Search This Blog

Thursday 10 August 2017

குருப் பெயர்ச்சி பலன்கள் -2017 கடகம்,சிம்மம், கன்னி





குருப் பெயர்ச்சி பலன்கள் -2017

கடகம்,சிம்மம், கன்னி.




கடகம்



(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
    தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட சேவை செய்வதே ஆனந்தமாகக் கொண்ட, அறிவாற்றல், பொறுமை, தியாகம் போன்ற நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குருஆவணி 27 ஆம் தேதியன்று சுக பவமான துலாத்திற்கு மாறுகிறார். குரு நான்கில் வந்த போதுதானே தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து  வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே. கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுற்றங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நான்கு கால் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை.  சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் பணியினில் சிக்கல்களும், வருமானக் குறைவுகளும் ஏற்படும். காதல் விவகாரங்களில் வீண்பழி சுமத்தப்படலாம். பிறர் செய்த குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டு தேவையற்ற தண்டனைகள் கூட சிலருக்குக் கிடைக்கலாம்.  மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. வெளி மாநிலங்களில்  சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளி நாட்டில் வேலை பார்த்தவர்கள் தாய்நாடு திரும்பு நேரிடும். புதிய தொழில் வாய்ப்புகள் சிரமத்திற்குப் பிறகே ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் கவனச் சிதறல்களுக்கு ஆளாகாமல் கவனமாகப் படித்தாலே தேர்ச்சி பெற முடியும். நல்ல நட்புக்களை நாடிச் செல்வதே நல்லது. தச்சு வேலை, கட்டிட வேலைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பிரிந்து வேறு இடத்தில் வேலே செய்ய வேண்டியதிருக்கும.
       குரு தனது 5 ஆம் பார்வையால் 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மர்ம ஸ்தானத்தில் ஏற்பட்ட நோய்கள் மறையும். மரண பயம் விலகி ஆயுள்பலம் உண்டாகும். மனைவி மூலமாக வரும் தனத்துக்குப் பஞ்சம் இராது. தடைகள் விலகி மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.  உடல் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அதை தைரியமாக மேற்கொள்டு சுகம் பெறலாம்.
       குரு தனது 7 ஆம் பார்வையாகப் 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக தேறாது என முடங்கிய தொழில்கள் கூட துளிர்த்து எழும். உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கை கூடிவந்து மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வங்கிக் கடன் உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.
      குரு தனது 9 ஆம் பார்வையாக 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். உண்ண உணவு, சுகமான நித்திரை ஆகியவற்றிற்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள்.  கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குடும்பத்தில் நிலவி வந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.  
      கடக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
      கடகத்திற்கு   சுவர்ண மூர்த்தியாகி விளங்குவதால் அசுப பலன் பெரும்பாலும் குறையும். (4) 70%

      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.



சிம்மம்



( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
       தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட நெறிமுறைகளுடன் வாழ்பவரும், தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவரும், தன்னம்பிக்கை மிக்கவருமான சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியுமான குருஆவணி 27 ஆம் நாளன்று தைரிய பாவமான துலாத்துக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே சிறப்புத் தரும். சகோதர, சகோதரிகளினால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களின் நயவஞ்சகத்தனத்தால் ஏமாற்றப்படுவீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. புதிது புதிதாக தேவையற்ற செலவுகள் வந்து கைப்பணம் கரையும். தொழில் வளர்ச்சிக்காகச் கூடுதலான முதலீடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை எழும். முதலீடுகளை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும்.   எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்.   அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். உறவுகளும் பகையாகும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள்  அதிகரிக்கும். தான தர்மமென தர்மச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களான அலைபேசி போன்றவற்றில் அதிக காலம் செலவழிப்பதால், கல்வியில் ஈடுபாடு குறைந்து, கழுத்து வலியே மிச்சமாகும்.  சிலருக்கு, கௌரவ பங்கம், ஊரார் சிரிக்கும் அளவுக்கு அவமானங்கள் ஏற்படும். முரடராய் இருந்தாலும், தைரியமற்ற கோழை ஆகிவிடுவார். சந்தோஷமற்ற, குறிக்கோளற்ற அலைச்சல்களால் சரீரக் களைப்பு ஏற்படும்.

       குரு தனது 5 பார்வையாக களத்திர பாவத்தை பார்வையிடுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன தோழர்கள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சேவைகள் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே காதலும், பாசமும் கரைபுரண்டு ஓடும். காதல் விவகாரங்கள் கல்யாணத்தில் முடியும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.
        குரு 7 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் சென்று தெய்வீக அருளைப் பெறுவீர்கள். தந்தையின் புகழ் ஓங்கும். பிள்ளைகளின் மீது காட்டும் அதிக அன்பால் அவர்கள் மனம் மகிழும். தாயாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தந்தை வழி சொத்துக்களில்  ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து சாதகமாய் அமையும். தந்தை  மூலமான எதிர்பாராத ஆதாயங்கள் இருக்கும். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய  அம்மாவாசை படையல்களை முறையாகச் செய்துவர சந்ததிகள் வளம் பெருகும்.
        குரு 9 ஆம் பார்வையாக இலாப பாவத்தைப் பார்ப்பதால் கலைத் துறையினர், ஆடம்பர பொருட்களை விற்பவர்கள், இனிப்பு தயாரிப்பாளர்களின் விற்பனை சூடு பிடித்து இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின்  முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் காரணமாக அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தங்கள் திருமண வயது எய்திய பிள்ளைகளுக்குத் திருமணங்கள் ஏற்பாடாகி, மங்கள காரியங்கள் நிறைவேறும். புதிதிர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம் ஏற்படும்.

                  சிம்ம இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
      சிம்மத்திற்கு -  தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 60%

      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.






கன்னி



( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
      புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட நல்லவரும், பெற்றோரை அன்போடு பேணிக்காப்பவரும், தருமவானும், இரக்க குணமும் உடையவரான கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குருதுலா இராசிக்கு ஆவணி 27 இல் மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் காலம். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் வருமானங்கள் பெருகி, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். தேவதை போன்ற அழகிய மனைவி அமைவாள். குழலைவிட இனிதான குரலுடைய குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும் புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றம் அடைவர். அந்தஸ்து, கௌரவமும் கூடும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுச் சேவையில் ஈடுபட்டோருக்கு இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடிவரும். அதன் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும். சிலருக்கு தெய்வீக அருளால் கோவிலில் அறங்காவலர் போன்ற பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தர்ம காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.     
       குரு 5 ஆம் பார்வையாக ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து குடும்ப ஆரோக்கியம் குறையும். உடன் பிறப்புக்களுக்கு யோகம் ஏற்பட்டு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். அன்பு தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும்.

        குரு 7 ஆம் பார்வையாக  ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தீர்க்க முடியாது என்று நினைத்த நோய்கள் மருத்துவர்கள் உதவியுடன் நிரந்தரமாக சரியாகும்.  மங்கையருக்கு நிச்சியக்கப்பட்ட மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும்.  வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.  பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  நல்ல செய்திகள் கிடைக்கும்.    

       குரு தனது 9 ஆம் பார்வையால் கர்ம பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல உயர்வான வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, சிறப்பான பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் குவியும். புதிய வீடு, மனை  வாங்கும் யோகங்களும் அமையும்.  விவசாயிகள், தொழில் துறையைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பர்.  

       கன்னி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
       கன்னி -    ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (2) 90%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

No comments:

Post a Comment