Search This Blog

Sunday 2 December 2012

கடக ராசியின் குணயியல்புகள்





கடக ராசியின் குணயியல்புகள்
      

      கடக  ராசியின்  பாகையளவு  90 பாகை முதல் 120 வரையிலான பாகையள வாகும்.இது ஒரு சர ராசி,நீர்,இரட்டைப்படை மற்றும் பெண் ராசியாகும். இதன் அதிபதி சந்திரன் ஆவார். இந்த ராசியில் குரு 5˚ யில் உச்சமாகிறார்.செவ்வாய் 28˚ யில்  நீசம் பெறுகிறார்.நண்டு இதன் அடையாளமாகும். சூரியனுக்கு நட்பும்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி ஆகியோருக்கு பகைராசியாகும்.
      
      கடக ராசி ஜாதகர்களை ஆசிரியர்கள்,போதகர்கள் என அழைக்கப்படுபவர்கள். ஏனெனில் அவர்கள்  மக்களை அரவணைத்துச் செல்லக்கூடியவர்கள்.பொதுக்கூட்டங்களில் பேசக்கூடிய திறமைமிக்கவர்கள். குருட்டுத்தனமான உணர்ச்சிகளும், மகிழ்ச்சியைக் கூட்டும் நிகழ்வுகளில் ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பர். நன்கு பேசுபவர்களாகவும்,நன் மதிப்புடையவர்களாகவும், கொள்கைப் பிடிப்புள்வர்களாகவும்  இருப்பர்.  இவர்கள்  தங்கள்  மீதான விமர்சனங்களையும், மற்றவர்களின் பரிகசிப்பையும் விரும்பமாட்டார்கள். உடலளவில்  ஏற்படும்  அபாயங்களை  எதிர்கொள்ளும்  துணிச்சல் இவர்களிடம் இருக்காது. ஆனால்  மனோவலிமை  உடையவர்கள். பாசமிக்கவர்கள்,உண்மையானவர்கள், எதற்கும் அசைந்து கொடுக்காதவர்கள் மற்றும் எதையும்  தீர  ஆலோசித்து  முடிவெடுப்பவர்கள். கோபம் மிக்க இவர்களின் கோபமானது வந்த சுவடு தெரியாமல் மறைந்து  விடும். மற்றவர்களைக் கவரும் திறமையற்றவர்கள். எப்போதும்  கற்பனை உலகிலேயே  சஞ்சரித்துக்கொண்டிருப்பதாலும், மிகுந்த உணச்ச்சிகளால் உந்த படுபவர் களாவதால் மன அமைதி இழந்து சுற்றித் திரிபவர்களாகவும் இருப்பர். அதிர்ஷ்ட சூழ்நிலைகளைத் தவறவிடுபவர்களானாலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல அதிர்ஷ்டக்கார்களாகத் திகழ்வர். இவர்களின் உடற்கட்டானது  சுமாரான  உயரமும், குண்டான உடலும் கொண்டது. வட்டமுகம், சப்பைமூக்கு,இரட்டைநாடி,அகன்றமார்பு,சிறிய கைகளும்,பாதங்களும் உடையவர்களாக இருப்பர்.
      
      கடகத்தார் மற்றத்தையும், பயணங்களையும், புதுமைகளையும்  விரும்பக் கூடியவர்கள். சுற்றத்தாரோடும்,குடும்பத்தாரோடும் மிகவும் பாசத்தோடு இருப்பவர்கள்.பொது வாழ்வில்  தங்களை  ஈடுபடுத்திக்  கொள்வதில்   மிக்க   ஆர்வமுடையவர்கள்.  கருணையுள்ளவர்கள், மாற்றமுடையவர்கள்  மற்றும்  பொறுமையற்றவர்கள்.  உணர்ச்சி மிக்கவர்கள்.  காமம்  மிக்கவர்கள், காதலுணர்வு  மிக்கவர்கள். உண்மையான   உணர்வுடையவர்கள்   மற்றும்  பொறுப்பு மிக்கவர்களான   இவர்கள்  நிலையற்ற மனமும் உடையவர்கள்.. இவர்கள்  ஓரிடத்திலிருந்து  பெருந்தொகையைப்  பெறுவதை விட,  பல  இடங்களிலிருந்து சிறுசிறு தொகைகளை அடைவதையே விரும்புவர். இளமையில் மோசமான உடல் நிலையோடு இருந்தாலும்,  வயது  ஏறயேற  ஆரோக்கியத்திற்  முன்னேற்றமிருக்கும். இவர்கள் நேர்மையான வியாபாரிகளாக இருக்கத் தகுதியானவர்கள். தங்களது கடுமையான உழைப்பின்  மூலமாக  சொத்துக்களைச்  சேர்ப்பவர்கள்.  நல்ல கணவர்கள்,மனைவிகள் கடகத்திற் பிறந்தவர்களாகவே இருப்பர். தங்களது துணைக்கு எப்போதும் உண்மையானவர்களாகவும், மணவாழ்க்கையை  தெய்வீகமாகக்  கருதுபவர்களாகவும் தங்கள் குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருப்பர். நுரையீரல்,தொண்டை,நரம்பு சம்பந்தமான நோய்கள்  காய்ச்சல்,இருமல்,பயந்தநிலை,ஹிஸ்டீரியா,மார்பில் கட்டி போன்ற நோய்களும் வரக் கூடும்.
     
      பணவிஷயத்தில் நேர்மையானவர்கள்,  அனாவசியச்  செலவுகள்  செய்ய மாட்டார்கள்.பிறரிடமும் நேர்மையை விரும்புவார்கள்.நேர்மையற்றவர்களை வெறுப்பவர்கள்.பண விவகாரங்களைப்  பொறுத்தவரை  அதிர்ஷ்டசாலிகள். பாச மிக்கவர்கள்,காதல் விவகாரங்களில் உண்மையானவர்கள் ஆனால் அவற்றை வெளியிடுவதில்  திறமையற்ற வர்களாக இருப்பர். பெண்கள்  நல்ல தாயாக  இருப்பர். விருந்தோம்பலில்  சிறந்தவர்கள். கடகத்தார்  வணிக  நோக்கம்   கொண்டவர்கள்.  நீர் சம்பந்தமான தொழில்களான முத்து,உப்பு,மீன் போன்றவற்றையும், படகோட்டிகளாகவும், கப்பற்படை, நீர்மூழ்கிக் கப்பல்,  கப்பல்  துறைகள், இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் ஈடுபடலாம். மேலும் இவர்கள் சிறந்த சமையற்கலை வல்லுனராகவும், உணவக மேலாளர், மேடைப்  பேச்சாளர்,மத போதகர் களாகவும், காண்டிராக்டர் மற்றும் விவசாயத் துறைகளிலும் ஈடுபடலாம்.
     
      அதிரிஷ்ட நாட்கள் – சந்தோஷத்திற்கும்,குதூகலத்திற்கும் அனுகூலமான நாட்கள் ஞாயிறும்,வெள்ளியுமாகும்.வெற்றி முயற்சிகளுக்குத் திங்களும்,வெற்றிக்கு செவ்வாய் வியாழனும்,பயணத்திற்கும்,பங்கு முதலீட்டுக்கு புதனும் நல்ல நாட்களாகும். தடை, தாமதம், கஷ்டம், நஷ்டம், வழக்கு  விவகாரம் என மோசமான விழைவுகள் தரும் நாள் சனியாகும். வெண்மை,க்ரீம்,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நீலமும்,பச்சையும் தவிர்க்கப் படவேண்டிய  நிறங்களாகும். ஒத்துப்போகும்  எண்கள் 4,6.கவரும் எண்கள் 8.1,அனுகூலமான எண்கள் 2,7,9 ம் ,தவிர்க்கப்பட  வேண்டிய  எண்கள் 3 மற்றும் 5 ம் ஆகும்.  நாலாவது  விரலில், பூஜிக்கப்பட்ட,  வெள்ளியில் முத்துப் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. சந்திரன் பாதிக்கப் பட்டிருந்தால் முத்தோடு,மஞ்சள் புஷ்பராகம் அணிவது உசிதம்.வளர்பிறை நாட்களில் அணிவது உத்தமம்.