Search This Blog

Tuesday 31 May 2016

செவ்வாய் மகாதிசை பொதுப்பலன்கள்

செவ்வாய் மகாதிசை பொதுப்பலன்கள்
                      7 வருடங்கள்.


       பலம் மிக்க இராசியில் இடம்பெற்ற, பலமுள்ள செவ்வாயின் திசை நடக்கும் போது சகோதர வழி இலாபம் அதிகரிக்கும். அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்  அதிகாரிகளின் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் தோல்வி அடைவர். இராணுவத்தில் அல்லது சீருடைப் பணிகளில் சேருதல் அல்லது அங்கு பதவி உயர்வு அடைதல் ஆகியவை ஏற்படும். துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கையாளும் திறன் ஏற்படும். பூமி அல்லது சொத்து இலாபம், ஆபரணங்கள் கிடைத்தல் ஆகியவையும் ஏற்படும். தெற்குத் திசைப் பயணங்கள் அதிக ஆதாயம் கிடைக்கும். நல்ல ஆரோக்கியம், தைரியமான செயல்பாடுகள், முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். புகழ் கூடும்.

      பலமற்ற அல்லது பதிப்படைந்த செவ்வாய் ஆயின் ஜாதகர் கீழேவிழ நேரலாம், காயம், வெட்டு அல்லது புண்கள் ஏற்படலாம். இரத்தம் வீணாகும் அளவுக்கு விபத்து அல்லது அறுவை சிகிச்சை நடக்கலாம். சண்டையிடும் செயல்பாடுகளில் ஈடுபடலாம், முரட்டுத்தனம் அதிகரிக்கும். நீதிபதியின் முன் நிறுத்தப்படலாம்வழக்குகளில் தோல்வி, பிறரால் வெறுக்கப்படுதல், வியாபாரம் மற்றும் பிற வணிக சூழ்நிலைகளில் எதிரிகளால் நஷ்டமடைதல் ஆகியவை ஏற்படலாம். சகோதரர்களின் ஆரோக்கியம் குறையலாம். சொத்து இழப்பு, தீயால் மற்றும் பொருள்கள் உடைவதன் காரணமாக இழப்புக்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளால் மகிழ்ச்சி குறைதல். எலும்பு முறிவு, அப்பெண்டிசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

       செவ்வாய் இலக்னத்துக்கும் 8 ஆம் இடத்துக்கும் அதிபதியாகி, பார்வைகள் அவற்றின் மீதும் மற்றும் சூரியன், சந்திரன், 8 ஆம் அதிபதி ஆகியோரின் மீதும்  விழ, செவ்வாய் தனது தசா / புக்தி காலங்களில் நோய்களையும், விபத்தையும் அளிக்கவல்லது..

       செவ்வாய் மற்றும் அசுப கிரகங்கள் 4 மற்றும் 7 ஆம் இடத்தோடு தொடர்புற வாகனங்கள் மூலமாக விபத்து நிகழ வாய்ப்பு உண்டு.

       செவ்வாயும் கேதுவும் இணைந்திருக்க அல்லது வேறு தீயகிரக சேர்க்கை ஏற்பட முக்கிய உடற் பகுதிகளில், வீடுகளில், அதிபதிகள் மற்றும் காரகங்களில் பிரச்சனைகள் எழ தசாக்காலத்தில் பொருளாதார இழப்பும் அதன் காரணமாக வருமானக் குறைவும் ஏற்படும்.

செவ்வாய் திசை / செவ்வாய் புத்தி – 4 மாதங்கள் 27 நாட்கள்
      
       செவ்வாய் இருக்கும் இடத்தைப் பொருத்து சுய புக்தியில், காயங்கள், புண்களால் ஜாதகர் சிரமப்பட நேரும். செவ்வாய் தனது சுய வீடுகளான மேஷ, விருச்சிகத்தில் இருக்க ஒருவர் உயர்அதிகாரிகளால் பிரச்சனைகளுக்கு ஆளாவார். சிலருக்கு அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டினரால் கஷ்டங்கள் ஏற்படும். அற்பமான ஏவல் தொழில் செய்தலும் , பசுக் கூட்டம், நாய் இவை கடித்தலும், சித்திரை மாதத்தில் வெற்றி பெற்ற அரசரால் பயம் ஏற்படும். கார்த்திகை மாதத்தில் நீசரால் வெட்டும், குத்தும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஆன நல்லுறவு கெடும் அல்லது கோபதாபங்களால் பிரச்சனைகள் எழும். திடீர் தாக்குதல்களால் அபாயம், தீயோர் சவகாசம் மற்றும் பணயிழப்புகள் ஆகியவை ஏற்படும். அதிக உஷ்ணம் மற்றும் பித்தம் காரணமாக நோய்களும், புண்களால் தொல்லையும், சகோதரர்களைப்  பிரிதலும்  ஏற்படும். எதிரிகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், தீ மற்றும் திருடர்களால் தொல்லைகள் ஏற்படுதல். தனலாபம், பூமிலாபம் மற்றும் வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.

இராகு புக்தி – 1 18 நாட்கள்

       இராகு இடம்பெறும் பாவத்தைப் பொருத்து ஒருவர் விஷ பாதிப்புகளால் இன்னலுறுவார். அரசாள்பவர்களால், கொள்ளையர்களால், ஆயுதத்தால், நெருப்பால், எதிரிகளால் அபாயம் மற்றும் இழப்பும் ஏற்படும். வயிறு, கண்களில், தலையில் உபாதைகள் ஏற்படலாம். வெளிநாட்டுக்குப் பயணம், ஊழல் விவகாரங்கள், பணயிழப்பு, மனைவிக்கு உடல் நலக்குறைவு, கீழே விழுவதால் அபாயம். வழக்கு விவகாரங்கள். இடம், வீடு மாற்றம். தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 11 மா 18 நாட்கள்

       ஜாதகர் பக்தி மிக்கவராகவும், மத ஆர்வம் உள்ளவராகவும் இருப்பார். மகிழ்ச்சிகரமான விழாக்களிலும், மதத் தலைவர்களின் மூலமான ஆதாயங்களையும் அடைவர். புத்திர பாக்கியமும், புதிய நண்பர்களும் ஏற்படும். தீரச் செயல்களைச் செய்வர். அதிகார பதவியில் உள்ளவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவர். தனலாபம், உயரிய கௌரவம், மதிப்பு, மரியாதை மற்றும் சந்தோஷம் கிடைக்கும். எதிரிகளின் மூலமாக பணம் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பகை ஏற்படும். வசிக்கும் இடத்திலேயும், அதற்குத் தொலைவிலும் எதிரிகள் உருவாவர்.

       புத்தியின் முல் பாதியில், தீயபலன்கள் ஏற்பட்டாலும், பிற்பகுதியில் மேலே சொல்லியுள்ளபடி அதிர்ஷ்டம் உண்டாகும்.     

சனி புக்தி – 1 1 மா 9 நாட்கள்

       பெரியவர்கள், மனைவி குழந்தைகளுக்குக் கஷ்டங்கள் ஏற்படும். எதிரிகள் மற்றும் கொள்ளையர்கள் மூலமான பணயிழப்பு, ஏற்படும். வீண்சண்டைகள், வழக்கு விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பதவி நிலையில் மாற்றங்கள், இடமாற்றங்கள், சொத்து இழத்தல் ஆகியவை ஏற்படும். வாயு மற்றும் உஷ்ணத்தால் ரோகங்கள் ஏற்படும். கலகம், பொருள் நாசம், தானிருக்கும் நிலை கெட்டுவிடுதல், மனக்கிலேசம் ஆகியவை ஏற்படும்.



புதன் புக்தி  11 மா 27 நாட்கள்

       புதன் புக்தி காலத்தில் கோசார புதன் மிதுனம் அல்லது கன்னியில் இருக்கும் போது ஜாதகருக்கு பூச்சிகள், மிருகங்களால் சிராய்ப்பு ஏற்படுதல் அடி படுதல், காயம்படுதல் ஆகியவை ஏற்படும். பிற வியாதிகளால் இன்னலுருவார். எதிரிகளைக் கண்டு அஞ்சுவார். திருடர்களால் தொல்லை, பணம் இழப்பு, உயர்அதிகாரிகள் மற்றும் பகைவர்களால் ஏளனப்படுவதோடு, பிரச்சனைகளுக்கும் ஆளாவார்.

       ஆனால் மற்ற இராசிகளில் வரும்போது, திருமண வயதானால், அதிர்ஷ்டசாலியாகி, நல்ல பெரிய இடத்துப் பெண்ணை மணப்பார். அழகிய  பெண்ணின் சேர்க்கையும், அதிகம் செல்வம் உண்டாகுதலும், வியாதிகள் நீங்குதலும், புரட்டாசி மாதத்தில் நிந்திக்கப்படுதலும்,, பாம்பு கடியும் ஏற்படும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தனலாபம், எதிரிகளை வெல்லுதல், புதிய சொத்துக்கள் சேருதல், வியாபாரம், தொழில் மூலமான வருமானங்கள் அதிகரித்தல் ஆகியவை ஏற்படும்.


கேது புக்தி  4 மா 27 நாட்கள்

       ஆயுதம், நெருப்பு மற்றும் இடியால் ஆபத்து ஏற்படும். குடும்பப் பிரச்சனைகள், உறவுகளால் தொல்லைகள், நாட்டைவிட்டு வெளிநாடு செல்லுதல், சொத்துக்களை இழத்தல், தீயோர்களின் எதிர்ப்பு, அதிகமான பகைவர்கள் உருவாகுதல், பெண்களால் நிந்திக்கப்படல், பிரச்சனைகள் என பலவகையிலும் பிரச்சனைகள் எழும்.

சுக்கிரன் புக்தி  1 2 மாதங்கள் 

       வெகுகாலமாக எதிர்பார்த்த பொருள் சேருதல், தெய்வ பூஜை, அழகிய பெண் சேர்க்கை, நல்ல வாகனம் அமைதல் ஆகியவை ஏற்படும். இலாபகரமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். சொத்துக்கள் சேரும். வெற்றிகரமான காதல் அனுபவங்கள், மகிழ்சிகரமான மணவாழ்க்கை, மத ஆர்வம், அதிக இலாபங்கள், உயரிய மரியாதை, கௌரவம் கிடைத்தல், பயணத்தால் இனிய சுகம் ஆகியவை ஏற்படும். எதிர்பாலராலும், அவர்கள் சமுதாயத்தாலும் சந்தோஷ அனுபவங்கள் பெற்றாலும் அவர்களால் குற்றமும் சாட்டப்படுவர். சிரங்கும், தேமலும் உண்டாகும்.

சூரியன் புக்தி – 4 மா 6 நாட்கள்

       அரசு மரியாதை, புகழ் அடைதல், சக்தி மிக்க பதவிகளையும் அடைவார். புதிய சொத்துக்கள்நல்ல பணியாட்கள் ஆகியவற்றை அடைவர்அமைதியான மனம், வெளிவட்டாரத்தில் நல்ல மரியாதை ஆகியவை கிடைக்கும்.  குறிப்பறியும் குணம் கொண்ட மனைவியின் உடல் நிலையில் பாதிப்பு, எவரும் பகைவராதல் ஆகியவை உண்டாகும். தீக்காயங்கள், தோல் சம்பந்தமான நோய்கள், குஷ்டம், கழுத்தில் வியாதி ஆகியவை ஏற்படலாம்.        

சந்திர புக்தி – 7 மாதங்கள்
        ஆடை, அழகிய பொன்னாபரணங்கள் மற்றும் சொத்துக்கள் சேரும். பூமிலாபம், பசுக்கள் கர்ப்பம் தரித்தல், புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும். பெரியவர்களுக்குப் பிரச்சனைகள், மண்ணீரல் பாதிப்பு, வலிகள், பித்தநீர் சம்பந்தமான பிரச்சனைகள் எழும். புதிய வீடு கட்டுதல் அல்லது புனரமைத்தல் ஆகியவை ஏற்படும். எதிர்பாலர்பால் சுகம் அனுபவித்தல். அதிகமான காமம். சுகங்கள், நல்ல தூக்கம் வரும். ஆனால், புக்தியின் கடைசிப் பகுதியில் மேலே சொன்ன பலன்கள் குறையும். இடம் மாறுதல் ஏற்படும். உடலில் தளர்ச்சி உண்டாகும்.


No comments:

Post a Comment