Search This Blog

Tuesday 24 December 2019

தொழிலுக்கான காரகங்களும்,காரணிகளும்.



தொழிலுக்கான காரகங்களும்,காரணிகளும்.



         கலைஞர்கள் – (ஆர்டிஸ்ட்) மிதுனம், துலாம், தனுசு ஆகிய இராசிகள் கலைகளுக்கு அனுகூலமான இராசிகளாகும். இவை ஜன்ம இலக்னம், சந்திரா இலக்னம், சூரிய இலக்னமாக கலைகளுக்கு அனுகூலமாகும். கலைஞர்களுக்கு புதன், சுக்கிரனின் தாக்கம் ஜாதகத்தில் அதிகமாக இருக்கும். புதனானவர் ஜாதகருக்கு கலைக்குத் தேவையான, மனதளவில் நல்ல சிந்திக்கும் திறனையும், உடலளவில் நல்ல சாமர்த்தியத்தையும், திறமைகளையும் கொட்டுக் கொடுக்கிறது. சுக்கிரன் இத் திறமைகளையும், சிந்தனைகளையும் ஒன்று திரட்டி, கலைக்கான படைப்புத் திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது. சுக்கிரன் கலையின் அழகை நாம் உணரக்கூடிய திறனை நமக்கு அளிக்கிறான்.  சந்திரன் – சுக்கிரன், சந்திரன் – புதன், செவ்வாய் – சந்திரன் ஆகியோரின் அனுகூலமான பார்வைகளும் அதற்கு உதவுகின்றன.
         கட்டிட வல்லுநர்கள் – (ஆர்ச்சி டெக்ட்) – கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய இராசிகள் இலக்னமாக அமைய, அனுகூலமான நிலையாகும். கட்டிடம், உருவம், அமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்குக் காரகரான சனியே பிரதான கிரகம் ஆயினும், செவ்வாய், புதன் ஆகியோரின் அனுகூல நிலையும் கருதப்பட வேண்டும்.
                  விளையாடு வீரர் – (அதலெட்)  விளையாட்டு வீரர்களுக்கு கன்னி, தனுசு ஆகிய இராசிகள் இலக்னமானால் அனுகூலமானதாக இருக்கும். கிரகங்களில் செவ்வாய், குரு ஆகியோர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர். அடுத்து புதனும், இலக்ன பாவமும், 5 ஆம் பாவமும் நல்ல பார்வைகளைப் பெறுவதோடு இவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
        பல் மருத்துவர் – (டென்டிஸ்ட்) – பல ஜாதகங்களில் குரு, புதன், சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் முக்கியத்துவம் பெறும். அதை போல் பல ஜாதகங்களில் 6 ஆம் வீட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும், 6 ஆம் வீடு, நோயையும், உபாதைகளையும் குறிக்கும். சனி பல்லையும், செவ்வாய் அறுவை சிகிச்சையையும், புதன் கைத்திறனையும், குரு தொழில் வெற்றியையும் ஆளுமை செய்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
         விமான ஓட்டி – ( ஆவியேட்டர் ) –நெஃப்டியூன் மற்றும் புதன் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். தைரிய ஸ்தானமான 3 ஆம் வீடும் பாக்கிய பாவமான 9 ஆம் வீடும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மேலைநாட்டைப் பொறுத்தவரை நெஃப்டியூன் எடுத்துக் கொள்கின்றனர்.
         ஜோதிடர் – மேலைநாட்டினர் யுரேனஸ்ஸை முக்கியமாக்க் கருதுகின்றனர். ஆனால் நாம் கல்விக் காரகன் புதனையே முக்கியமாகக் கருதுகிறோம். புதனுக்கு செவ்வாயின் தெருக்கமான தொடர்பு கணித அறிவை, திறமைகளை அள்ளி வழங்குகிறது.
         ரசவாதி, ரசாயன விஞ்ஞானி - (கெமிஸ்ட்) – சிம்மம், கன்னி, துலாம் இலக்னமாக அமைய அனுகூலமாகி, இத் தொழில் ஏற்படும். செவ்வாய், புதன் ஆகியோரும் அனுகூலமாக, சாதகமாக இருக்க வேண்டும். 6 ஆம் வீட்டின் அமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும்.
         நடனக் கலைஞர் (டான்ஸர்) சிம்மம், கன்னி ஆகிய இராசிகள் இலக்னமாக அமைந்தால் இதற்கு சாதகமான நிலை உருவாகும். சுக்கிரனின் நிலை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். துணையாக புதன், சந்திரன், செவ்வாய் ஆகியோரும் அனுகூலமாக இருக்க வேண்டும். இணக்கத்தையும், ஈடுபாட்டையும், கவர்ச்சியையும் சுக்கிரன் அளிக்கிறார். சந்திரன் நாதத்தை (டியூன்) ஆள்கிறது. நடனம் ஆடுவதற்கான உடல் பலத்தையும், சக்தியையும் செவ்வாய் அளிக்கிறார். நடன அசைவுகளுக்குத் தேவையான நினைவாற்றலை  புதன் அள்ளி வழங்குகிறார். ஜாதகருக்கான தனிப்பட்ட உடல், உருவ அமைப்பைக் குறிகாட்டுவது 5 ஆம் இடமாகும். அதுவே, கேளிக்கைகளுக்கும், சந்தோஷத்திற்குமான பாவமும் ஆகும். மற்றவர்களை மகிழ்விக்கக் கூடிய இடமும் ஆகும்.
         மருத்துவர் – (டாக்டர்) – செவ்வாய் கிரகம் மிகவும் முக்கியமானதாகும். செவ்வாய் அறுவை சிகிச்சை, மருந்து அளித்தல் ஆகியவற்றுக்கான திறமையை அளிக்கிறார். ரட்சகன், காப்பாளன், உபகாரியாக இருக்கும் மருத்துவர்களுக்குக்கு குரு காரகம் பெறுகிறார். 6 ஆம் வீடும், 12 ஆம் வீடும் முறையே நோய்க்கும், மருத்துவமனை படுக்கைகளுக்கும் காரகம் பெறுகின்றன.
         வரைவாளர் – (டிராஃப்ட்ஸ் மேன்) வரைவாளர் ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அடுத்ததாக செவ்வாய் முக்கியமாகிறது. மூன்றாம் வீடும் முக்கியத்துவம் பெறும். புதன் புரிந்து கொள்ளும் சக்தியையும், திறமையையும், செவ்வாய் தேவையான பொறியியல் திறமையையும், சுக்கிரன் கலைத் திறனையும் அளிக்கின்றனர். வரையும் திறமைக்கும், எழுத்துத் திறமைக்கும் மூன்றாம் வீடு காரகம் பெறுகிறது.
         பொறியாளர் – (இன்ஜினியர்) சிம்மராசி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி முக்கியத்துவம் பெறுகின்றன. திட்டங்களை தயாரிப்பதற்கும், செயல் படுத்துவதற்கும் சனி காரணமாகிறார். உருவாக்குவதற்கும், திட்டமிடுவதற்குமான திறமையை செவ்வாய் தருகிறார்.       
         எலக்ட்ரீஷியன் – அனேக ஜாதகங்களில் புதனும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றன. புதன் புரிந்து கொள்ளும் தன்மையையும், செவ்வாய் பொறியியல் அறிவையும் வழங்குகின்றன. மேலும் செவ்வாய் சக்திக்குக் காரகமாவதால் மின்சக்திக்கும் அதுவே காரகம் ஆகிறது.
         விவசாயி – விவசாயத்துக்கு சனியே காரகம் பெறுகிறார். சோர்வு உண்டாக்குகிற கடின உழைப்புக்கு, முக்கியமாக விவசாயத்தை சனியே குறிகாட்டுகிறார். சில ஜாதகங்களில் சந்திரனும் அனுகூலம் செய்கிறார். 4 ஆம் வீடு விவசாயத்தையும், பூமியையும் குறிகாட்டுகிறது. போஷாக்கான சத்துணவை சந்திரன் குறிகாட்டுகிறான்.
         வக்கீல் – (லாயர்) சிம்மம், துலாம், தனுசு ஆகிய இராசிகள் வக்கீல்களுக்குக் காரகம் பெறுகின்றன. முக்கியத்துவம் பெறுகிற பாவம் பாக்கிய பாவம் எனும் 9 ஆம் வீடு ஆகும். சனியும், புதனும், அடுத்து குருவும் முக்கியத்துவம் பெறுகின்றனர். சுறுசுறுப்புள்ள, கடினமான, கஷ்டமான வேலைகளை குறிகாட்டுபவர் சனியாவார். புதன் எதையும் அறிவு பூர்வமாகப் புரிந்துகொள்ளும் தன்மையையும், பேச்சு வன்மையையும் தருகிறார். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுபவர் குரு ஆவார்.
         மெஷினிஸ்ட் – 99 சதவிகித ஜாதகங்களில் செவ்வாயே முக்கியத்துவம் பெறுகிறார். சனி 98% மற்றும் புதன் 95% பங்களிப்பும் பெறுகின்றனர். விருச்சிகமும், சிம்மமும் அனுகூல இராசிகளாகின்றன. மெஷினிஸ்டுக்குத் தேவையான கடின உழைப்பை சனி குறிகாட்டுகிறார். பராமரிப்பு மற்றும் சரி செய்யும் வேலைகளுக்கான, அறிவையும் புதன் வழங்குகிறார்.
         திரைப்பட நடிகர் – (மூவி ஆக்டர்) – செவ்வாய் முக்கியமானவர். பின்னர் புதனும், சுக்கிரனும் முக்கியத்துவம் பெறுகின்றனர். 5 ஆம் வீடு மிகவும் முக்கியமாகிறது. அடுத்து இலக்னபாவம் முக்கியத்துவம் பெறுகிறது. சக்தி மிக்க மனிதனுக்குத் தேவையான சக்தியை தைரிய காரகன் செவ்வாய் அளிக்கிறான். நடிப்புத் திறமையை புதன் அளிக்கிறார். நடிப்புக்குத் தேவையான அழகு, நவநாகரீக உடை மற்றும் கவர்ச்சியை அளிப்பவர் சுக்கிரன் ஆவார்.  
         இசைவாணர் -  (இசையமைப்பாளர், பாடகர்) – முதலில் சந்திரனும், பின்னர் சுக்கிரனும் முக்கியத்துவம் பெறுகின்றனர். கன்னி, கும்பம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளும், 5 ஆம் வீடும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு இசைவாணர் ஆக ஜாதகருக்கு பொறுமையும், பல வருட கடினப் பயிற்சியும் முக்கியமாகிறது. அதற்கு உறுதுணையாய் இருப்பவர் சனி ஆவார். காலம், சுருதி, இசை, ராகம், தாளம் ஆகியவற்றுக்கு சந்திரன் காரகம் பெறுகிறார்.        
செவிலியர் – (நர்ஸ்) – இங்கும் சந்திரனும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஜாதகத்திலும் ருண,ரோக, சத்ரு ஸ்தானமான 6 ஆம் வீடு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், 95 % ஜாதகங்களில் அயன சயன பாவமான 12 ஆம் வீடும் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியகாக செவியிலியர் தொழிலுக்கு கை கொடுப்பது தாய்க்குக் காரகமான சந்திரனே ஆகும். சில செவிலியர் நோயாளிகளிடம் தாய் பாசத்தைக் காட்டுவதைக் காணலாம். சுறுசுறுப்பு, மக்களுக்கு மருந்து அளித்து பேணிக்காத்தல், கடின உழைப்பு ஆகியவற்றை தருபவர் செவ்வாய் ஆகும். சோய்க்கான இடம் 6 ஆம் வீடு, அடைபட்டுக் கிடக்கும் இடம் 12 ஆம் வீடாகும். எனவே, மேலே சொல்லப்பட்டவையவே செவிலியருக்கான காரகங்களாகும்.
காவலர் – (போலீஸ்) – சோதிக்கப்பட்ட 100% ஜாதகத்தில் கிரகங்களான சனியும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றன. நியாதிபதியான சனி குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உடையவர். 12 ஆம் வீடு காவலர் வேலைக்கான பாவமாகிறது. குற்றவாளியைப் பிடிக்கும் வரை மிகவும் கடினமான வேலையாவதால் அதற்கு செவ்வாய் உதவுகிறது. கட்டுப்பாடுள்ள நீதிபதியாக சனி திகழ்கிறார். செவ்வாய் காவலருக்கு வேண்டிய மனோதைரியம் மற்றும் துணிச்சலைத் தருகிறது. உண்மையில், சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரிகள், காவலர் மற்றும் இராணுவ வீரர்கள ஆகியோருக்கு செவ்வாய் காரகம் பெறுகிறார். சமூகத்தின் இரகசிய எதிரிகளான குற்றவாளிகளையும், அவர்கள் இருக்க வேண்டிய இடமான சிறைச்சாலையையும் 12 ஆம் இடம் குறிகாட்டுகிறது.
அரசியல்வாதிகள் ( பொலிடீஷியன் ) – நூறு சதவிகித ஜாதகங்களில் சூரியன் முக்கியத்துவம் பெறுகிறார். 86% சதவிகிதம் புதனும், குரு மற்றும் 10 ஆம் வீடும் மிக முக்கிய காரணிகள் ஆகின்றன. அதிகாரம் மிக்க அதிகார பதவியை அளிப்பவர் சூரியன் ஆவார். தலைமைப் பதவியை சூரியனும், தலைப்பதவிக்கான விவேகத்தையும், சூட்சுமப் புத்தியையும், புத்திசாலித்தனத்தையும்  புதனும் அளிக்கின்றனர். மதிப்பு, மரியாதை, கௌரவம், மக்களுக்கு உதவும் குணம், மிக உரிய பதவி ஆகியவற்றை அளிப்பவர் குரு ஆவார். 10 ஆம் வீடு பொது வாழ்க்கையையும், மேலாண்மை மற்றும் வியாபாரத்தையும் குறிகாட்டுகிறது.
விற்பனையாளர் ( சேல்ஸ் மேன் ) – பார்க்கப்பட்ட பல ஜாதகங்களிலும் குருவின் தாக்கமே அதிகம் இருந்தது. அடுத்ததாக முக்கியத்துவம் பெறுபவர் புதன் ஆவார். வாடிக்கையாளரைக் கவரும் திறமை, அவர்களின் நன்மதிப்பைப் பெறுதல் மற்றும் தனக்கு சாதகமாக்கி வெற்றி அடைதல் ஆகிய திறன்களை குரு அளிக்கிறார். தன் பேச்சுத் திறனால் விரிவாக, விளக்கமா அவர்களிடம் எடுத்துரைக்கும் நாவன்மை, அறிவுத்திறன் ஆகியற்றை அளிப்பவர் புதன் ஆவார். மேலும், குரு பணவிஷயங்களை, பொருளாதாரத்தைக் குறிக்கும் எனினும் வணிகத் திறமையை புதன் அளிக்கிறார். சந்திரனின் பார்வை இருப்பின் ஜாதகர் பொதுமக்களுக்குத் தேவையான பலசரக்குக் கடை, குளிர்பானக் கடை ஆகியவற்றை நடத்துவார். சுக்கிரனின் தாக்கம், பார்வை இருந்தால் ஜாதகர் நவநாகரீக ஆடைகள், நகை வியாபாரம், கலைப் பொருட்கள், பெண்கள் விரும்பக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், சுகந்த, பரிமள வாசனைத் திரவியங்கள் வியாபாரம் ஆகியவற்றைச் செய்வார்.        
ஆசிரியர்- (டீச்சர்) – சூரியன், சந்திரன் அல்லது மிதுனம், கன்னி, தனுசு ஆகிய இராசிகள் இலக்னமாக எழ அவை இத்தொழிலுக்கு சாதகமான, அனுகூலமான நிலையைத் தருகிறது. மேலும், பாக்கியபாவம் என்கிற 9 ஆம்பாவமும், அறிவி விருத்தி அளிக்கும் 5 ஆம் பாவமும் முக்கியத்துவம் பெறுகின்றன.


No comments:

Post a Comment