Search This Blog

Thursday 21 December 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017-2020 சிம்மம் முதல் துலாம் வரை



சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017-2020
சிம்மம் முதல் துலாம் வரை

சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
       தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்டு, நிறைந்த கல்வி, தனக்கெனத் தனிவழி, பழி பாவத்திற்கு அஞ்சாத, மற்றவர்களை அடக்க கூடிய, புத்திமான், கலைகளில் வல்லவர், உழைப்பாளி, கம்பீரமான, தன்னம்பிக்கை உள்ள சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. சிம்ம இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
          அனைத்து கிரகங்களுக்கும அரசனாக உள்ள ஆதித்யனை ஆட்சிவீடாகக் கொண்ட சிம்மத்திற்கு 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகும் இந்த இரண்டரை வருடத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். எனவே, விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.  மனையாளுக்கு கரு தங்காமல் போவதின் காரணமாக சிறிதளவு துன்பமும் சோகமும் ஏற்படலாம். குணம் கெட்ட பெண்களின் தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். சிலருக்கு முறை மீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம் ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். ஒற்றுமை இல்லையேல் சயன சுகம் கெடும். சிலருக்கு மறதியும் கவனச் சிதறலும் ஏற்படும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். தீராத நோய்களில் இருந்து விடுபட்டு உடல் சோர்வுகள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும், அலைச்சலும் அதிகம் ஏற்படும். போட்டி, பிரச்சனைகள் எதுவாகினும் வெற்றி உங்களுடையதாகவே இருக்கும். சிலருக்கு எல்லாவகையிலும் இலாபமும், வித்வத்துவமும், வாக்கு வன்மையும் ஏற்பட்டு அதன் மூலமாக நன்மைகள் ஏற்படும். அதிக சுகமும், புகழும் ஏற்படும். கீர்த்தி பெருகும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகி மருத்துவச் செலவுகள் குறையும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும். தொழிலில் வரும் இலாபத்தை நல்ல முறையில் தான தர்மம் என செலவழிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்ற உத்திரவு கிடைக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். சிம்மத்திற்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் முழு சுப பலன் ஏற்படும். (5) 80%. எனவே, மேற் சொல்லப்பட்டு பலன்கள் நன்மையாகவும் முடியும். இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இவர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.


       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணைவி இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். பின்னர் மனக் கசப்பு படிப்படியாகக் குறையும். தான தர்மமென கைப் பணம் கரையும். சொந்த வீடு அமையும்.

       தொழில் மற்றும் வியாபாரம் ;- தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஆதாயம் தரும். தொழில் துறையில் சிக்கல்கள் ஏற்படலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். புதிய கூட்டாளிகள் சேருவர். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களின்றி உடனடியாகக் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தந்தாலும், உடன் பணிபுரிபவர்களின், உதவியாலும், ஒத்துழைப்பாலும் தப்பித்துக் கொள்வீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தாமதத்திற்குப் பிறகே நிறைவேறும், வேலப்பளு அதிகரித்து ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உருவாகும்.

       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆயினும் மகிழ்ச்சிக்காகப் பணச் செலவுகளைப் பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள். கணவர் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார். அதுபோல் உங்களுக்கு வேண்டியதை மறுக்காமல் வாங்கித் தருவார்.
       மாணவர்களுக்கு ;- நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு மற்றும் பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மேற்கல்விக்கு அரசு உதவித் தொகை கிடைக்கும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும். கல்வியில் விருத்தி ஏற்பட்டு ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
       அரசியல்வாதிகளுக்குஓரளவுக்கு உங்களுக்கு நல்ல காலம்தான். பட்டங்களும், பதவிகளும் தேடிவரும். அதற்கு நீங்கள் காலம் தவறிய சாப்பாடு, தூக்கமில்லாத இரவுகள் எனக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கும். புகழையும், தொண்டர்களையும் நிலை நிறுத்திக் கொள்ள கை பணத்தைக் கரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், மக்களின் ஆதரவுகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்குபுகழையும், மார்கெட்டையும் தக்கவைத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதுவே புத்திசாலித்தனமும் கூட. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கையில் சற்றே குறைபாடுகள் ஏற்படும். வெளியூரில் அவுட் டோர் ஷூட்டிங்கில் ரசிகர்களின் தொல்லை எழலாம். சிலருக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக களத்திர பாவத்தையும், 7 ஆம் பார்வையாக இலாப பாவத்தையும் 10 ஆம் பார்வையாக தன, குடும்ப பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தை சனிபகவான் பார்ப்பதால் தடைபட்ட திருமணங்கள் முதலில் தாமதமானாலும் பின்னர் சிறப்பாக நடக்கும். எல்லாமே நன்மையாக முடியும். சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். கணவன் மனைவியிடையே இருந்த அன்யோன்யம் குறைந்து காணப்படும், சில தம்பதிகள் எலியும், பூனையுமாகக் கூட மாறிவட வாய்ப்புண்டு. எனவே, பேச்சைக் குறைத்து நேசத்தை வளருங்கள். வேலை பார்க்கும் மனைவியாய் இருந்தால் பணியிட மாற்றங்கள் அல்லது வேறு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். காதல் விஷயங்களில் முதலில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் பின்னர் சுமுகமாக முடிவடையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்காது. வெளிநாடு செல்வதில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
         7 ஆம் பார்வையாக 11 ஆம் பாவத்தைப் பார்வை செய்வதால் இதுநாள்வரை உங்கள் தீராத ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மூத்த உடன் பிறப்புகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இலாபங்கள் பெருகும். பிற வழிகளிலும் உபரியாக வருமானங்கள் வந்து சேரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே வந்தடையும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் உண்டு. சிலருக்குத் தொழில் மூலமாக வந்து சேர வேண்டிய இலாபங்கள் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறி அதன் மூலமாகப் புது வரவுகள் ஏற்படும். அதனால் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
         10 ஆம் பார்வையாக 2 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தனவரவுகள் தடைபடும். குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறைவால் குழப்பங்கள் ஏற்படும். அதன் காரணமாக நடத்தப்பட வேண்டியிருந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள், சுபகாரியங்கள் நடக்காமல் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கண் உபாதைகளும், முக ரோகங்களும் ஏற்பட்டு உபத்திரவம் தரும். பிறரிடம் பேசும் போது பவ்யமாகப் பேசவும். நாவடக்கம் நன்மை தரும். பணப் புழக்கம் ஓரளவு கை கொடுக்கும். வராக் கடன்கள் வசூலாகும். அரசுப் பணியில் வரவேண்டிய பண நிலுவைகள் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு தாமதமாகவேனும் வந்து சேரும். கடின உழைப்பின் காரணமாக உணவருந்தவும் நேரம் இருக்காது.  
        
       பரிகாரங்கள் – விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு உதவுதல், ஊனமுற்றோர்க்கு உதவிகள் செய்தல், அன்னதானம் செய்தல், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளித்தல், கோவிலில் உழவாரப் பணிகள் செய்தல் ஆகியவற்றால் சனி தோஷம் குறையும். சனிக் கிழமை சனி ஈஸ்வரனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, எள் சாதம் நெய்வேத்தியம் செய்து வழிபட்டு மற்றவர்களுக்கு விநியோகிக்க சனியின் பாதிப்புகள் ஓரளவு குறையும்.

கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
       புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்டு, ஆசார சீலமான, நன்னடத்தை உள்ள, சுபகாரியப் புலியுமான, தருமவான், இனிமையாக பேசக் கூடிய, மக்கள் செல்வாக்கு உடைய, பணக்காரர், கெட்டிக்காரர், எழுத்து, இசை, கலை, இலக்கியத்தில் வல்லமை உடைய கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.   அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. கன்னி இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       இராசி மண்டலத்தின் 6 வது இராசியான கன்னி இராசிக்கு 4 இல் பிரவேசிக்கும் சனீஸ்வரன் அர்த்தாஷ்டம சனியாகி சின்னச் சின்ன பணிகளைக் கூட அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். எந்த ஒரு வேலையையும் பிறரை நம்பி ஒப்படைக்காமல் தன் கையை தனக்கு உதவி எனத் தானாகச் செய்வதே சிறப்புத் தரும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். விவசாயத் தொழில்கள் நினைத்தபடி  இருக்காது. மானம், மரியாதை, கௌரவம் அனைத்தும் பாழாகும். அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் எதிர்ப்பு வலுக்கும். உறவுகளும் ஒதுங்கிச் செல்வர். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாக முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிர்ப்பதால் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் அடிக்கடி விடுமுறை எடுப்பதைத் தவிருங்கள். உண்மையாக, நேர்மையாக உழைக்காவிட்டால் இடைஞ்சல்கள் ஏற்படும். சிலருக்குத் தொழிலில் நிச்சியமற்ற தன்மை ஏற்படும். கவனமாக இருந்தால் மட்டுமே நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுக்க முடியும்.  சிலருக்கு வேலைமாற்றம் ஏற்படுமாதலால் நல்ல வேலை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கும் வேலையை விடுவது புத்திசாலித்தனம் ஆகும். சிலருக்கு உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காது. சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உங்கள் வார்த்தைகள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது.. தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தருவதாக இருக்காது. அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை குறையும். பெரும்புள்ளிகளின் அறிமுகம் கிடைத்தாலும் அது வேலைக்கு ஆகாது.  முன்னேற்றம் தடைபடும். அந்தஸ்தும், கௌரவமும் காதல் கனவுகளைச் சிதைக்கும். வலுவான போராட்டத்திற்குப் பிறகே காதல் நிறைவேறும்.  எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் என சொல்வதற்கில்லை. பொதுச் சேவைகள் அவமானத்தைத் தரலாம். எனவே, புகழ் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் பார்த்து நடப்பது நலம் தரும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். செயல் திறன் குறைவதனால் வரும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சமாளித்துக் கொள்வதுதானே அறிவுடமை. சிலருக்கு கர்பப்பை கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். கீழ்வயிற்றுப் பகுதியில் அல்சர் போன்ற பிரச்சனைகள் எழலாம். பிள்ளைகள் வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்துக்களால் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும். பெரியோர்களின் ஆதரவும் குறையும். சொத்துக்கள் மீதான வழக்கு விவகாரங்களால்  செலவுகள் அதிகரிக்கும். லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் எதிர்பாராத அளவுக்கு இழப்புகள் ஏற்படும். சிலருக்குப் பணப்பற்றாக்குறையால் காரியங்களில் தாமதங்களும், தடைகளும் ஏற்படும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். கன்னி இராசிக்கு -  உலோக மூர்த்தியாகி அரை சுபராக வருவதால் சுமாரான பலன்களே ஏற்படும்.(4) 60%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

       குடும்பம் மற்றும் பொருளாதாரம்கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறையும். வித்தைகளில் தேர்ச்சியும். அறிவுத் திறனும் கூடும். தலைப்பதவி, வசதியான வீடு ஆகியவை அமையத் தாமதமாகும். உடன் பிறப்புக்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்களில் தடைகள் ஏற்படும். ஸ்கூட்டர், கார் போன்ற வாகனங்கள் அடிக்கடி பழுதாகும். அதன் காரணமாக பழுதுபார்க்கும் செலவுகள் கூடும். பலவழிகளிலும் பணவரவு இருந்தாலும் செலவுகளும் கூடும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வார். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள்.
       தொழில் மற்றும் வியாபாரம் - வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்து கொண்டால் ஓரளவு வியாபாரம் பெருகும். வாடகை வருமானங்கள் தாமதமாகவே வசூலாகும். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் சிக்கல்களுக்குப் பிறகே ஈடேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழிலில் பெரிய தொகைகளை முதலீடு செய்வதற்கு முன், அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து இறங்குவதால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் உண்டாகி, இலாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், உதவிகள் தாமதப்படும்
       உத்தியோகஸ்தர்களுக்குஅரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் தடை, தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பணிகளில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகள் தாமதமானாலும் கைக்கு வந்து சேரும். பணி சம்பந்தமான வெளியூர்ப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேர்ந்தாலும், அதில் கிடைக்கும் ஆதாயங்களால் மனம் மகிழும். உயர் அதிகாரிகளால் பணியிடத்தில் அடிக்கடி பிரச்சனைகள் எழும்.
       பெண்களுக்கு; தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் ஆதரவு இருந்தும் தாமதமாகவே காரியங்களைச் சாதித்துக் கொள்வர். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் வெற்றிகளைக் குவிக்க முடியாது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள், குடும்பத்தில் உள்ளோரின் விருப்பங்கள்யாவும் நிறைவேறும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
       மாணவர்களுக்கு;- மாணவ, மாணவிகள் தங்கள்  தேர்வுகளில் ஆசிரியரின் ஒத்துழைப்பால், சுலபமாக வெற்றிபெற முடியும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். சிலருக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம். அதையும் தாண்டி முழு முயற்சியால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே, உடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இராமல் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
       அரசியல்வாதிகளுக்குவீண் வார்த்தைகளை ஒதுக்கி, மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களிடையேயும், கட்சி நிர்வாகிகளிடமும் நல்ல பெயர் எடுத்து, மதிப்பும், மரியாதையும் கூடும். விவசாயிகளின் கஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வது நல்லது. அது அவர்களிடையே செல்வாக்கையும், மதிப்பு மரியாதையையும் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக  அதிகம் செலவுகள் செய்ய நேர்ந்தாலும், பொருளாதார நிலை மேம்படும்.
       கலைஞர்களுக்குஎதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் ஓரளவு தேடிவரும். கலைத்துறையில் நல்ல பெயரும் புகழும் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலையில் சோர்வு உண்டாகும். கிசுகிசுக்களை தவிர்க்க உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானத்துடன் பேசிப் பழகுவது  நல்லது. ஆடம்பர வாழ்க்கைக்கான மதிப்பு மிக்கப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பட ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் உடனான சுமுக உறவில் விரிசல் விழக் கூடும்.

பார்வை பலன்கள்

         3 ஆம் பார்வையாக ருண, ரோக, சத்ரு பாவத்தையும், 7 ஆம் பார்வையாக கர்ம பாவத்தையும் 10 ஆம் பார்வையாக  இராசியையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அரசுப்             பணியாளர்களுக்குத் தாமதமாகவேனும் பதவி உயர்வு கிடைக்கும். செலவுகள் அதிகமாகும். ஆயினும், கேட்ட இடத்தில் உடனே கடன் கிடைக்கும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். தொழில் பாதிப்பு அடையும். தாய் மாமனுக்கு உடல் உபாதைகள் ஏற்படும்சேவைகள் மூலமான வரவுகள் அதிகமாகும். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்கிவிடுவது அல்லது ஒதுங்கிவிடுவது நல்லது. வழக்கு விவகாரங்கள் வெற்றியைத் தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். சுற்றுலா, உணவு, ஆடை ஆகிய துறைகளில் இருப்பவர்கள் இலாபம் அடைவர்.
         7 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் சிறிது பாதிப்பு அடையலாம். உடனிருப்பவர்கள் மூலமாக உங்களின் பெயர் கெட்டு, மதிப்பும் மரியாதையும் குறைய வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். விருப்பங்களில் தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும். அரசுப் பணியில் இருப்பவர்களில் சிலருக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நெருங்கிய நண்பர்கள் பிரிந்து செல்வர். வெளிநாடுகள் செல்வதில் தடைகள் ஏற்படும். சிலருக்கு திடீர் இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படலாம். தொழில் பங்குதாரர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் சொத்துக்களை மனைவி, மக்கள் பெயருக்கு மாற்றும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம்.
         10 ஆம் பார்வையாக சனி தங்கள் இராசியைப் பார்ப்பதால் எந்த விஷயத்திலும் வருமுன் காப்பது நல்லது. சோம்பலை விலக்கி சுறுசுறுப்பாக இருக்க முயலுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடையலாம். ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், நன்றும் இன்றே செய் என்பதை தாரக மந்திரமாக்கி எந்த ஒரு செயலையும் நாளைக்கு என தள்ளிப் போடாதீர்கள். அவ்வப்போது உங்கள் உடல் நலத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த செய்திகள் தாமதமாகக் கிடைத்தாலும் இறுதியில் சாதகமான செய்தியாகவே இருக்கும். இளைய சகோதரர்களுக்கு விபத்து போன்ற இன்னல்கள் எழலாம். சிலருக்கு ஊக்கம் குறைவதால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி அடைய கடுமையாக உழைக்க வேண்டியது வரும்.
         பரிகாரங்கள் –சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருவாரூர் அருகில் திருத்துறைப்பூண்டியில் உள்ள விக்ரபாண்டியம் என்ற கிராமத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு ஸ்தலத்தில் அக்னீஸ்வரரை வேண்டி சனியே வரம் பெற்ற தலம் இது. சிவன் சனியை பொங்கு சனியாக மாற்றி இனி இங்கு வரும் பக்தர்களுக்கு தோஷம் அகலும் என்று அருளிய இத்தலத்தில் வேண்ட சனியினாலான பாதிப்புகள் குறையும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்டு, மெத்தப் படித்த, பொறுமை, அறிவு, வல்லமை, புகழ், வெளிப்படைப் பேச்சு, சுகந்த பரிமளப் பிரியர், இரக்கமுள்ள, உண்மை விளம்பி, தூய்மையானவருமான துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. துலா இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

        காலபுருஷ தத்துவத்துக்கு 7 ஆம் பாவமான அசுரகுருவை அதிபதியாகக் கொண்ட துலா இராசியில் தைரிய பாவச் சனியால் சுப பலனே ஏற்படும் என நம்பலாம். இந்தப் பெயர்ச்சி இதுவரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலமாக இருக்கும். மனதில் எப்போதும் உற்சாகம் பொங்கும். பல வழிகளிலும் புகழ், சுகம் ஆகியவை ஏற்படும். புதிய சொத்துக்கள் சேரலாம். அரசாங்க ஆதரவு உண்டு. பதவி உத்தியோகத்தில் எதிர்பார்த்த நிலைகளை எய்துவீர்கள். இஷ்டப்படி கஷ்டமில்லாமல் இட மாற்றங்கள், பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றி அடையும். தலைமைப் பதவிகள் தானாகவே தேடிவரும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  புகழ், கௌரவம் ஓங்கும். பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் உடனடியாகவே கிடைக்கும். தினமும் பால் சோறும், உயர்தர ருசி மிக்க உணவும் கிடைக்கும். அஷ்டலட்சுமி கடாச்சமும் ஏற்படும். இந்த சனிப் பெயர்ச்சி இராஜயோகத்தைத் தரும். கார் போன்ற உயர்தர வாகன வகைகளை வாங்குவீர்கள். வசிக்க நல்லதொரு இல்லமும் அமையும். உடன்பிறப்புகளுக்கும் நல்லதிர்ஷ்டம் ஏற்படும். ஒருவர் கோழையாக இருந்தாலும் பகைவர்கள் மீது சீறிப் பாயும் சிங்கமாக மாறிவிடுவார். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். கால்நடைச் செல்வங்களும் பெருகும். வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்கள் தங்கு தடையின்றி தாராளமாக இருக்கும். கல்வியில் கவனம் தேவை. தொழிலில் அதிக இலாபங்களை எதிர்பார்க்கலாம். காதல் விஷயங்கள் கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். தள்ளிச் சென்ற சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நடக்கும். அடிக்கடி பல சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு களிப்பெய்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சேமிப்புகள் கை கொடுக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் தாராளமாய்க் கிடைக்கும். அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டியதிருக்கும். ஆன்மிகப் பயணங்கள் தொடரும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். துலாம் -  தாமிர மூர்த்தி + சுப இராசியாவதால் அவர்  நன்மை அளிக்கிறார். (3) 95%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

      குடும்பம் மற்றும் பொருளாதாரம் - ; பூமி வீடு மூலம் இலாபம் அதிகமாவாகவே ஏற்படும். தந்தையுடன் சுமுக உறவு இருக்கும். நல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும், குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும். சோம்பல்கள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன்மனைவி உறவில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்தி மார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;. சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும்கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருப்பினும், அவர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.
      உத்தியோகஸ்தர்களுக்கு - அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும், மேலதிகாரிகளின் அனுசரிப்பும் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவதோடு உங்கள் முன்னேற்றத்துக்கும் தடங்கல்களை ஏற்படுத்தினாலும் உங்கள் முன்னேற்றம் தடைபடாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிகளை உடனுக்குடன் முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணி காரணமாக வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும்.
       பெண்களுக்கு ;- ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க முற்படுவீர்கள். வெற்றியும் கிட்டும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக அமையும். வாகனங்களில் செல்வது சுகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத விதத்தில் அரசு உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்பட்டு, பதவி உயர்வும் கிடைக்கும். .
      மாணவர்களுக்கு  ;-  முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். எனவே கவனமாகப் படிக்கவும். காலம் பொன் போன்றது. புதிய மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிடைக்கும். பணி நியமனக் கடிதமும் உடனடியாகக் கிடைக்கும். சிலர் படிப்பு விஷயமாக பல நீண்ட கல்விப் பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும், போட்டிகளில் வெற்றிகளும் குவித்து மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் செல்வீர்கள்.
       அரசியல்வாதிகளுக்கு –  தனவரவுகள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு மக்கள் செல்வாக்கு திடீரென உயரும். தங்கள் தகுதிகளும் அதிகரிக்கும். புகழும், கௌரவமும் ஓங்கும். சிலருக்கு மந்திரி பதவிகள் தேடிவரும். தொண்டர்களின் உற்சாகம் தோள் கொடுக்கும். பகை வெல்லும் திறன் அதிகரிக்கும். உங்கள் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தேவையற்ற அலைச்சல்களும், திடீர் பயணங்களும் ஏற்பட்டும். தலைவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
       கலைஞர்களுக்குஎதிர்பார்ப்புக்கு மேலாக நல்ல பட வாய்ப்புகள் தேடிவரும்.  சிறிது இடைவெளிக்குப் பிறகு வெற்றிகரமான படைப்புகளைக் கொடுத்து மக்கள் மத்தியில் புகழ் அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் படப் பிடிப்புகளில், பயணங்களின் போது மறக்க முடியாத சந்தோஷங்களும், நினைவுகளும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கை கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். அரசு வகைத் உதவுகள் அனுகூலமாய் இருக்கும்.  
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவத்தையும், 7 ஆம் பார்வையாக தர்ம, பாக்கிய பாவத்தையும் 10 ஆம் பார்வையாக  விரய, மோட்ச பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கட்டிய வீடு வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி எய்துவர். வழக்குகள் சாதகமாக இராது. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் எழும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சிலருக்கு அவமானங்களும் ஏற்படலாம். விருந்து, கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ ஆசிகள் கிட்டும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். செய்தொழில், வியாபாரம் என ஜீவன உபாயங்கள் எதுவாகினும் வெற்றி கிடைக்கும். இலாபமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்குப் பதவி நிரந்தரம் ஆகும்.
         7 ஆம் பார்வையாக 9 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தெய்வ ஆசி கிட்டும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் வழிகாட்டுதலின் படி நடந்தால் வெற்றிகிட்டும். செல்வாக்குள்ள மனிதர்களின் தயவால் பல காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உயர் கல்வி பயில்வதில் இருந்த தடைகள் நீங்கி நற்கல்வி பெறலாம். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள், நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அது தங்களுக்கு  விருப்பமில்லாத இடமாகக் கூட இருக்கலாம். குடும்பத்தில் பேரன், பேத்தி போன்ற உறவுகள் வரும் யோகம் ஏற்படும்சிலருக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுகிற ஆர்வம் ஏற்படும். சிலர் தற்போது உள்ள வேலையில் இருந்து விலக்கப்படலாம் அல்லது தன்னிச்சையாக விலக நேரலாம்.
         10 ஆம் பார்வையாக 12 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் எவ்வளவு எச்சரிக்கையுடனும், சிக்கனமாகவும் செலவு செய்ய முயன்றாலும் வீண் விரயங்கள் ஏற்படும். இறங்கும் வேலைகளிலெல்லாம் தேவையற்ற அலைக்கழிப்பால் மனச்சோர்வும், பணச் செலவும், நிம்மதியற்ற தன்மையும் ஏற்படும். ஆயினும், தடை, தாமதங்களுக்குப் பிறகு எல்லாமே அனுகூலமாகும். சிலருக்கு இடமாற்றம்  தவிர்க்க முடியாததாகும். ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் அரசால் எதிர்பாரத பிரச்சனைகள் வரலாம்சிலருக்கு செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற நேரும். அரச தண்டனைக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற கடன்களை வாங்கக் கூடாது. புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.     
         3 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவத்தையும், 7 ஆம் பார்வையாக தர்ம, பாக்கிய பாவத்தையும் 10 ஆம் பார்வையாக  விரய, மோட்ச பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
                                                                                                                                                                                                                               பரிகாரங்கள் – சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருநரையூர் சென்று  மங்கள சனீஸ்வரனை வேண்டி பிரார்த்திப்பது நல்லது. சனி பகவானின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நாளில் அர்ச்சனை செய்து வழிபடுதல் பாதிபுக்களில் இருந்து விடுபடலாம். ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபட்ட வினைகள் அனைத்தும் தீரும்.




No comments:

Post a Comment