Search This Blog

Friday 22 December 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 விருச்சிகம். தனுசு. மகரம்.


சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020
விருச்சிகம். தனுசு. மகரம்.



விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு, வலிமையான கால்கள் உருண்டு திரண்ட தோற்கள், வேகமான நடை, கேட்போருக்கு உதவும், புத்திமான், வீரர், சூரர், ஆசார ஒழுக்கமுள்ள விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. விருச்சிக இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
       உங்கள் இராசிக்கு தைரியம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான சனி தங்கள் தன பாவத்துக்குப் பெயர்ச்சி ஆகும் இத் தருணத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அல்லல்கள் தந்தான். இதுவே ஏழரைச் சனியின் கடைசி காலகட்டமாகும். இதன் காரணமாக கோசார நிலை தன விரயம் தரும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். இந்த சஞ்சாரத்தின்  இறுதிக் காலத்தில் நன்மையான யோக பலன்களை கொடுக்கவே செய்வார். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அரசியல் பிரமுகர்களுக்கு கௌரவம், புகழ், அந்தஸ்து உயரும்.  சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். சிலருக்கு பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். ஆனால், எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கை தேவை. தொழிலில் மந்த நிலையே காணப்படும். உங்களைப் பற்றிய விமர்சனங்களைப் புறந்தள்ளி உங்கள் முன்னேற்றத்தில் கவனம் வையுங்கள். பூசல்களில் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் மறைவர் எதிர்ப்புகள் விலகும். எவர்க்கும் எவ்விதமான வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னது, சொன்னபடி மறக்காமல் நிறைவேற்றி விடுவீர்கள். மனோதைரியம் கூடும்.  உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்கக் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகச் செலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவால் நன்மை அடைவீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று திரும்புவீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். விருச்சிகத்திற்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் முழு சுப பலன் ஏற்படும். (2) 80%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது போல் தோன்றும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கும்பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்தி மார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார்.
      தொழில் மற்றும் வியாபாரம் ; எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கு முன் ஆலோசித்துச் செய்தால் ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். ஆனால் தாமதமாகும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும். அரசின் உதவிகள் தாமதமானாலும், கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப் பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
       உத்தியோகஸ்தர்களுக்கு – எவ்வளவு வேலை பார்த்தாலும் உங்கள் பணியில், மேலதிகாரிகளிடம் திருப்தி இருக்காது. அதன் கார்ரணமாக பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவே குடும்பத்தைப் பிரிந்திருக்கக் காரணமாகலாம். சிலருக்குப் பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வுகள் தடை, தாமதிற்குப் பிறகே கிடைக்கும். சிலருக்கு வாகன யோகங்கள் ஏற்பட்டாலும், அதில் எச்சரிக்கையுடன் பயணித்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். 
      பெண்களுக்கு; பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
      மாணவர்களுக்கு -- வேலைக்கான நேர்காணலில் தாமதத்திற்குப் பிறகே வெற்றி கிட்டும். அதன் காரணமாக நீண்ட, கடினமான பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் தடங்கல்களுக்குப் பிறகு வந்து குவியும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்
       அரசியல்வாதிகளுக்கு – தலைவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவர். கௌரவத்துக்காகப் பிடிக்காத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதன் மூலம் நல்ல பெயரும், புகழும், அதிக வருமானமும் வரும் என்பதால், நீங்கள் கவலையின்றி இருப்பீர்கள். உங்கள் துறை சம்பந்தமான பணிகள் சிறப்பாக நடந்தாலும், தடைகளும், தாமதங்களுக்கும் இல்லாமல் இருக்காது.
       கலைஞர்களுக்கு – நல்ல கதாபத்திரங்கள் கிடைக்கப் பெற்று, சிறப்பாக நடித்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், அரசால் அதிக தொந்திரவுகள் இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முன் மூலப்பத்திரங்கள், வில்லங்க விவகாரங்களை அலசி ஆராய்ந்து பத்திரப் பதிவு செய்வது நல்லது. படப்பிடிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்கையில் தனி கவனத்துடன் செல்வது குழப்பங்களைக் குறைக்கும்.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக சுக, வீடு, வாகனங்களுக்குரிய பாவத்தையும், 7 ஆம் பார்வையாக ஆயுள் பாவத்தையும் 10 ஆம் பார்வையாக இலாப பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக உங்கள் இராசியின் 4 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தடைபட்ட கல்வி தொடரும். நரம்பு சம்பந்தமான நோய் தோன்றும். தாயாருக்கு உடல் ஆரோக்கியம் குறையலாம். தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை பெருகும். பணிகளில் உங்கள் முயற்சியின் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகளை, தடுமாற்றங்களை, தடைகளை அகற்றி வெற்றி வாகை சூடுவீர்கள். நவீன உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வண்டி வாகனங்கள் வந்து சேரும். குழந்தைகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கைவிட்டுப் போகலாம். இளைய சகோதரர்களால் நன்மை ஏற்படும்.  பணியிடத்தில் திருப்தியற்ற நிலை நிலவுவதால் மன அமைதி குறையும்.
         7 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் வரும் வருமானங்கள் பெருகும். நிதி நிலமை அதிகரிப்பதால் புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு வம்பு வழக்குகள் உண்டாகும். காரியங்களில் வெற்றி கிடைப்பது அரிது. தந்தையால் நன்மைகள் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களில் எச்சரிக்கை அவசியம். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்குவதைத் தவிருங்கள். உயர் கல்வி பயில்வதில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டுப் பயணங்களில் தடைகள் வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருந்தாலும் உங்கள் இலாபங்களும், வரவுகளும் குறையாது. குருவின் சாதகமற்ற நிலையால் பொருளாதாரம் சீராக இருக்காது.
        10 ஆம் பார்வையாக உங்கள் இராசிக்கு 11 ஆம் பாவத்தைப்  பார்வை செய்வதால் வியாபாரத்தில் இலாபங்கள் கூடும். புதிய தொழில் திட்டங்களில் வெற்றி அடைவீர்கள். கலைஞர்களுக்குப் புகழும், பெருமையும் சேரும். சம்பாத்திய நிலை உயரும். வருமான வரித்துறையினரால் ஆய்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் கணக்கு விவகாரங்களை சீராக வைப்பது நல்லது. உங்கள் ஆசைகள் அபிலாஷைகள் அனைத்தும் தடைகளுக்குப் பிறகு சிறிது சிறிதாக நிறைவேறும்.  மூத்த சகோதரரால் சில தொல்லைகள் எழலாம். நண்பர்கள் உண்மையாகவும், நேர்மையாக நடப்பதோடு உதவிகளும் செய்வர். அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவைகள் வந்து சேரும். மதிப்பும் மரியாதையும் கூடும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

        பரிகாரங்கள் – சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வேண்டுவதால் சனியின் பாதிப்புகள் கணிசமாகக் குறையும்.  நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்தும் வழிபடலாம். குச்சானூர் சென்று சுயம்புவான சனீஸ்வரரை வேண்டி சுகம் பெறலாம். எள்ளோதரை செய்து வினியோகிக்கலாம். காக்கைக்கு தினசரி ஆகாரம் வைப்பது உசிதம்.
தனுசு
 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்டு லட்சுமி கரமான, கணக்குப் பார்க்கக் கூடிய, படிப்பாளியுமான, சத்தியவான், குணவான், பேச்சாளர், சுகவான், தனவான், சஞ்சாரி, உத்தியோகமும் உள்ளவரான தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார் அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. தனுர் இராசிக்கான சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

     காலபுருஷ தத்துவத்தின் 9 ஆம் இராசியும், குருவின் ஆட்சி வீடுமான தனுசு இராசிக்கு ஜென்மச் சனியாய் சஞ்சரிக்கிறார். உங்கள் தன, தைரிய பாவத்துக்கு அதிபதியான சனி நன்மையும், தீமையும் கலந்த பலன்களைத் தர உள்ளார். நோய்கள், பிறருடன் விரோதம், தனவிரயம், சிறைப்பயம், கௌரவக் குறைவு, எல்லாம் உண்டாகும். ஆனாலும், இவை அவர் அவர்கள் திசா/புத்திப்படி மாறுபடும். சுற்றமும் நட்பும் எதிர்ப்பாகி, பகையும் முற்றும். எதிர்பாராத பணிமாற்றங்கள், இடமாற்றங்கள் என சாதகமற்ற நிலையே உருவாகும். எந்த ஒரு காரியத்தையும் தைரியமாகவும், விவேகமாகவும் புதிய சிந்தனைகளோடு செயல்பட்டால் காரியங்கள் வெற்றியாகும். பணியிடத்தில் சிறப்பாக வேலை பார்த்தாலும், அதிகாரிகள் திருப்தி கொள்ளமாட்டார்கள். அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பர். அதன் காரணமாக அதிகமாக உழைக்க வேண்டியது வரும். உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காது. அக்கம் பக்கத்தாரிடம் அனுசரித்துச் செல்லவும். பிறரிடம் பேசும் போது நாவடக்கம் தேவை. ஆரம்பக் கல்வியில் தடைகள் ஏற்படலாம். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறையும். உடன் பிறப்புக்களால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. தொல்லையே மிஞ்சும். தாயாரின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.  பழைய சொத்துக்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் எழும். வண்டி வாகனங்களில் செல்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நீங்கள் பாட்டுக்கு சென்று கொண்டிருந்தாலும், எவனாவது எமன் போல் வந்து இடித்துவிட்டுச் செல்வான்.  மிகவும் நேசிப்புக்கு உரியவர்களின் பிரிவு அல்லது நோய் கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் ஓர் இனம் புரியாத பீதி இருந்து கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் வகைகளில் பிறர் சூழ்ச்சியால் தோல்வியும் அதன் காரணமாக இழப்புகளும் ஏற்படலாம். எந்தத் தொழிலிலும் ஈடுபடாதிருப்பதே நல்லது. ஏனெனில், ஈடுபடும் எதுவுமே ஒத்துவராது. பணம் பல வழிகளிலும் குவியும் என எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகப் பொருளாதார நிலையை விருத்தி செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வர். தொழில், வியாபாரத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே, போட்டிகளைச் சமாளித்து வெற்றிபெற முடியும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். தனுசு இராசிக்கு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் கால் சுபராகி தீமையான பலன்களே தர வல்லவர். (1) 40%.  இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி முறையே சுவர்ண மூர்த்தியாக இருந்தாலும் சுபம் தரும் இராசிகளில் இருப்பதால் சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.     
    குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- ஆதாயமும் பெருகும். பணவரவு மற்றும் உத்தியோக லாபம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பெண்களால் தங்கள் முன்னேற்றம் தடைப்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். காரியங்கள் அனைத்தும் தாமதத்திற்குப் பிறகே வெற்றி பெரும். கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள்  ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;- வியாபாரிகள் புதிய முதலீடுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆராய்ந்து செய்வது நலம் பயக்கும். சுகமான பயணங்களில் இன்பமும் இருக்கும். ஞானம் பெருகும். பணியில் உள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைகள் தாமதமாகவே வந்து சேரும். வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காண முற்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சும். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – அலுவலக நண்பர்கள் அன்போடு கைகொடுத்தால் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஆயினும், பணிகளுக்கிடையே சிறு சிறு நெருக்கடிகள், கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். உயர் அதிகாரிகளை அனுசரிந்து நடந்து கொண்டால் இன்னல்கள் ஓரளவு குறையும். புதிதாக வேலை தேடுபவர்கள் விருப்பப்பட்ட வேலை கிடைக்கவில்லை எனில் கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொண்டு அனுபவம் பெறுவது எதிர்காலத்துக்கு உபயோகமானதாக இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
       பெண்களுக்கு ;- பதவியில் உள்ளவர்களின் தயவால் பயன் தாமதமாகவே ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். வீட்டு மனைவிகள் போராடி தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு மிகுந்த சிரமத்திற்குப் பிறகே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
       மாணவர்களுக்கு ;- மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி அதிகரிக்கும். சுயமுன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டவேண்டிய காலமாகும். மாணவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவர்மாணவர்களுக்கு அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உலகக் கோப்பை கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
       அரசியல்வாதிகளுக்கு – மக்களின் தேவைகளை அறிந்து, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலே அவர்களின் முழுமையான ஆதரவு கிட்டும். தொண்டர்கள், நண்பர்கள், தலைவர்கள் என அனைவர் வகையிலும் செலவு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆயினும், இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துவிடுவீர்கள். கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் விதமாக அடிக்கடி வெளியூர் சென்று சொற்பொழிவு ஆற்ற ஏற்படும் பயணங்களால் அலைச்சல்களும், அசதியும் ஏற்படும்.
       கலைஞர்களுக்கு – மக்களின் ரசனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது உங்கள் திறமையையும், புகழையும் அதிகரிக்கும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல், முதலில் வரும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உசிதம். அப்போதுதான் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ளமுடியும். சக நடிகைகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. ஏனெனில், பின்னர் கிசுகிசுக்களால் மனவருத்தமும், மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக தைரிய, வீரிய, சகோதர பாவத்தையும், 7 ஆம் பார்வையாக களத்திர பாவத்தையும் 10 ஆம் பார்வையாக கர்ம பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சகோதர வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் அமைதி என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலை ஏற்படலாம். வலது காது மற்றும் மார்பகங்களில் நோய்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சி  நல்ல முன்னேற்றத்துடன் இருக்காது.  தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சியை விட துன்பத்தையே அளிக்கும். தேய்பிறை போல் நாளுக்கு நாள் சந்தோஷமும், செல்வமும் குறையும். வியாபாரத்தில்  உற்சாகம் குறைந்து தொய்வு நிலை காணும்.
         7 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்கள் ஆரோக்கியம் பெருக மருத்துவ சோதனைகள் தேவைப்படலாம். பிறருடன் சுமுகமாக நடந்தால் பிரச்சனைகள் விலகும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்காது. பொருளாதாரப் பின்னடைவுகள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் நடக்க வேண்டிய அன்றாடப் பணிகளில் தாமதங்களும், ஏமாற்றங்களும், கவலைகளை அதிகரிக்கும். கடன்களைத் திரும்ப அளித்தல், செலவினங்களை சரிக்கட்டுதல், கூட்டுத் தொழில் முனைதல் போன்றவைகளும் பாதிக்கப்படும்.  காதலில் தோல்வி, கற்பு நெறி தவறுதல், தவறான பாதைகளில் செல்லுதல் ஆகியவை ஏற்படலாம். நிச்சயித்த திருமணங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம்.
         10 ஆம் பார்வையாக 10 ஆம் வீட்டைப் பார்வை செய்வதால் அரசு அதிகாரிகளுக்கு  கட்டளையிடும் பெரும் பதவி கிடைத்தாலும், தொல்லைகளும் இருக்கும்.  தொழில் நஷ்டம், வியாபாரத்தில் முன்னேற்றமின்மை, பணியிட மாற்றம் ஆகியவை ஏற்படலாம். சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க ஆவேசத்தையும், ஆத்திரத்தையும் கைவிட்டு, நிதானத்தையும், பொறுமையையும் கைப்பிடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவே, நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அவமானங்கள் மறைந்து, கௌரவமும், மதிப்பும் மரியாதையும் காக்கப்படும். சமயோஜிதமாக செயல்பட்டால் கொடுக்கல் வாங்கலில் பணம் கையை விட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
         பரிகாரங்கள் – சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு  நல்லெண்ணை விளக்கேற்றி, தினம் தோறும் காகத்துக்கு அன்னம் வைப்பதோடு, சனிக் கிழமைகளில் எள் சாதம் படைத்து வேண்டுவதால் தோஷங்கள் குறையும். அத்துடன் ஏழைகள், முதியவர்கள், திரு நங்கைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவது சனீஸவரன் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, உங்களுக்கும் நல்லதே நடக்கும்.


மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
     கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்டு, திரிலோக சஞ்சாரி, அலைபவர், சஞ்சல புத்தியுள்ளவர், பலதுறைக் கல்வி, சாதிக்கும் திறன், சாதனைகள் பல புரிந்து புகழ் பெறுபவர், கர்வி, வாய்ஜாலர், சிடுமூஞ்சி, தீர்கதரிசியுமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார். அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. மகர இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
      இராசி மற்றும் தன பாவத்துக்கு அதிபதியான சனி பகவான் ஏழரைச் சனியின் முதல் படியான விரயச் சனியாக உங்கள் இராசியில் கால் பதிக்கிறார். 12 ஆம் இடம் விரய பாவம் மட்டுமன்றி முதலீட்டு ஸ்தானமும் ஆகும். இதன் காரணமாக ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத் திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம் ஆகும். எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், சிவபெருமானின் தலையில் அரக்கன் கைவைத்த கதை போல் ஆகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. நண்பர்கள், உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவது சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். அரசு மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் தாமதமாகக் கிடைத்தாலும், மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அழகு. கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் மறைவர்.  உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் விஷயங்களை வெளிக் கொணரும் காலம் இது. சிலருக்கு இதுநாள்வரை இருந்துவந்த மன அழுத்தங்கள், உளைச்சல்கள நீங்கி, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு சீராகச் செய்து முடித்து நல்ல பெயர் வாங்க படாதபாடு படுவீர்கள். எந்தவொரு காரியத்தையும், எவருடைய தயவுமின்றி, எவருடைய ஆலோசனையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து செயல்பட முடியாத நிலை ஏற்படும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். மகர இராசிக்கு உலோக மூர்த்தியாக இருப்பதால் அரை சுப பலன் ஏற்படும்.(12) 60%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
       குடும்பம் மற்றும் பொருளாதாரம்: தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையுமே உங்களுக்குக் கைகொடுக்க வேண்டும். கஷ்டங்கள் ஏற்படும் போது கடவுளைத் தொழுதால், சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும். புதிய சாதனைகள் புரிய வேண்டுமெனில் மெனக்கெட வேண்டும். உண்மையான உழைப்புக்குப் பரிசாக மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்க வேண்டுமெனில் தீவிர உழைப்பையே தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.  மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்  ;- தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை அடைய கடினமான முயற்சி தேவை. வியாபாரத்தில் உண்மையான ஈடுபாடும் கடுமையான உழைப்புமே இலாபத்தை அதிகரிக்கும். அதன் காரணமாகப் பண இலாபங்களும் ஓரளவுக்கு அதிகரிக்கும்.  தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். அவ்வாறு முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டால் மட்டுமே இலாபம் கிட்டும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – வெளியிடத்தில் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தாலும். குடும்பத்தைப் பிரிய நேரும்.   உங்கள் பணியில் அதிகாரிகளின் அதிகமான தலையீடுகள் இருக்கும். ஆதலால், அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தாமதம் ஆனாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்பதவிக்காகக் காத்திருப்பவர்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் தாமதம், தடைகளுக்குப் பிறகு கட்டாயம் கிடைக்கும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
       பெண்களுக்கு ;- குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறை கொள்ளாவிட்டால் அதிக மருத்துவச் செலவுகளைச் செய்ய நேரும். பெண்கள் அவப்பெயர் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.  உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.
       மாணவர்களுக்கு ;- மாணவர்களின் கல்வித்தரம் உயர கடுமையான உழைப்பு அவசியம். சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும், வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர். தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளை வெல்வர். நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.
      அரசியல்வாதிகளுக்கு – கட்சி மாற்றம், தலைமை மாற்றம் ஆகியவற்றில் ஈடுபட நேரும். சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் பெற போராட வேண்டியிருக்கும். தேவையற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிலர் சிறை செல்ல நேரலாம். மக்கள் மத்தியில் புகழ் உயர்ந்து மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்கள் வகையில் அதிக செலவினங்களை எதிர்பார்க்கலாம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்ற மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும்.
       கலைஞர்களுக்கு – வெளிவட்டாரப் பழக்கங்களும், பிற இனத்தவர் தொடர்பும் அதிக பட வாய்ப்புகளை ஏற்படுத்தும். வெளியூரில் புகழ் அதிகரித்து, உள்ளூரில் இருக்கும் மதிப்புக் குறைய வாய்ப்பு ஏற்படும். நடித்துக் கொடுத்த படங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகளை வசூலிப்பதே பெரிய வேலை ஆகிவிடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இன்மையால் சில பிரச்சனைகளை எழலாம். சுகவாழ்வு, சொகுசான நிலைக்கு பஞ்சம் இருக்காது.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக தன, வாக்கு, குடும்ப பாவத்தையும், 7 ஆம் பார்வையாக ருண, ரோக, சத்ரு பாவத்தையும் 10 ஆம் பார்வையாக தர்ம, பாக்ய பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 2 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகிக்  கடன்பட நேரும். நல்லவர்களிடம் பழகுவது நல்லது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. சொந்த பந்தங்கள் உதவிகரமாகவும், ஒத்துழைக்கும் குணத்துடனும் விளங்குவர். சிலருக்குக் கண்ணில் உபாதைகள் எழலாம்குடும்பத்தில் வாய்ப்பேச்சு முத்தி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுப் பிரியவும் நேரலாம். தொழில் பாதிப்பு அடையும். சிலர் தனிக் குடித்தனம் செல்ல ஆசைப்பட்டு பெற்றோரைப் பிரியலாம். அவர்கள் மேல் ஆத்திரம் கொள்ளாது அனுசரித்துச் செல்வது நல்லது. உடன் பிறப்புகள் உங்களை விட்டுப் பிரிய நேரும். அவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். பொது இடங்களில் தைரியம் குறைந்து மனதில் எப்போதும் ஒருவித அச்சம் நிலவும்.
       7 ஆம் பார்வையாக 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பகைவர்களின் மறைமுகத் தொல்லைகளால் மனநிம்மதி குறையும். சேவைகள் மூலமான வருமானங்கள் செழிப்பாய் இருக்கும். தாய் மாமனால் ஆதாயம் உண்டு. சில தம்பதிகளுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிரியவும் நேரலாம். மனைவியால் வீண் விரயங்கள் ஏற்படும். அது மருத்துவச் செலவுகளாகக் கூட இருக்கலாம். குழந்தைகளுக்குப் புத்துணர்ச்சியும், தைரியமும் அதிகரிக்கும். தாயரின் சுகத்தில் பாதிப்புகள் இருக்கலாம். வீட்டில் பொன், பொருள் களவு போகலாம். இன்ஷியூரன்ஸ், கிராஜூவிட்டி ஆகியவை மூலமாக எதிர்பாராத பணங்கள் வரலாம்.
         10 ஆம் பார்வையாக 9 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஒழுக்க்க் கேடு ஏற்பட்டு அதனால்  பெரியவர்கள், உற்றார் உறவினர் தங்கள் மேல் வைத்திருந்த மதிப்பு மரியாதைகள் குறைந்து அவமானப்பட நேரும். தர்ம காரிய ஈடுபாடு, தெய்வபக்தி ஆகியவை குறையும். யாத்திரைகளில் இடைஞ்சல்கள் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தையின் மூலமாக இலாபங்கள் ஏற்படும். மனைவியின் தைரியம் கூடி, எதையும் தனியாகவே சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். தொழிலில் சுமாரான உழைப்புக்கே அதிக ஆதாயம் இருக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் அளிக்கும்.


       பரிகாரங்கள் – சிவனின் அருள் பெற்று பொங்கு சனியாக, குபேர மூலையில் இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் திருக்கொள்ளிகாடு சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்து சனி பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். கோவை பீளமேடு ஆஞ்சனேயருக்கு அபிஷக அலங்காரங்கள் செய்து அர்ச்சித்து வர அவன் அருளால் அவன் தாழ் பணிந்து சனி தரும் சங்கடங்களில் இருந்து வெளிவரலாம்.

No comments:

Post a Comment