Search This Blog

Sunday 29 September 2019



குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019-2020. மேஷம், ரிஷபம், மிதுனம் -





மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தைரியமும், துணிவும், சுறுசுறுப்பும் மிக்க மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

     தங்கள் விரயம் மற்றும் பாக்கிய பாவத்திற்கும் அதிபதியான குரு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்குப்  பெயர்ச்சி ஆகிறார்.பாக்கிய பாவமான ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்.  நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிறு உடல் உபாதைகள் மறையும்.  ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஆகியவை மறைந்து கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். தவத்திலும், பூஜை புனஸ்காரங்களிலும், தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும்.  தந்தையின் முழுமையான ஆதரவு கிட்டும். பொதுமக்களுக்குக் காப்பாளராக இருப்பார். இவர் இடும் கட்டளைகளை பிறர் ஏற்று நடக்கும் வண்ணம் இவருடைய அந்தஸ்து உயரும். வளம் கொளிக்கும் வயல்களால் வசதி வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் இவருக்கென ஒரு தனியிடம், அதுவும் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்வதால் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் சிறந்த பணிக்காக விருதுகள் கிடைக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.

       குரு தனது 5 ஆம் பார்வையால் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் இம் மண்ணில் இவரைப்போல் உண்டோ என பெயரும் புகழும் கூடும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். இதயம் தொடர்பான சிகிச்சைகள், சிக்கலின்றி செய்யப்பட்டு நோய் சீராகும். தனியார் மற்றும் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முதல் நிலை பெற்று பரிசுகளையும் பெறுவர்.

       குரு 7 ஆம் பார்வையாக தைரிய பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக தைரியமாக எடுக்கும் புது முயற்சிகளில் தவறாது வெற்றி அடைவீர்கள். பல நாளாக வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி பெருகி அடகு வைத்த நகைகளை திருப்பிவிடுவீர்கள். அதன் காரணமாக கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகன யோகம் ஏற்படும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் குதூகலிக்க இனிய சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கும். பத்திரிக்கைத் தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு, சுபவாக்கு, கல்வி கேள்வியால் சொற்பொழிவு ஆற்றும் திறன் ஆகியவை மேம்படும். புராண இலக்கிய உணர்வு, சிறு காவியங்களை அனுபவிக்கும் திறன் ஆகியவை மேலோங்கும். தாய்வழியிலும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.
         உத்தியோகஸ்தர்கள் – உயர் அதிகாரிகளால் மேன்மையும் கௌரவமும் கிடைக்கும். பல போட்டிகளுக்கு இடையே தாங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இதுநாள்வரை தடைப்பட்ட பதவி உயர்வு சுலபமாகக் கிடைத்துவிடும். சீருடைப்பணியாளர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு பரிசுகளும், பதக்கங்களும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
         வியாபாரிகள் -  சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப வியாபார நுணுக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலமாக, அதிக லாபம் அடையலாம். தாதுப் பொருட்கள், உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும். அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைந்து மனதில் நிம்மதி பிறக்கும்.
         கலைஞர்கள் – கலைஞர்கள் கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டிவரும். ஆயினும் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். சின்னத்திரை கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். ஏனினும் தேவையில்லாத நபர்களிடம் நெருங்கிப் பழகுவது நல்லதல்ல. காதல் விவகாரங்கள் தலை தூக்கினாலும் கட்டுப்பாடோடு இருந்தால் அவமானங்களில் இருந்து தப்பிக்கலாம். இசைக்கலைஞர்களுக்கு ஏற்றமான காலம் ஆகும்.

        விவசாயிகள் ;- உளுந்து, மிளகாய், கரும்பு, கிழங்கு, நெல், தென்னை ஆகிய பயிர் விளைச்சல்கள் விவசாயிகளுக்கு ஆதாயம் தரும். அதனால் வருமானம் உயரும். பழைய கடன்கள் தீரும். அரசு உதவிகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகள் ஈடேறும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் விரைவில் சிறப்பாக நடக்கும்.

.       பெண்கள் ;  பணிபுரியும் பெண்களுக்கு நெடுநாட்களாகத் திட்டமிடப்பட்டிருந்த புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பிள்ளைகள் தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பதால் மனஅமைதி குறையும். சிலர் தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சமயோஜித புத்தியால், முறியடித்து முன்னேறுவர். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். கணவனின் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டொடும். அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும், இல்லையெனில் கவனக் குறைவால் காரியங்களில் தடைகள் ஏற்படும்.
       மாணவர்கள் ; மாணவர்கள் தங்கள்  தேர்வுகளில் வெற்றிபெற கருத்துடன், கவனமாகப் படித்தல் அவசியம். ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், நன்றும், இன்றே செய்என எந்தக் காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாமல் இன்றே செய்து முன்னேற முயல வேண்டும். மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். மாணவர்கள் தங்கள் நினைவாற்றல் பெருகவும், கல்வித் திறன் அதிகரிக்கவும் ஹைக்ரீவர் ஸ்லோகத்தை தினமும் சொல்லுதல் வேண்டும்.
               மேஷ இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக  மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 85%
     ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். ஶ்ரீதத்தாத்ரேயரை வணங்குதல் சிறப்பு.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
        களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான, பிறரைக் கவர்ந்து நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, குரு பகவான்  பெயர்ச்சி ஆகிறார். தங்கள் இராசிக்கு ஆயுள் மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுவரை களத்திர  பாவமான  7 ஆம் இடத்தில் சஞ்சரித்து தற்போது 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்.  தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கும். இந்த, குருவின் தற்போதைய ஆயுள் பாவ மாற்றத்தால் இம்மை எட்டில் வாலி பட்டம் இழந்து போம்படியானதும்’ – என்ற பழம் பாடலின்படி, இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். பணமுடையும் ஏற்படும். தாள முடியாத மனக் கஷ்டங்களும், அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுதல் ஆகியவை ஏற்படும். காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற இலாபமோ, பலனோ எதுவும் இராது. அக்னி விபத்து, அரச கோபம், சரீரக் கஷ்டம் ஆகியவை ஏற்படும். உடல் பலஹீனமும், சோர்வும் ஏற்படும்.   தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன் வாங்கியவர்களிடம் இருத்து வரவேண்டிய பாக்கிகள், நிலுவையாவதால், பொருளாதாரச் சிக்கல்கள் எழும். தந்தை மூலமான விரயங்கள் தவிர்க்க முடியாத்தாகும். மனைவி மூலமான வருமானங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். மனதளவிலும், உடலளவிலும் இன்னல்கள் எழும். சிலர் தங்கள் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் காதல் விவகாரங்களால் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளிப்பர்.
       குரு தனது 5 ஆம் பார்வையால் விரயபாவத்தைப் பார்ப்பதால், செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் என சம்பாத்தியம் காரணமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்லவேண்டிய சூழல் உருவாகும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய நேரும்.  உடன் பிறப்புகளுக்கு தொழில் மேன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படும்.

      குரு தனது 7 ஆம் பார்வையால் தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். காப்பீட்டுத் திட்டம் மூலமாகவோ, பங்கு சந்தை மூலமாகவோ ஆதாயங்கள் பெருகும். ஏதேனும் ஒரு வகையில் பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். அரசாங்கம் மூலமாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் உடன் இருப்பவர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் சுக பாவத்தை பார்வை செய்வதால் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் ஆசை நிறைவேறும். மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உருவாகும். மனையாளுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வழக்குகள் வெற்றி அடைந்து முடிவுக்கு வரும். தாயின் ஆரோக்கியம் பெருகி, தந்தைக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும்.
       உத்தியோகஸ்தர்கள் – பணியிடத்தில் பிரச்சனைகள்ளில் இருந்து தப்பிக்க வாய்க்குப் பூட்டு போட்டுக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற அவமானங்களைத் தவிர்க்க சக பெண் ஊழியர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. கையூட்டு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த பணி உயர்வுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.
         வியாபாரிகள் – வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் எழலாம். வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்சி தொழில் செய்பவர்களுக்கு பண பரிவர்த்தனைகளில் தாமதங்கள் ஏற்படலாம். இரும்பு, வெள்ளி, மரம், உதிரிப்பாக தொழில் புரிபவர்கள் ஓரளவு இலாபத்தை எதிர்பார்க்கலாம்.
         கலைஞர்கள் – சினிமா, தொலைக்காட்சி கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தொடக்கத்தில் சாதகமாக இல்லாவிட்டாலும் பிற்பகுதியில் மேன்மையும் பணவரவும் இருக்கும். தொழில் விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.
         விவசாயிகள் ;- திராட்சை, மாதுளை போன்ற பழவகைகள், சோளம், மஞ்சள், கம்பு, கிழங்கு வகைகள், கொடிவகைப் பயிர்களால் ஓரளவு இலாபம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த காரியங்கள் மற்றும் தகவல்கள் அனுகூலமாக வந்து சேரும். வம்பு, வழக்குகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு சாதகமாக அமையும். தோட்டந்துறவுகளில் புதிய முதலீடுகள் செய்வது சிறப்பு. குடுப்பத்தோடு குலதெய்வ வழிபாடுகளுக்குச் செல்கையில், பயணங்களில் எச்சரிக்கை தேவை.
         பெண்கள் ;- திருமணமாகாத பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும். சிலருக்குத் தடைகளும் வரலாம். பணிபுரியும் பெண்கள்  கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர், செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். பதவி உயர்வு, பணிமாற்றம் ஏற்படலாம்.
       மாணவர்கள்;- மாணவ, மாணவிகளுக்கு நல்ல நண்பர்களின் நட்பால் முன்னேற்றம் நிலவும்.  டி.வி. இன்டர்நெட் ஆகியவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்து பாடங்களை கவனமாகப் படித்தால்  தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  தடகளப் போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். வண்டி வாகனங்களை ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.

                           ரிஷப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.  சுமாரான பலன்களே ஏற்படும். 65%

      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
        கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட புத்திகூர்மையுடைய, இரசிப்புத் தன்மையும், சகிப்புத் தன்மையும் மிக்க மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
         தங்கள் இராசிக்கு களத்திர மற்றும் கர்ம பாவாதிபதியான குரு இதுநாள்வரை ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.  அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்யலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் மேன்மையடையும். புண்ணியத்தல யாத்திரைகள் ஏற்படும். பொதுவாழ்வில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். தெய்வீக வழிபாடுகள், பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு நன்மை அடைவீர்கள். ஆன்மீகம் டிரஸ்ட், சேவா டிரஸட், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் நல்வுயர்வை அடைவார்கள். குழந்தைகளினால் வீட்டில் எப்போதும் குதூகலம் திகழும். பெண்களாலும் நண்பர்களாலும் அதிக நன்மைகள் ஏற்படும்.

       கல்வி, கலைத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கிப் பணியாளர்கள், சட்டத் துறை வல்லுனர்கள், நீதியரசர்கள் ஆகியோர் பணிகள் சிறக்கும். கட்டுமானத் தொழில்கள் முன்னேற்றம் காணும்.
  
       குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். மூத்த சகோதரர் மேன்மையடைவார். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தரும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், பணப் பயன்களும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும்.
         குரு இராசியைப் பார்ப்பதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். சமூகத்தில் உயர்வான இடத்தை அடைந்து, மதிப்பு, மரியாதையும் கூடும்உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் இலாபம் உண்டு.
         அடுத்து குரு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய உடன்பிறப்புக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகள் மூலமாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எந்தக் காரியமும் தடைபடாது சிறப்புற நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

         உத்தியோகஸ்தர்கள் – பணியிடத்தில் மிக வளமான காலமாக அமையும். பதவி உயர்வு கிடைத்து பேரும், புகழும் கிடைக்கும். கல்வித் துறையில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சீருடைப் பணியாளர்களுக்கு பதக்கங்களும், பாராட்டுகளும் கிடைத்து புகழ் அடைவர். அந்தஸ்தும் உயரும்.
         வியாபாரிகள் - வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கமிஷன் அடிப்படையில் தொழில் செய்பவர்களுக்கு இலாபங்கள் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் சீரான உண்டு. பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி அதிகரிக்கும். ஆதாயம் பெருகும். 
         கலைஞர்கள் – ரசிகர்களின் பேராதரவு கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் கூடும். தயாரிப்புத்துறையில் உள்ளவர்களுக்கு இதுநாள்வரை இருந்தவந்த பொருளாதாரப் பிரச்சனைகள் குறையும். கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். இசைக் கலைஞர்களுக்கு புதிய பட வாய்ப்புகள், அரசு விருதுகள் ஆகியவை தேடிவரும். விளம்பர நிறுவனங்களுக்கு ஏற்றமான காலமாக அமையும்.
         விவசாயிகள் ;- வங்கிக் கடன்கள் விரைவாகவே அடைபட்டு, புதிய கடன்களுக்கான முயற்சிகள் ஈடேறும். நோய்நொடிகள் நீங்கும். அரசு அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். பெண்கள் மூலமான ஆதாயங்கள் பெருகும். பெரியோர்களின் அனுகூலமான நடவடிக்கைகளால், வீட்டில் நடக்க இருந்த சுபகாரியங்கள் தடை, தாமதங்களின்றி சிறப்பாக நடக்கும்.
         பெண்கள் – பெண்களுக்கு சிறப்பான, உயர்வான காலம் ஆகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். தடைப் பட்டிருந்த திருமணங்கள் சிறப்பாக நடக்கும். தக்க சிகிச்சைகளுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இருந்த பிரச்சனைகள் நீங்கி வீட்டில் மழலைச் செல்வங்கள் தவழும். ஆசிரியப்பணி, வங்கிப்பணி, செவிலியர் பணி போன்ற சேவைப்பணியில் உள்ளவர்களுக்கு சேவைக்கான சிறப்பு விருதுகள் கிடைக்கும்.
         மாணவர்கள் -  மாணவ, மாணவிகளுக்கு நல்ல நண்பர்களின் நட்பால் முன்னேற்றம் நிலவும்.  டி.வி. இன்டர்நெட் ஆகியவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்து பாடங்களை கவனமாகப் படித்தால்  தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  தடகளப் போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். மாணவ மாணவிகளுக்கு சிறப்பான காலம் ஆகும். காதலில் சிக்காமல் கவனமாக இருப்பது அவமானங்களை தவிர்க்க உதவும். படிப்புக்கு ஏற்ற வேலைகள் தேடிவரும். புதிய வாகன யோகம் உண்டு.

    
                மிதுன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவது அரிது. 80%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். சித்தர்கள், மகான்கள், ஞானிகள் வழிபாடு சிறப்பைத் தரும்.




No comments:

Post a Comment