Search This Blog

Thursday 25 April 2019

விகாரி - பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு.


விகாரி வருட பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு.

துலாம்
70%
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

        அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
        சூரியன்ஆடி மாதத்தில் தங்களுக்கு வெற்றியைக் குறிகாட்டுகிறான். எனவே கையிலெடுத்த முக்கிய காரியத்தின் முடிவு வெற்றிகரமாகவே முடியும். சந்தோஷம், செல்வம் மற்றும் நோயினின்று விடுதலை ஆகியவை ஏற்படுகின்றன. மிக்க சுகம் உண்டாகும். ஸ்கூட்டர் போன்ற உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் காசுகள் சேரும். பல வழிகளிலும் இலாபம் ஏற்படும்.
        ஆவணியில்  புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை மற்றும் முனேற்றங்களைத் தருகின்ற மாதம் ஆகும். பிறர் மேல் இரக்கம் ஏற்படும்.குடும்ப சுகம் பூர்ணமாகக் கிடைக்கும். வாக்கு வன்மையால் இலாபம் கூடும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் சுபகாரியங்கள் நடக்கும்.
        மார்கழியில் பகைவர்கள் அடிபணிவர். வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். தனக்கு விருப்பமான மனைவி அல்லது பெண்ணின் உறவு ஏற்படும். பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவார். சுய சம்பாத்தியத்தால் பணம் பெருகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். கௌரவம் ஏற்படும். தானதரும்ம் செய்வார்.
        பங்குனியில் வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகிவிடும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும். ஞானம் மேலிடும். கல்வியில் வெற்றி ஏற்படும். அரசுத் துறையால் இலாபம் அல்லது உத்தியோக வாய்ப்பு ஏற்படும். நெடுந்தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. அத்தியாவசிய பண்டங்கள் வீட்டில் நிரம்பி வழியும். மனதில் குதூகலமும் தெம்பும் அதிகமாகும். கைவிட்ட முயற்சிகள் எளிதில் கை கூடும்.
    செவ்வாய்மார்கழி, பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் மட்டும் செவ்வாய் சிறப்பான பலன்களைத் தருவார். விவாகம் நடக்கும். சந்ததி உருவாகும். வழக்குகளில் வெற்றியும், உயர்அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். அதன் பிறகு பூமிலாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். சொகுசு மற்றும் ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். சகோதரரால் நன்மை உண்டு. எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். உடலில் ஒளியும், பொலிவும் உண்டாகும்.ஆனந்தம் பொங்கும். சத்ரு ஜெயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணத்தால் இலாபம் ஏற்படும்.சுக வாழ்க்கையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் கிடைக்கும். பலவகைப் பரிசுப் பொருட்களும் கிடைக்கும்.
    புதன் – பங்குனி, வைகாசி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களைத் தருவார். பேச்சால் இலாபமும்கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொடர்ந்து வரும் மாதங்களில்அலைச்சல் தரும் பயணங்களும், மரியாதையையும், புகழையும் தரும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். பின் வரும் மாதங்களில் நம்பிக்கையான நட்புறவு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும். உறவுகளுக்கு முன்னேற்றமும், நற்குணங்களும் ஏற்படுகின்றன. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிரிகளை வெல்வர். நிலுவைக் கடன்கள் வசூலாகிவிடும். தொழில் முறையில் வெற்றி கிட்டும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வீடு, நிலம், வாகனம் வாங்குவீர்கள். பொதுச் சேவையில் மனத் திருப்தி ஆகியவை ஏற்படும்.
    சுக்கிரன் – பங்குனி, சித்திரை, ஆடி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார். மனதுக்கும் உடலுக்கும் சந்தோஷமான நிலை ஏற்படும்.  வாக்கு சாதுர்யத்தினால் பல நன்மைகள் ஏற்படும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புத்தி கூர்மையினால் சிறப்பான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும், நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும். தொடர்ந்து வரும் காலங்களில் ஆசிரியர் உதவி, அறிவு விருத்தி ஆகியவையும், பின் வரும் காலத்தில் தொழிலில் வெற்றி ஏற்படும். சுற்றமும், நட்பும் செர்ந்து விருந்துண்டு மகிழ்வீர்கள். தீர்த்தயாத்திரை சென்று புண்ணிய ஸ்தல தரிசனங்கள் செய்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
   
       குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு தன மற்றும் தைரிய பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் காலம். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் வருமானங்கள் பெருகி, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். தேவதை போன்ற அழகிய மனைவி அமைவாள். குழலைவிட இனிதான குரலுடைய குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும் புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றம் அடைவர். அந்தஸ்து, கௌரவமும் கூடும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுச் சேவையில் ஈடுபட்டோருக்கு இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். தைரிய பாவ குருவால் பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, தடை தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும். எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்.   அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். உறவுகளும் பகையாகும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள்  அதிகரிக்கும். தான தர்மமென தர்மச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களான அலைபேசி போன்றவற்றில் அதிக காலம் செலவழிப்பதால், கல்வியில் ஈடுபாடு குறைந்து, கழுத்து வலியே மிச்சமாகும்.  சிலருக்கு, கௌரவ பங்கம், ஊரார் சிரிக்கும் அளவுக்கு அவமானங்கள் ஏற்படும். முரடராய் இருந்தாலும், தைரியமற்ற கோழை ஆகிவிடுவார். சந்தோஷமற்ற, குறிக்கோளற்ற அலைச்சல்களால் சரீர களைப்பு ஏற்படும்.

         

தைரிய பாவச் சனி தரும் பலன்கள்
          சனி - காலபுருஷ தத்துவத்துக்கு 7 ஆம் பாவமான அசுர குருவை அதிபதியாகக் கொண்ட துலா இராசியில் தைரிய பாவச் சனியாகி சுப பலனே ஏற்படும். இந்தப் பெயர்ச்சி இதுவரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலமாக இருக்கும். மனதில் எப்போதும் உற்சாகம் பொங்கும். இந்த சனிப் பெயர்ச்சி இராஜயோகத்தைத் தரும். கார் போன்ற உயர்தர வாகன வகைகளை வாங்குவீர்கள். வசிக்க நல்லதொரு இல்லமும் அமையும். உடன்பிறப்புகளுக்கும் நல்லதிர்ஷ்டம் ஏற்படும். ஒருவர் கோழையாக இருந்தாலும் பகைவர்கள் மீது சீறிப் பாயும் சிங்கமாக மாறிவிடுவார். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். கால்நடைச் செல்வங்களும் பெருகும். வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்கள் தங்கு தடையின்றி தாராளமாக இருக்கும். கல்வியில் கவனம் தேவை. தொழிலில் அதிக இலாபங்களை எதிர்பார்க்கலாம். காதல் விஷயங்கள் கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். தள்ளிச் சென்ற சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நடக்கும். அடிக்கடி பல சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு களிப்பெய்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சேமிப்புகள் கை கொடுக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் தாராளமாய்க் கிடைக்கும். அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டியதிருக்கும். ஆன்மிகப் பயணங்கள் தொடரும். பல வழிகளிலும் புகழ், சுகம் ஆகியவை ஏற்படும். புதிய சொத்துக்கள் சேரலாம். அரசாங்க ஆதரவு உண்டு. பதவி உத்தியோகத்தில் எதிர்பார்த்த நிலைகளை எய்துவீர்கள். இஷ்டப்படி கஷ்டமில்லாமல் இட மாற்றங்கள், பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றி அடையும். தலைமைப் பதவிகள் தானாகவே தேடிவரும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  புகழ், கௌரவம் ஓங்கும். பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் உடனடியாகவே கிடைக்கும். தினமும் பால் சோறும், உயர்தர ருசி மிக்க உணவும் கிடைக்கும். அஷ்டலட்சுமி கடாச்சமும் ஏற்படும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

         பாக்கிய பாவ இராகுவும், தைரிய ஸ்தான கேதுவும் தரும் பலன்களைப் பார்ப்போம்.  விஹாரி வருடத்தில் இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம்.

        இராகுவின் கோசார நிலை தன விரயம் தரும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. நெருங்கிய உறவுகள், பிடித்தமான நண்பர்கள் எவரையேனும் பிரிய நேரும். அதனால் கஷ்டங்களும், மனக் கவலைகளும் ஏற்படும். சிலருக்குக் கூடா நட்பால் கேடாய் முடியும். நல்லதை நினைக்காமல் பாவ காரியங்கள் செய்யவே சிந்தை செல்லும். சிலர் பிற மத ஒழுக்கத்தை பின்பற்ற நேரலாம். தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். ப்ளாக் மேஜிக் எனப்படுகிற மாந்திரீகம், பில்லி, சூன்யம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். சிலருக்கு பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என சொல்வதற்கில்லை. குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது அரிது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். ஆனால், எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். எச்சரிக்கை தேவை. தொழிலில் மந்த நிலையே காணப்படும்.

       கேதுவால் பிறருடன் ஏற்படும் மோதல்களிலும், பூசல்களிலும் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் மறைவர் எதிர்ப்புகள் விலகும். எல்லாவகையிலும், எல்லா வழிகளிலும் பணவரவு மேலும் மேலும் உயரும். பல வகைகளிலும் பெரும் புகழும் ஓங்கும். எவர்க்கும் எவ்விதமான வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னது, சொன்னபடி மறக்காமல் நிறைவேற்றி விடுவீர்கள். மகாராஜன் போல் வாழ்வர். மனோதைரியம் கூடும்.  உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்க்க் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். இளைய சகோதர உறவு மேம்படும். அவரால் ஆதாயமும், உதவிகளும் கிடைக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். அவனுக்கு என்னடா ? இராஜா என உங்களைக் கண்டு மூக்கின் மேல் விரலை வைப்பர். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகசெலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவால் நன்மை அடைவீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று திரும்புவீர்கள். சிலருக்கு மேக நோய்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் -  சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபட வந்த துன்பங்கள் வந்த வழியே சென்றுவிடும். இராம பக்த அனுமனையும், தும்பிக்கையோனையும் துதித்துவர சனியின் பாதிப்புகள் குறையும். கும்பகோணதில் இருந்து 6 கி. மீ. தூரத்திலுள்ள இராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்று பாலபிஷேகம் செய்து வேண்டி வணங்கிவர இராகுவால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சுபம்.


  
விருச்சிகம்
60%
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
    தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
    சூரியன்சித்திரை மாதத்தில் இருக்கும் போது கைக்கு வரவேண்டிய நீண்டகால கடன் நிலுவைகள் வசூலாகும். வங்கி கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். எதிரிகள் மறைவர். எதிர்ப்புகள் மறையும். அவர்களை எளிதில் வென்றுவிடுவீர்கள். பங்காளிப் பிரச்சனைகள் தீரும். வியாதிகள் குணமாகும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.
        ஆவணி மாதத்தில் நல்லவர்களின் நட்புக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோக உயர்வுகள் ஏற்பட்டு, வருமானமும் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்கள் நன்மை பயக்கும். தெய்வ வழிபாடுகளால், மன நிறைவும், மன அமைதியும் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெறும்.
         புரட்டாசி மாதத்தில் தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தான தருமங்கள் செய்வர். பிறர் மேல் இரக்கம் ஏற்படும். குடும்ப சுகம் பூர்ணமாகக் கிடைக்கும். சிறந்த வாகன யோகம் கைகூடும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பாக்கியம் கூடும். வாழ்க்கையில் அதிர்ஷ்டமான திருப்பங்கள் ஏற்படும். புதிய பதவி, மரியாதை, அந்தஸ்து ஆகியவை ஏற்படும். பெரியவர்கள் மூலமாக காரிய அனுகூலங்கள் ஏற்படும்.
         தை மாதத்தில் எதிரிகளை வெல்வர். வெற்றிமேல் வெற்றி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தைரியத்துடன் எம் முயற்சியிலும் இறங்குவீர்கள். அந்தஸ்து உயரும். தான தர்மம் செய்வர். பிள்ளைகள் மூலமாக இன்பமும், துன்பமும் மாறிமாறி வரும். புதிய பெண்ணின் உறவு ஏற்படும். பிறருக்காக வாதாடி ஒஎற்றி பெறுவார். வீராதி வீரர் ஆவார். எல்லோரும் இவரிடம் நட்புக் கொள்வார்கள். கௌரவம் கூடும். நீதிபதியும் ஆவார்.
    செவ்வாய்தை, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் எல்லாம் சுபமாகவே நடக்கும். ஆடை ஆபரணங்களும் சேரும். திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும். உடன்பிறப்பால் நன்மைகள் ஏற்படும். உடலில் ஒளியும் பொலிவும் கூடும். சிலருக்கு எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். ஆயுள் விருத்தி ஏற்படும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். வேதம் கல்வி இவற்றில் தேர்ச்சி ஏற்படும். வீரம் பெருகும். சகோதரரால் நன்மை ஏற்படும். கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை ஏற்படும். அவர்கள் மூலம் பணவரவும் ஏற்படும்.
    புதன்சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களைத் தருவார். சிலருக்குக் கல்வியில் தேர்ச்சியும், அரசு உத்தியோகமும் கிடைக்கலாம். எழுத்துத் தொழில் ஏற்றம் தரும். பல பரிசுகளும், கௌரவமும் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பர். பின் வரும் காலங்களில் சாதுர்யமும், சாமர்த்தியமும் பெருகும். பங்கு மார்க்கெட் வகையில் அதிக லாபம் அடைவர். பயன்தராத முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். செய்தொழிலில் இலாபம் உண்டு. செல்வாக்கு பெருகும். பொதுச் சேவையில் மனத்திருப்தி உண்டாகும்.
      சுக்கிரன்சித்திரை, வைகாசி, ஆவணி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். உபயோககரமான மற்றும் மகிழ்ச்சிகரமான பயணங்கள் ஏற்படும். விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பின்னர் வரும் சிலருக்கு வாங்கிய கடன்கள் அடயும். சொத்துக்கள் சேரும்விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர். அறிவும், புகழும் கூடும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் ஏற்படும். தர்ம காரியங்கள், தெய்வ கைங்கரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
குரு தரும் பலன்கள்
       குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு ஜென்ம மற்றும் விரய பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். ஜென்ம இராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும் ‘ – என வரும் பழம் பாடல் படி இராம பிரானுக்கே அந்த கதி என்றால் நமக்கு. அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு பள்ளமென அலைந்து திரிய நேரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். விரய பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். எவ்வளவு பொருள் வரவுகள் இருந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட சம்பந்தமான செலவுகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்தொலை தூரப் பயணங்கள் மூலமான செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். மூத்த சகோதரர்களுக்குப் பல வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம்.

தன பாவ சனி தரும் பலன்கள்
         உங்கள் இராசிக்கு 3 மற்றும் 4 ஆம் ஸ்தானாதிபதியான சனி தங்கள் தன பாவத்தில் உள்ளார். இதுவே ஏழரைச் சனியின் கடைசி காலகட்டமாகும். இதன் காரணமாக கோசார நிலை தன விரயம் தரும். தொழிலில் மந்த நிலையே காணப்படும். உங்களைப் பற்றிய விமர்சனங்களைப் புறந்தள்ளி உங்கள் முன்னேற்றத்தில் கவனம் வையுங்கள். மனோதைரியம் கூடும்.  உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்கக் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகச் செலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். இந்த சஞ்சாரத்தின்  இறுதிக் காலத்தில் நன்மையான யோக பலன்களை கொடுக்கவே செய்வார். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அரசியல் பிரமுகர்களுக்கு கௌரவம், புகழ், அந்தஸ்து உயரும்.  சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
இராகு – கேது பலன்கள்  
         ஆயுள் பாவத்தில்  இராகுவும், தனுசு இராசியான தன பாவத்தில்   கேதுவும் இருப்பதால்,  இராகுவால் சுமாரான பலன்களையும், கேதுவால் மத்திமமான பலன்களையும் அடைவீர்கள்.  

        இராகுவால் பரம்பரை சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மந்திர ஜாலங்களை பற்றிய அனுபவங்களை பெறுவீர்கள். பிறருடைய பணம், சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். மனைவியிடம் பூர்ண படுக்கை சுகம் கிடைக்கும். மிகவும் நேசிப்புக்கு உரியவர்களின் பிரிவு அல்லது நோய் கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஏதேனும் தொல்லைகள் எழலாம். பலவிதமான நோய்கள் காரணமாக கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் ஓர் இனம் புரியாத பீதி இருந்து கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் வகைகளில் பிறர் சூழ்ச்சியால் தோல்வியும் அதன் காரணமாக இழப்புகளும் ஏற்படலாம். எந்த்த் தொழிலிலும் ஈடுபடாதிருப்பதே நல்லது. ஏனெனில், ஈடுபடும் எதுவுமே ஒத்துவராது. மருத்துவர்களாலும் கண்ணுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படலாம். காரியத்தடைகளும், வீட்டில் களவு போகுதல் ஆகியவையும் ஏற்படலாம். அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார், கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும், பணம் பல வழிகளிலும் குவியும் என எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகப் பொருளாதார நிலையை விருத்தி செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வர். தொழில், வியாபாரத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே, போட்டிகளைச் சமாளித்து வெற்றிபெற முடியும்.

        கேதுவின் தனபாவ அமர்வு பணி இட மாற்றஙுகளைக் குறிகாட்டுகிறது. பொருளாதாரப் பின்னடைவுகள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். அன்றாட         வாழ்க்கையில் நடக்க வேண்டிய அன்றாடப் பணிகளில் தாமதங்களும், ஏமாற்றங்களும், கவலைகளை அதிகரிக்கும். கடன்களை திரும்ப அளித்தல், செலவினங்களை சரிக்கட்டுதல், தொழில் முனைதல் போன்றவைகளும் பாதிக்கப்படும்.    பலருடன் பகை உண்டாகும். சிலருக்கு அன்றாட உணவுக்கே கூட சிக்கலாகலாம். கிடைத்தாலும் தரங்கெட்ட உணவாகவே இருக்கும். நாக்கின் அடிப்பாகத்தில் புண்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலை ஏற்படலாம். தொழில் வளர்ச்சி  நல்ல முன்னேற்றத்துடன் இருக்காது.  தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சியை விட துன்பத்தையே அளிக்கும். மனைவி மக்கள் ஆரோக்கியம் பெருக மருத்துவ சோதனைகள் தேவைப்படலாம். பிறருடன் சுமுகமாக நடந்தால் பிரச்சனைகள் விலகும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். தேய்பிறை போல் நாளுக்கு நாள் சந்தோஷமும், செல்வமும் குறையும். வியாபாரத்தில்  உற்சாகம் குறைந்து தொய்வு நிலை காணும். அரசு அதிகாரிகளுக்கு  கட்டளையிடும் பெரும் பதவி கிடைத்தாலும், தொல்லைகளும் இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

 பரிகாரம் – சேவற்கொடியோனை சேவித்துவர சிறப்பான எதிர்காலம் உண்டு. சனிக் கிழமைகளில் சனிபகாவனுக்கு விளக்கேற்றி நீல வண்ண வஸ்திரம் சாத்தி, வணங்கி வழிபட்டுவர நல்லதே நடக்கும். இராகு பரிகாரமாக உளுந்தை 9 பாகமாக்கி, ஒவ்வொன்றையும் துணியில்கட்டி 9 நாட்களுக்கு தலைக்கு அடியில் வைத்து படுத்து 9 ஆம் நாள் அனைத்துயும் ஒரே துணியில் கட்டி, தலையைசுற்றி நீர் நிலையில் தத்தம் செய்ய தோஷங்கள் நீங்கி நலம் பயக்கும்.


தனுசு
65%
 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
                  தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
        சூரியன்வைகாசி மாதத்தில் தனவிருத்தி ஏற்படும். வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை குறையும்பங்காளிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். காம சுகத்தில் பூர்ண மனநிறைவு ஏற்படும். ஞானம் மேலிடும். அரசுத் துறையால் இலாபம் ஏற்படும். உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். பயிர் விளைச்சல்கள் ஏற்படும். வீட்டில் அத்தியாவசிய பண்டங்கள் நிரம்பி வழியும். நெடுந்தூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும்.
       புரட்டாசி மாதத்தில் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மைதரும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். தெய்வபக்தி யும், தர்ம சிந்தனையும் உண்டாகும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். இவர் பிரசித்தி அடைவார். திருப்பணிகளும் செய்வார். சாதிக்க முடியாத அல்லது இதுவரை யாரும் சாதிக்காத முடியாத ஒரு பெரிய காரியத்தை இது சமயம் செய்து முடிப்பார்.  
       ஐப்பசி மாதத்தில்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். பல முகாந்திரங்களிலும் பணவரத்துப் பெருகும். பகைகளை வெல்லலாம். தானம் செய்வார். குடும்ப சுகம் பூர்ணமாகக் கிடைக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள், சுபகாரியங்கள் நடக்கும். சூரியன் இலாபத்தில் சரீர திட ஆரோக்கிய சுகம், இலாபம் பொன்ற எல்லா வகையிலும் நன்மையே செய்வான்.  
        மாசி மாதத்தில் ஆரோக்கியம் சீராகும். சகோதரரால் நன்மை உண்டு. சுய சம்பாத்தியத்தால் பணவரவு அதிகரிக்கும். எல்லோரிடமும் நட்புக் கொள்ளவர். கௌரவம் கூடும். பல விதத்திலும் புகழ் உண்டாகும். சிலருக்கு மக்களுடன் பகையும் சகோதர பீடையும் உண்டாகலாம். தனக்கு விருப்பமான பெண்ணின் உறவு ஏற்படும். தைரியத்துடன் எந்தவொரு முயற்சியிலும் இறங்குவீர்கள்.  
    செவ்வாய்மாசி, வைகாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்கள் ஏற்படும். சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப் பெருகும். எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் அல்லது வாணிபத்தால் இலாபம் கிடைக்கும். அதன் பின்னர் வரும் காலத்தில் கால்நடைச் செல்வம் பெருகும். பிற மாதங்களில் பெண்களுக்கு அடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம் ஏற்படலாம். பொருளாதார நிலை உயரும். புகழும் ஓங்கும். விரயச் செலவுகள் குறைந்து கையில் பணம் நிற்கும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.
    புதன்வைகாசி, ஆடி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் புதன் நல்லபலன் தருவார் நிம்மதியும் சுகமும் ஏற்படும். புத்தி தெளிவுறும். உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும். ஓரு அரசனைப்போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகமிருப்பர். அடுத்து வரும் மாதங்களில் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வாக்குவன்மையால் வருமானமும், புகழும் உயரும். பின்வரும் மாதங்களில் பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். சிலருக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
    சுக்கிரன் – வைகாசி, ஆனி, புரட்டாசி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களும் சுக்கிரன் நன்மைகளே செய்வார். பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். எல்லா வசதிகளுடனும் கூடிய எழிலான இல்லம் அமையும். சொற்பொழிவுத் திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும்மனைவி வயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள். பின் வரும் காலங்களில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்குத் தலைமைப் பதவி தேடிவரும். தனக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதுபோக்குவான். புத்திர வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். லாட்டரி, சூதாட்டம், புதையல் போன்றவைகளினால் ஆதாயம் ஏற்படும்.

குரு தரும் பலன்கள்
       குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு விரய மற்றும் ஜென்ம இராசி பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். விரயத்தில் பயணிக்கும் காலத்தில் வேளாவளைக்கு வாய்க்கு ருசியான உணவு கிடைக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பிறருக்குப் பிணையாகக் கையெழுத்துப் போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். கடன் வாங்கிக் கடல் வாணிபம் செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும். அரசுடன் தேவையற்ற பகை உண்டாகும். சுப விரயமும், அசுப விரயமும் மாறிமாறி ஏற்படும். கௌரவ பங்கத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டு தோல்வி அடைய நேரும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் கைபணம் சமயத்தில் உதவாது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். ‘வன்மை யுற்றிட இராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்என்ற பழம் பாடலுக்கு ஏற்ப பதவி இழக்க நேரும். வேலைமாற்றங்கள் ஏற்படலாம். ஜென்ம இராசியில் இருக்கும் காலத்தில் தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. உங்கள் செயல்பாடுகளில் எப்போதும் ஓர் அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இராஜகோபமும், பொன், பொருள் இலாபமின்மை ஆகியவை ஏற்படும். தகவல் தொடர்பு ஐ. டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்பட்டு, வெளிநாடு செல்வர். குழந்தை இல்லாதவர்கள் புதிதாக குழந்தை தத்தெடுக்க சரியான காலமாகும். சிலருக்குக் குழந்தைகளின் திறமையான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அடிக்கடி மன மாற்றங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
சனி தரும் பலன்கள்
   காலபுருஷ தத்துவத்தின் 9 ஆம் இராசியும், குருவின் ஆட்சி வீடுமான தனுசு இராசிக்கு ஜென்மச் சனியாய் இருக்கிறார். இதன் காரணமாக நோய்கள், பிறருடன் விரோதம், தனவிரயம், சிறைப்பயம், கௌரவக் குறைவு, எல்லாம் உண்டாகும். ஆனாலும், இவை அவர் அவர்கள் திசா/புத்திப்படி மாறுபடும். பணியிடத்தில் சிறப்பாக வேலை பார்த்தாலும், அதிகாரிகள் திருப்தி கொள்ளமாட்டார்கள். அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பர். அதன் காரணமாக அதிகமாக உழைக்க வேண்டியது வரும். உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காது. அக்கம் பக்கத்தாரிடம் அனுசரித்துச் செல்லவும். பிறரிடம் பேசும் போது நாவடக்கம் தேவை. ஆரம்பக் கல்வியில் தடைகள் ஏற்படலாம். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறையும். உடன் பிறப்புக்களால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. தொல்லையே மிஞ்சும். தாயாரின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.  பழைய சொத்துக்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் எழும். கோர்ட் கேஸ் வகைகளில் பிறர் சூழ்ச்சியால் தோல்வியும் அதன் காரணமாக இழப்புகளும் ஏற்படலாம். சுற்றமும் நட்பும் எதிர்ப்பாகி, பகையும் முற்றும். எதிர்பாராத பணிமாற்றங்கள், இடமாற்றங்கள் என சாதகமற்ற நிலையே உருவாகும். எந்த ஒரு காரியத்தையும் தைரியமாகவும், விவேகமாகவும் புதிய சிந்தனைகளோடு செயல்பட்டால் காரியங்கள் வெற்றியாகும்.

இராகு, கேது தரும் பலன்கள்

        களத்திர பாவ  இராகுவும், ஜென்ம கேதுவும் சுமாரான பலன்களையே தருவார்கள்..

       இராகுவின் களத்திர பாவ அமர்வு, வியாபார, தொழில் கூட்டாளிகளின் மூலமான இலாபத்தைக் குறிகாட்டுவதுடன், பொதுவாழ்வில் ஆதாயம், மகிழ்ச்சி மிக்க மண வாழ்க்கை, அனைத்து விதத்திலும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் குறிகாட்டுகின்றது. தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைய வாய்பு உண்டு. அரசு மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் தாமதமாக்க் கிடைத்தாலும், மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அழகு. கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் மறைவர். திருமணம் ஆகாதவர்களுக்கு  மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையில் ஈடுபடும் காலம் கனியும். உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் வெளிக் கொணரும் காலம் இது. இதுநாள்வரை இருந்துவந்த மனழுத்தங்கள், உளைச்சல்கள நீங்கி, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு சீராகச் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். எந்தவொரு காரியத்தையும், எவருடைய தயவுமின்றி, எவருடைய ஆலோசனையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து செயல்படுவதே பாதுகாப்பானதும், சிறப்பானதும் ஆகும். 

       இராசியில் இடம் பெற்ற கேதுவால் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத் திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம் ஆகும்.   எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், சிவபெருமானின் தலையில் அரக்கன் கைவைத்த கதை போல் ஆகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. நண்பர்கள், உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவது சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – திங்கட்கிழமையன்று, திங்களை முடி சூடிய திருச்சிற்றம்பலநாதன் சிவனை, ஒருபோதும் மறவாது வணங்கி வேண்டி வர வல்வினைகள் நீங்கி வாழ்வு வளம் பெரும். இராகுவுக்கு கருவண்ண வஸ்திரம் சாத்தி, பால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி, வணங்கி வேண்டிவர துன்பங்கள் விலகும்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    


No comments:

Post a Comment