புதன் தசையின் கடைசி புத்தி சனி புத்தியாகும். புதனின் ஒளிவீச்சு மற்றும் சக்திகொண்டு, சனி, கேது தசாவை நெருங்க தயார்படுத்துகிறது. புதன் தசாவின் 17 வருடங்களில், புதிதாக உருவாக்கப்பட்டும், கண்டுபிடிக்கப்பட்டும் உள்ள அனைத்தையும் கேதுவின் மீது பிரதிபலிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சனி, நம் மனதை ஒருநிலைப்படுத்தக் கற்றுத்தருகிறது.

    எனவே, நண்பர்களே! கேது தசாமுதல் ஏன் வரிசைப் படுத்தப்பட்டது ? என்பதற்கும், ஒரு தசாவின் கடைசிப் புத்தியானது எங்ஙனம், அடுத்துவரும் தசாவிற்குத் தோரணவாயிலாகிறது என்பதையும் விரிவாக அறிந்தகொண்டது பயனுள்ளதாக அமைந்ததல்லவா ? வாழ்க வளமுடன்.

    

Monday 21 April 2014

அழகு மலை , அழகர் மலை

வாராரு, வாராரு அழகர் வா….ராரு…………….!

    கன்னிப்பருவத்திலே, காயா மலர்கள் தொடுத்துச் சூடிக் கொடுத்தாள் சுடர் கொடி. மார்கழித் துயில் எழுந்து, முப்பது அமுதத் தமிழ் மழைபொழிந்துஎன்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தனோடு உற்றோம்என்று ஆத்ம சமர்பணம் அடைந்தாள் ஆண்டாள். “ கற்பூரம் நாறுமோ ? கமலப் பூ நாறுமோ ?” என்று காதலால் ஏங்கினாள், அவள். கனாவிலேயேவாரணம் சூழ வலம் வந்துநாரணன் நம்பியை பாணிகிரகணமே செய்து கொண்டுவிட்டாள்.

    “ அப்பா, அவர் என்னை வரச்சொல்லிவிட்டார்என்று சொல்லி மணமகள் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு, முத்துச் சிவிகையேறி திருவரங்கத்துப் புக்கத்திற்கே போனாள் அவள். அங்கே அரங்கனின் திருமார்பு சேர்ந்தாள் என்கிறது சம்மிரதாயக் கதை.

    காலஞ்சென்ற பேறிஞர் பி ஸ்ரீ அவர்களோ, கதை முடியவில்லை, அவள் மெய்ப்பொருள் கண்டு ஊர் திரும்பினாள் என்கிறார். என்ன மெய்ப்பொருள் கண்டாள், அரங்கத்திலே ? “ மானுட உடல்,பொந்தியுடன் வானுலகம் புக முடியாதுஎனக்கிற விஞ்ஞானத்தைத்தான் உணர்ந்தாள்.

    “என்னைக் கொண்டுபோய் பிருந்தாவனத்திலே விட்டுவிடுங்களேன், காளிங்க நர்த்தனம் நடந்த கரையிலே போட்டுவிடுங்களேன்என்று கண்ணீர் வடித்தாள் கோதை. “ பசுக்கள் பிழைக்க மழை தடுத்துக் குடைபிடித்தானே, கண்ணன்அந்த கோவர்தன மலைக்கடியில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்களேன்என்று கேவுகிறாள்.

   வழியிலே வருகிறது ஓர் ஊர். வழியிலே வந்ததா ? , அல்லது அந்திம காலத்தில் தந்தையுடன் அங்கு வசித்தாளா ? தெரியாதுஇங்கே அந்தச் சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தையின் அதிஷ்டானம் உள்ளது. தந்தை தன் கடைசிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்றால், மகளும் அங்கேதானே கடைசிவரை வாழ்ந்திருக்க வேண்டும் ?

    இந்த ஊரிலோ கிளி கொஞ்சுகிறது. இயற்கை திருநடனம் புரிகிறது. மஞ்சும், மந்தியும் விருஷபாத்ரி மலைமேலே துள்ளிக் குதிக்கின்றன.

    காதலால் கசிந்துருகி, உடலும் உள்ளமும் சோர்ந்து கோதை இங்கே வந்ததும்,

செங்கட் கருமுகிலின் திருவுருப்போல மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள், தொடு பூஞ்சுனைகாள் ! சுனையில்
தங்கு செந்தாமரைகாள் ! எனக்கொருசரண்சாற்றுங்களேன்என வாய்விட்டுக் கதறியிருக்கிறாள்.

    அந்தமருதப் பொழிலணி மாலிருஞ்சோலைதான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, ஆனைகட்டிப் போரடித்த மதுரைக்கு அருகே உள்ள திருமாலிருஞ்சோலை எனும்  அழகர்கோவில் என வைணவம் பறைசாற்றுகிறது. எல்லாத் திருப்பதிகளுக்கும் இதுவே பிரதான க்ஷேத்திரம் என்று ஆழ்வார்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆழ்வார்களும் அழகர்மலை அழகனைத் தரிசித்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    தீர்த்த யாத்திரையாகத் தருமபுத்திரர் இங்கே வந்ததாக மகாபாரதம் சொல்கிறது. அந்தக் காலத்திலே அழகர்மலைக்கு விருஷபாத்ரி என்று பெயர் வழங்கியதாம். அர்சுனன் தீர்த்த யாத்திரை வந்ததாக ஆக்னேய புராணத்தில் செய்தி இருக்கிறது. மதுரையை ஹாலாஸ்ய க்ஷேத்திரம் என்றும். அதற்கு வடக்கே இருக்கிறது இந்தசுந்தர்ராஜர்  எழுந்தருளியுள்ளவிருஷபாத்ரிஎன்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    “ திருமாலின் திருமேனியாகவேமக்கள் இந்த மலையை வணங்கியதாகக் குறிப்பிடுகிறது பரிபாடல். கடைச்சங்ககாலத்தில், விளங்கிய பாண்டியன் கடலுள் மாயந்த இளம்வழுதி எழுதிய இரு பாடல்கள் பரிபாடலிலும், மற்ற பாடல்கள் புறநானூற்றிலும் இடம்பெற்றுள்ளன. பரிபாடலில் இவன் திருமாலிருஞ்சோலையின் சிறப்பையும், அங்கே எழுந்தருளியுள்ள கண்ணபிரானபலதேவர் இருவரின் பெருமைகளையும் பாடிச் சிறப்பித்திருக்கிறான்.

    ‘ அந்தக் குன்றோ திருமலை ஒத்தது, தன்னைக் கண்டோருடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடையதுஎன்று தலைமீது தூக்கிக் கொண்டாடுகிற இளம்பெரு, வழுதி, ‘சென்றேனும், கண்டேனும், திசைநோக்கியேனும்அதை அனைவரும் குடும்பத்துடன்வழிபடுங்கள்என்று உலகோரை நோக்கிக் கூறுகிறான்.

    இந்த ஊர் திருமாலைத் தரிசித்து வந்த அந்தணன் எதிரே மதுரைக்கு வந்துகொண்டிருந்த கோவலன்கண்ணகிகவுந்தியடிகளிடம், இம் மலை பற்றிய செய்திகளை உரைத்ததாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இடது பக்கமாக உள்ள காட்டின் வழியாகச் சென்றால், திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி உள்ளது. அந்த வழியில் புண்ணிய சிரவணம், பவகாரணி, இடசித்தி என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. மலையை மும்முறை வலம் வந்து, சிலம்பாற்றங் கரையிலுள்ள பெண் தெய்வம்இம்மைக்கும், மறுமைக்கும், இம்மை மறுமை இரண்டிற்கும் அன்றி எக்காலத்திற்கும்பேரின்பம் தருவது எது ? எனக் கேட்கும் கேள்விக்கு விடையளித்தால், அங்குள்ள சுரங்கப் பாதையைத் திறந்துவிடும். அதன் வழியாகச்சென்றால் அங்கே இரட்டைக் கதவுடைய வாசலில் நிற்கும் தெய்வமானதுஅழியாத இன்பமேது ? – எனக் கேட்கும், அதற்கும் சரியான பதில் அளிக்க அந்தப் பெண்தெய்வமே, முன் கண்ட மூன்று தீர்த்தங்களுக்கு அழைத்துச் செல்லும். பிறகு அவற்றில் நீராடி, திருமாலின் கருடக்கொடி மரத்தை தரிசித்துப் பிறவிப் பிணியறுத்து மதுரைக்குச் செல்லலாம்என அந்தணன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகு பெருமைகளைக் கொண்ட, திருமாலிருஞ்சோலை எனும் அழகர்மலை, மதுரைக்கு வடக்கே  25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மலையடிவாரத்தில் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர் சூழ மிகப்பெரிய கோவிலில் கள்ளழகர் எனும் திருமால் குடிகொண்டிருக்கிறார்.  

    அழகர்மலைக்கு உத்யான சைனம், சோலைமலை, மாலிரும் குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி, இடபகிரி என்றெல்லாம் முன்பு பெயர்கள் வழங்கியதுண்டு. குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நீலமலை எனப் பெரியாழ்வார்  பலபெயர்களில் அழைக்கிறார். மற்ற மலைகளொடு ஒப்பிடும்போது, அவை பசுவைப் போலவும், இது காளையைப் போலவும் காட்சியளிப்பதால் விருஷபாத்ரி எனப் பெயர் பெற்றதாக சூதரிஷி விவரிக்கிறார். மலைச் சிகரத்திலே நாராயணனுடைய பாதச் சிலம்பிலிருந்து பெருகி வருவதே சிலம்பாறு ஆகும். இச் சிலம்பாறு கங்கையைவிடப் புனிதமானது. இங்குதான் மலையத்துவஜன், மகன் சந்திர கேதுவிடம் இராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு, சுந்தர்ராஜரை தரிசித்து, துறவு மேற்கொண்டு, முக்தியடைந்தானாம்.

    சந்திரகேதுவின் மகன் குப்த பாண்டியன், குழந்தைக்காக அழகரை வேண்ட, அவன் தவத்தை மெச்சிபார்வதியே உனக்கு மகளாகப் பிறப்பாள்என்று வரம் தந்தாராம் இறைவன். அப்படிப் பிறந்தவளே தடாதகைப் பிராட்டி எனும் மதுரை மீனாட்சி அம்மை.

   கிழக்குமேற்காக பத்து மைல் நீளத்தில், ஆயிரம் அடி உயரமுமாகப் படுத்துக்கிடக்கிறது இப் பெரியமலை.  இக்கோயில், கோட்டைகளை பாண்டியருக்குப் பிறகு வந்த நாயக்க வம்சத்தினர் பேணிப் பாதுகாத்தனர்.

   இக்கோவில் இரண்டு கோட்டைகளுக்குள் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இன்னுமொரு மதில் தெரியும் அதனுள் அழகரின் அழகிய கோபுரம் தெரியும். கோவில் உள்ள இதுதான் இராவணன்கோட்டை, வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டையாகும். இராவணன் கோட்டைக்கு, இரண்யன் வாசல் மற்றும் இராயகோபுர வாசல் என இரு வாசல்கள் உள்ளன. இராயகோபுரம் பாதி கூட எழாமல் சிதைந்து நிற்கிறது.

    அதை ஒட்டிச்செல்வதே மலைக்குச் செல்லும் வழி, தேவஸ்தான மினி பஸ்கள் பழமுதிர்ச் சோலை முருகன்கோவில் வரைசெல்கின்றன. மேலே, நூபுரகங்கை வரை இச் சாலை நீள்கிறது. நூறு படிகள் ஏறிச்சென்றால் ரம்யமான ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதுதான் மாதவி மண்டபம். படி நெடுக வானரங்களின் வாலாட்டம்தான். இந்த அழகினை, நான் கவிதையாக வடித்தபோது---     

 “இயற்கையெழில் கொஞ்சுமந்த அழகர் மலைசென்றால்,
இதயமதில் யின்பம் பொங்கும், அழகு நெஞ்சையள்ளும்
மலையடியிற் நிற்குமெழில் மாலவனின் கோவில்,
மலைமேலே முருகனுக்குக் கோவிலுண்டு காவில்.
 
  வளைந்து மலையிற் செல்லுகின்ற, வனப்புமிக்கப் பாதை,
  வனக் குயில்கள் பாடுமிசை வந்து சேரும் காதை
  வழி யெங்கும் வானரங்கள் தாவித்தாவி ஓடும்,
  வரும் பக்தர் கைப்பொருளைப் பறித்தே விளையாடும்.

  தாயான ராக்காயி அம்மன் புகழ் பாடி,
  தூயவளின் துணைதேடி வருவாரே ஓடி,
  நூபுர கங்கையெனும் சுனைத் தீர்த்தமாடி,
  நோய்நொடிகள் தீருகின்ற பக்தர் பலகோடி.

  மாலவனின் அருள்வெள்ளம் மலையடியில் ஓடும்,
  வேலவனின் அருள் உள்ளம் சோலையிலே கூடும்,
  இயற்கையன்னை யெழில்மனமோ என்றும் கூத்தாடும்,
  இவற்றையெலாம் காணும் உள்ளம் இன்பத்தால் பாடும்.”

    மாதவி மண்டபத்தின் நடுவிலுள்ள வெற்றிடத்தில்தான் நாழிக்கிணறு பொன்ற அமைப்பு உள்ளது. அதனருகே கோமுகி வழியாகவும் நூபுர கங்கையின் புனித நீர் வருகிறது. இதிலும் பக்தர்கள் குளித்து, பாவம் போக்கிப் பரவசமடைகின்றனர். மாதவி மண்டபத்தில்தான் சோலைமலையின் அதிதேவதையான இராக்காயி அம்மன் வீற்றிருக்கிறாள். இவள் ஆங்கிரஸ முனிவரின் மகள் என்கின்றனர். மலைக்கு வரும் வழியிலேயே அனுமார், கருடன் ஆகியோரின் தீர்த்தமும், கோவிலும் உள்ளன. பாண்டவ தீர்த்தமும் கொவிலும் இருக்கிறது. இக்கோவிலில் தோசைப் பிரசாதம் பிரசத்திபெற்றதாகும்.

    மலைக்குச் செல்லும் வழிக்குப் பக்கவாட்டில் இருக்கும் நந்தவனத்தில்தான் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரின் அதிஷ்டான மண்டபம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வடக்குப் பிரகாரத்தில் ஆண்டாளின் சந்நிதி உள்ளது. பங்குனி மாதத்தில் கள்ளழகர் திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். ஐந்து நாள் உற்சவம். ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஸ்ரீஆண்டாள் ஆகிய நால்வருடனும் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார் அழகர்.

    இராவணன் வாசல் வழியாக உள்ளே நுழைகிறோம். அங்கே பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை தரிசிக்கிறோம். அங்கிருக்கும் கதவுகளைத்தான் கருப்பண்ண சாமியாக பாவித்து, பூஜைகள் நடக்கின்றன. இவர் கள்ளர் இன மக்களின் குலதெய்வம், அழகர்கோவிலுக்குக் காவல்தெய்வம் ஆவார். நெல்லைச் சீமையை அடக்கிவிட்டு வெற்றிக் களிப்போடு வந்த ஆங்கிலேய தளபதி ஹீராவின் படை, இந்த மாவீரர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடுபட்டு புறமுதுகுகாட்டி ஓடியதாக வரலாறு உண்டு. பதினெட்டாம்படி இவர்களுக்குச் சத்தியப் படியாகும். இங்கு பொய்ச் சத்தியம் செய்தால் கருப்பண்ணசாமி பழிவாங்கிவிடுவார் என நம்புகின்றனர்.

    அழகர் சித்திரையில் மீனாட்சி திருமணத்திற்குச் செல்லுமுன் அவர் அணிந்திருக்கும் நகைப் பட்டியலை கருப்பண்ணசாமியிடம் படித்துக் காட்டியும் ,அதேபோல் திருவிழா முடிந்து திரும்பும்போது சரிபார்ப்பதும் கருப்பண்ணசாமியே ஆவார்.

    கருப்பண்ணசாமியை வணங்கி விட்டு வண்டிவாசல் வழியாக உள் நுழைந்துயதிராஜன் முற்றத்தைக் கடந்து கோடைத்திருநாள் மண்டபத்தைத் தாண்டி மேற்கே மணவாள மாமுனிகள், உடையவர், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சந்நிதிகளை தரிசிக்கிறோம்பின் தொண்டைமான் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, தங்கக் கொடி மரத்தை வணங்குகிறோம். அடுத்து ஆயிரங்கால் மண்டபம், இங்கேயுள்ள யாளிகளின் வாய்க்குள் கற்கள் உருளுகின்றன.

    அடுத்து, சூரியன் வாசல் வழியாக இரண்டாம் பிரகாரம் அடைந்து மூல ஸ்தானத்துக்கு மேலுள்ள சோமகந்த விமானத்தைத் தரிசிக்கிறோம். பின், துவார பாலகர்களைத் தாண்டி மூலவர் சந்நிதி அடைகிறோம்.  

    மூலவருக்கு ஸ்ரீ பரமஸ்வாமி என்று பெயர். பஞ்சாயதங்களுடனும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கம்பீர புருஷராகக் காட்சியளிக்கிறார். அவர் கையிலிருக்கும் சக்ராயுதம் புறப்படத் தாயாராக இருப்பது போல் காட்சியளிக்கிறது. இதேபோல் வேறெங்கும் இல்லை என அர்ச்சகர் குறிப்பிடுகிறார். உற்சவரோ பிரசித்திபெற்ற அழகர். பின்னர் கல்யாண சுந்தரவல்லித் தாயார், ஆண்டாள் சந்நிதி மற்றும் பரிவார தேவதைகளைத்  தரிசித்து வெளிவருகிறோம்.
    சுதர்சனருக்கு தனி சந்நிதியே இருக்கிறது. பதினாறு கைகளிலும் பதினாறு வகை ஆதங்களேந்தி, மூன்று கண்களிலும் கனல்தெரிக்க, பயங்கரமான நீண்ட பற்களையுடைய இவர், ஷட்கோண யந்திரத்தின் மீது இருக்கிறார். பின்புறம் நரசிம்மர் காட்சியளிக்கிறார். விஷவக்சேனர், பைரவர் சந்நிதிகளும் உண்டு.

    திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகருக்கு உரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாளாகும். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மதுரை மீனாட்சி திருவிழா மாசிமாதத்திலும், அழகர் திருவிழா சித்திரையிலும் நடந்துவந்தன. இந்த இரு திருவிழாக்களையும் ஒரே மாதத்தில் நடக்க வைத்தவர் நாயக்க மன்னனே.

    மதுரை மக்கள்  எதிர்கொண்டு அவரை வரவேற்பதைத்தான் கள்ளழகர் எதிர்சேவை எனப்படுகிறது. இரவு முழுக்க மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளி பக்தகோடிகளுக்குப் பரவச காட்சியளித்து மகிழவைக்கிறார். வைகைக் கரை வழியாகவே வண்டியூர் சென்று இரவு தங்கி, காலையில் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சமளிப்பார். அன்றிரவு  இராமராயர் மணடகப்படியில் தசாவதார சேவையில் காட்சியளித்து, பிறகு ஆனந்த ராயர் பல்லக்கில் இராஜாங்கக் கோலத்தில் புறப்பட்டு மைசூர் மண்டபத்திற்கு வந்து அங்கே திரும்ப கள்ளழகர் கோலத்திற்கு மாறி புஷ்பப் பல்லக்கில் சேவை சாதித்துவிட்டு மறுநாள் அப்பன் திருப்பதி வழியாக சோலைமலையை அடைவார்.

    அவர் ஆற்றிலே இருக்கும் மூன்று நாட்களும், இரவு பகல் பாராமல் மதுரை விழாக்கோலம் பூணும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து பக்தி வெள்ளத்தில் மிதந்து தங்கள் பிறவிப் பயனை அடைவர் என்றால் மிகையாகாது.


ஜோதிட கலாநிதிஎஸ், விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).

செல் – 94888 62923, 9789101742.