Search This Blog

Monday 27 July 2015

சந்திரனின் கோசார பலன்கள்





 சந்திரனின் கோசார பலன்கள்



 

       ஜென்ம இராசிக்கு சந்திரன் வரும் போது -- நல்ல உடல் ஆரோக்கியமும், உயர்ந்த போகமும், வாகன யோகமும், பெரியவர்களின் பாசமும், உயர்பதவிகளும், இராஜயோகமும், மனத்திருப்தியும், பணவரவும், ஒளி மிக்க உடல் ஆகியவை ஏற்படும்.
     
சாத்திர ஆராய்ச்சியும், அதில் நல்ல தேர்ச்சியும், புத்தி சாதுர்யமும் வாக்குவன்மையும் ஏற்படும். வேளைக்கு நல்ல வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பாக்கிய விருத்தி உண்டாகும். வாசனை மிக்க திரவியங்கள் சேரும்.
..
      கோசார சந்திரன் சந்திர இராசியில் இருந்து 1, 3, 6, 7, 10 மற்றும் 11 ஆம் இடங்களில் வரும்போது அனுகூலமான பலன்களைத் தருவாள். மற்ற இடங்களில் அவள் அசுப்பலன்களைத் தருவாள்.
      இராசிக்கு 2 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும் போது ஓரளவு தனலாபம் இருக்கும். ஆனால், மனஅழுத்தத்தையும், கௌரவக்குறைவையும், மேற்கொள்ளும் காரியங்களில் தடைகளையும், தண்டச் செலவுகளையும், வழக்கு விவகாரங்களையும் தருவாள். ஆனால், பலதீபிகாவிலும், ஜாதக தேசமார்க்கத்திலும் பணி இழப்பைத் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
       பண்டைய பலநூல்களின் தொகுப்பின்படி போஜன சுகம், தனலாபம், குடும்ப நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களுக்கு நோயால் தொல்லைகள் எழும். சிறைவாசம், துன்பம் போன்றவை ஏற்படும், மனக்கஷ்டம் அதிகமாகும்.கருப்பவதி இறக்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் தோல்விகள் காணும். மகிழ்ச்சி குறையும், கல்வியில் தோற்பர், வீணபயம், மான கௌரவ பங்கமும் ஏற்படும். வாக்குவாதம், கண் நோய் ஏற்படுத்துவாள்.
     இராசிக்கு 3 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும் போது வெற்றியையும், தனலாபத்தையும், நட்பையும், எதிர்பாலர்பால் ஈர்ப்பையும், படைத்தளத்தில் வெல்வதையும், மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் சந்தோஷத்தையும் குறிகாட்டுகிறது.
     பண்டைய பலநூல்களின் தொகுப்பின்படி மனத்தெம்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். அனைத்து வகையிலும் சுகமும் நிம்மதியும் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். சந்ததிகள் மேல் ஆர்வம் ஏற்படும். புத்தி தெளிவு பெறும். தன்னம்பிக்கை கூடும். மனைவியின் ஒத்துழைப்பு இருக்கும். சிற்றின்ப சுகமும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். தனலாபம் பெருகும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் உண்டாகும். சத்ரு ஜெயமும் உண்டாகும். மனதில் தைரியமும். புதிய உற்சாகமும் உண்டாகும்.
       ஜன்ம இராசிக்கு 4 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது,  பயத்தைத் தருகிறது. குறைவான கஷ்டத்துடன் கூடிய சோகத்தையும், எல்லாவற்றையும், எல்லோரையும் சந்தேகிக்கும் குணத்தையும், பண இழப்பையும், வியாதிகளையும், மனக்கவலைகளையும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையையும் அளிக்கிறது.
       பண்டைய பல நூல்களின் தொகுப்பின்படி வீட்டில் நிம்மதி குறைவதும், பொருள் களவு போவதும், வயிற்று நோய், வயிற்றுப் போக்கு ஆகிய உபாதைகள்  ஆகியவை உண்டாகும். தாய்க்கு உடல் நலம் கெடும். வாகன சுகம் குறையும். எல்லாவற்றிலும் ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும். தனநாசம் ஆக தரித்திர நிலை ஏற்படும். தூக்கம் குறைதலும், எல்லாக் காரியங்களும் தடைப்படுதலும், நீரிலே ஆபத்தும் உண்டாகலாம். நான்கில் சந்திரன் எல்லா வகையிலும் துன்பமே தருவான்.


       ஜன்ம இராசிக்கு 5 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது,  கவலைகள், காய்ச்சல். மனக்குழப்பம், வெற்றியின்மை, பயணங்களில் தடங்கல்கள், செய்யும் காரியங்களில் தடைகள், பணம் இழப்பு அல்லது அதிகரிக்கும் செலவுகள், அஜீரணம்,
மனக்கலக்கம் ஆகியவை ஏற்படும். ஜாதகர் பணிவுடையவராக இருப்பார்.
       பண்டைய பல நூல்களின் தொகுப்பின்படி குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். புத்திக் கலக்கமும், பகையும் ஏற்படும். மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். எவ்வளவு சிறப்பாகத் திறமையுடன் செயல்பட்டாலும் அறிவற்றவர் என்ற பெயரே மிஞ்சும்.  கவலை அதிகரிக்கும். சோகம், மனக்கஷ்டம் ஆகியவை உண்டாகும். பிறருடன் பகை ஏற்பட்டு, கீழ்நிலைக்குத் தள்ளப்படலாம். நோய்பற்றிய வருத்தமும், அதிர்ச்சிகள் பலவும் ஏற்படலாம். பயணத்தின் போது தடங்கல் அல்லது விபத்துக்கள் நிகழலாம். பணவிரயம் ஏற்படலாம். அஜீரண நோய், அந்தஸ்துக் குறைதல் ஆகியவை ஏற்படலாம். மன அமைதி இன்மை, தன் கைவசமுள்ள பொருள்கள் காணாமல் போதல் ஆகியவையும் உண்டாகும்.

       ஜன்ம இராசிக்கு 6 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, சொத்து லாபம், இன்பம், பணத்தை அழித்தல், நல்ல ஆரோக்கியம், மனம் விரும்பிய பொருட்களை அடைதல், நல்ல நண்பர்களின் நட்புக் கிடைத்தல், சந்தோஷம் ஏற்படுதல் ஆகியவை ஆகும். 
      பண்டைய பல நூல்களின் தொகுப்பின்படி பயண சுகம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் பணிவர். எல்லா நன்மைகளும் உண்டாகும். சந்திரன் தேய்பிறையாக ஆறில் வரும் போது மேலும் மிகுதியாக நன்மையே ஏற்படும்.  தனவரவு கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். விரும்பியதெல்லாம் கிட்டும். பெயரும், புகழும் ஓங்கும். புதுப் பெண்களின் சினேகமும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தனக்கென்று சொந்த வீடும் கிடைக்கும்.  
       ஜன்ம இராசிக்கு 7 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, காமப் பேரின்பம், நல்ல வருமானம், சிறப்பான படுக்கையறை சுகங்கள், சுவையான நல்வுணவு, வாகனயோகம், இன்பச் சுற்றுலாப் பயணங்கள், சிறுபயணங்கள், மதிப்பு, மரியாதை உயர்தல் ஆகியவை ஆகும்.
       பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி பெண் சுகம் கூடும், சாத்திரப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுத் தெளிவடைதல், பல வழிகளிலும் பணம் வரும், பெரிய மனிதன் என்ற பெயர் எடுப்பர், ஒரு காதலி ஏற்பட்டு மனமகிழ்ச்சி ஏற்படும்.  பேச்சில் இனிமையும், சாதுர்யமான பேச்சாலும் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். எல்லாவிதத்திலும் பூரண சுகம் ஏற்படும். அந்தஸ்தும் உயரும். உறவினர் உதவி கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். மனைவி மூலமாக நன்மைகள் உண்டாகும். 7 இல் சந்திரன் இனியவனே. அதனால் நன்மைகளே ஏற்படும்.

       ஜன்ம இராசிக்கு 8 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, சந்திராஷ்டமம் என அழைக்கப்படுகிறது. ஏறுக்குமாறான நிகழ்வுகளும், கஷ்டங்களைக் கண்டு பயத்தையும், பண இழப்பையும் தருகிறது. கோபத்தையும், நோய்களையும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள், கவலை, ஏக்கம், நிம்மதி இன்மை, தவிப்பு, பதட்டம், பரபரப்பு, மன உளைச்சல் ஆகியவற்றைத் தரும்.

      பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி பலவகையிலும் உடல் நலம் கெடும். மூல, காச நோய்கள் உண்டாகும். கோர்ட்டு வழக்கு, அதில் தோல்வி அடைதல், சிறைவாசம் ஆகியவை நேரும். களவு, திருட்டுத் தொழிலில் ஈடுபடுவர். மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிப்பர். பிறருக்குத் தீமை நினைப்பர். பணிவின்மை காரணமாக இன்னல் உறுவர். நியாயத்திற்குப் புறம்பாக நடந்து கொள்வர். வயிற்றுப் போக்கு ஏற்படலாம். வாகன சுகம் குறையும். மனைவியின் கலகத்தால் நெருங்கிய உறவுகளைப் பிரிய நேரும். நினைத்தபடி எதுவும் நடக்காமல் எல்லாம் நேர் மாறாகவே நடக்கும். திடீர் நடுக்கமும், பயமும் ஏற்படும். மாரக தசை நடந்தால் மரணமும் ஏற்படலாம். அஜீரணம், பித்துப்பிடித்தல், சில்லறைச் சண்டைகள், சர்ப்ப தோஷத்தால் கண்டம் ஆகியவை ஏற்படும்.

       ஜன்ம இராசிக்கு 9 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, தளர்ச்சி, அசதி, பணம் இழப்பு, எதிர்பாராத செலவுகள், பகைவர்களால் தொல்லை, மனவேதனை, நெஞ்சு வலி, பொதுவான பலவீனம், கௌரவக் குறைவு, சிறைப்படல் மற்றும் வநிறு சம்பந்தமான உபாதைகள் ஆகும்.
       பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி (சோதிடக் களஞ்சியம், பெரியவருஷாதி நூல், புலிப்பாணி300, சூடாமணி உள்ளமுடையான் மற்றும் பல வடமொழி நூல்கள்) தமிழ் ஜோதிட நூல்கள் நன்மையான பலன்களையே கூறுகின்றன. பாக்கிய விருத்தி, தெய்வபக்தி, தெய்வ நம்பிக்கை, மனைவி கருத்தரித்தல், குழந்தைப் பிறப்பு, காம இச்சை, புகழ், புண்ணிய காரிய ஈடுபாடு, கோவில், குளப்பணிகள், வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள், சுகம், சந்தோஷம், உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். ஆனால், வட மொழி நூல்கள் அசுப பலன்களைக் குறிப்பிடுகின்றன. நடுவில், சுமையும் ஏற்படும். இருப்பினும் சமாளிக்கப்பட்டு நிகர நற்பலன்களே ஏற்படும் எனக் கொள்ளவேண்டும்.

       ஜன்ம இராசிக்கு 10 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, ஜாதகருக்கு சந்தோஷ தருணங்களாக அமையும், விரும்பிய பொருட்களை அடைவார், தனலாபம் கிடைக்கும், கட்டளையிடும் அதிகார பதவி கிடைக்கும், இன்பம், அன்பளிப்பு, பரிசுகள் மற்றும் வீட்டில் வசதி வாய்ப்புக்கள் ஆகியவையும் கிடைக்கும்.

       பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி (சோதிடக் களஞ்சியம், பெரியவருஷாதி நூல், புலிப்பாணி300, சூடாமணி உள்ளமுடையான் மற்றும் பல வடமொழி நூல்கள்)
எல்லா காரியங்களும் அனுகூலமாகும், அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் உதவி, புதிய உத்தியோக வாய்ப்புக்கள், சாஸ்திர, மந்திர, தந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை உண்டாகும். சுயநம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். இந்திர போகம் உண்டாகும். இவர் பண்டிதராவார். புத்தி தெளிவு ஏற்படும். முன்னேற்ற வாய்ப்புக்கள் கதவைத் தட்டும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரைகள் செல்வர். புகழ் ஓங்கும். விருப்பங்கள் நிறைவேறும். பிறரைக் கட்டளை இடுகின்ற அதிகார பதவி கிடைக்கும். மரியாதையும் அந்தஸ்தும் உயரும். இவர் எல்லோரையும் பகைத்துக்கொள்வார். முடிவில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

       ஜன்ம இராசிக்கு 11 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, ஜாதகருக்கு பல முகாந்திரங்களில் இருந்தும் இலாபங்கள் அதிகரிக்கும். சந்தோஷமும், இன்பமும் ஏற்படும். திருமணம், நண்பர்களுடன் சந்திப்பு ஆகியவை ஏற்படும். நல்ல உணவு. நல்ஆரோக்கியம், முன்னேற்றம் ஏற்படும்.

       பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி ஜன்ம இராசிக்கு 11 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது (சோதிடக் களஞ்சியம், பெரியவருஷாதி நூல், புலிப்பாணி 300, சூடாமணி உள்ளமுடையான் மற்றும் பல வடமொழி நூல்கள்)  --- தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படுகிறது. விரும்பிய பெண்களால் இன்பமும், இலாபமும் ஏற்படும். மரணப் படுக்கையில் இருப்பினும், மாரக தசையில்லை எனில், நோய்நீங்கி சுகம் ஏற்படும். பிறருக்கு உபகாரம் செய்வர். கல்வியில் வெற்றி காண்பர். பெரும் சந்தோஷம் உண்டாகும். உணவருந்தும் போது ரசித்து, ருசித்து சாப்பிடுவதால்  பூரண திருப்தி ஏற்படும். பிரிந்துவிட்ட குடும்பத்தினருடன் சேருவதால் இன்பம் ஏற்படும்.
ஜன்ம இராசிக்கு 12 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது, கட்டுக் கடங்காத செலவுகள், பணயிழப்பு, நோய்வாய்ப்படுதல், இழப்பு, செலவுகள், காயம், விபத்து, நண்பர்கள், உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஆகியவை ஏற்படும்.
       பல பண்டைய  நூல்களின் தொகுப்பின்படி ஜன்ம இராசிக்கு 12 ஆம் இடத்தில் கோசார சந்திரன் வரும்போது (சோதிடக் களஞ்சியம், பெரியவருஷாதி நூல், புலிப்பாணி 300, சூடாமணி உள்ளமுடையான் மற்றும் பல வடமொழி நூல்கள்)  ---
       ஜாதகருக்கு மனதில் நிம்மதி கெடும். வம்படியாக சொந்தவீட்டை, ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். பெண்களால் பணவிரயம், பணமுடை ஆகியவை ஏற்படும். எல்லாவகையிலும் நஷ்டமும் உண்டாகும். வேளா வேளைக்கு சாப்பாடும் கிடைக்காது. கிடைக்கும் உணவும் வகையாகச் சுவையாக இருக்காது. தீயவழிகளில் பணம் செலவாகும். கோபத்தால் வம்பு தும்பை விலை கொடுத்து வாங்குவார். புத்தியும் மழுங்கி மூளையும் சரியாக வேலை செய்யாது. சோம்பேறித்தனம் அதிகமாகி, அதிர்ஷட்டக் குறைவு ஏற்படலாம். பொறாமை மேலிடும், தீமை அதிகமாகும், கவலை உண்டாகும். உறவுகளிடம் சண்டையோ, வெறுப்போ உண்டாகும். குறிக்கோளின்றிக் கண்டபடி திரியவும் நேரும்.


No comments:

Post a Comment