Search This Blog

Thursday 2 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-2019 - ரிஷபம்



குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-2019 - ரிஷபம்

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான, பிறரைக் கவர்ந்து நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு ஆயுள் மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று  களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.  அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்யலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் மேன்மையடையும். புண்ணியத்தல யாத்திரைகள் ஏற்படும். பொதுவாழ்வில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். தெய்வீக வழிபாடுகள், பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு நன்மை அடைவீர்கள். ஆன்மீகம் டிரஸ்ட், சேவா டிரஸட், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் நல்வுயர்வை அடைவார்கள். குழந்தைகளினால் வீட்டில் எப்போதும் குதூகலம் திகழும். பெண்களாலும் நண்பர்களாலும் அதிக நன்மைகள் ஏற்படும்.

       கல்வி, கலைத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கிப் பணியாளர்கள், சட்டத் துறை வ்ல்லுனர்கள், நீதியரசர்கள் ஆகியோர் பணிகள் சிறக்கும். கட்டுமானத் தொழில்கள் முன்னேற்றம் காணும்.
  
       குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். மூத்த சகோதரர் மேன்மையடைவார். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தரும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், பணப் பயன்களும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும். இராசியைப் பார்ப்பதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். சமூகத்தில் உயர்வான இடத்தை அடைந்து, மதிப்பு, மரியாதையும் கூடும்உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் இலாபம் உண்டு. அடுத்து மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய உடன்பிறப்புக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகள் மூலமாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எந்தக் காரியமும் தடைபடாது சிறப்புற நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

ரிஷப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக  செலுத்துவது  நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு மிக்க நற்பலன்கள் ஏற்படும். 80%


      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

No comments:

Post a Comment