Search This Blog

Sunday 29 September 2019


குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - கடகம், சிம்மம், கன்னி.




கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
                 தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட சேவை செய்வதே ஆனந்தமாகக் கொண்ட, அறிவாற்றல், பொறுமை, தியாகம் போன்ற நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

          தங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு மற்றும் பாக்கியாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து – விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். உங்கள் செயல்பாடுகளில் கோபதாபங்கள் வெளிப்படக்கூடும். எதிரிகளின் தொல்லைகளால் இடர் பட நேரும். தேவையற்ற கடன்கள், அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களின் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் சூழ்ச்சிகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் உண்டாகும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு காரணமாக மாணவ, மாணவியருக்குக் கவனக்குறைவு ஏற்பட்டு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் பின்னடைவு ஏற்படலாம். பகைவர்களின் சூழ்ச்சியால் அரசியலில் வஞ்சனைகளும், துரோகங்களும், தொல்விகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் செயல் படுவது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். உதாசினப்படுத்தும் உறவுகளின் செயல்பாடுகள் மனவருத்தம் அளிக்கும். வீண் பழிகளால் வேதனைப்பட நேரும். அப் பழியால் சிலர் மாமியார் வீட்டுக்குக் கூடப் போக நேரலாம்.

       குரு தனது 5 ஆம் பார்வையாக 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் விரிவாக்கங்கள் சாத்தியப்படும். குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலைகள் உருவாகும். சுபகாரியங்களுக்குக் குறைவிருக்காது. மனைவியின் செயல்படுகள் சிறந்து, காரியம் யாவினும் கை கொடுப்பார். இனிமை மிக்க இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும். தந்தை வழியில் தனவரவு உண்டு. மூத்த சகோதர்ர்கள் இல்ல விழாக்கள் மூலமாக இன்பம் ஏற்பட்டாலும்  பொருட்செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் தங்கள் பகை மறந்து உதவிக் கரத்தை நீட்டுவர்.
       தனது 7 ஆம் பார்வையால் விரய பாவத்தை பார்வை இடுவதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள்  கதவைத் தட்டும். வீட்டில் புத்தாடைகளுக்கான செலவுகள் செய்து மகிழ்வீர்கள். மனைவியின் சிறப்பான, ஆரோக்கியமான உடல் நிலை காரணமாக உறவுகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோர்களின் நிலை சிறப்பாக இருக்கும். அவர்கள் புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
       தனது 9 ஆம் பார்வையாக தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் குடும்பத்தினர் மூலமாக பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். மணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதே நடக்கும். மணம் ஆனவர்களுக்கு தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு எய்துவர். பெற்றோர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். கொடுத்த வாக்குகளை தவறாமல் காப்பாற்றிவிடுவீர்கள்.
         உத்தியோகஸ்தர்கள் – பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்காவிடில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். உங்கள் பொறுமை, கடமை உணர்வு காரணமாக அவைகளை எதிர்த்து இறுதியில் வெற்றி அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதைத் தவிர்க்கவும். சிலருக்குப் பணி நிமித்தமான ஃபாரின் பயணங்கள் ஏற்படலாம்.
         வியாபாரிகள் – தொழிலில் புகழும் மரியாதையும் கூடும். பணப் புழக்கம் திருப்தி கரமாக இருக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாட்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. பைனான்ஸ், ஆபரண தயாரிப்பு, தானிய வியாபாரம் ஆகியவை முன்னேற்ற கரமாக இருக்கும்.
         கலைஞர்கள் – வாத்திய இசைக்கருவிகளை வாசிப்பவர்களுக்கு அமோக வரவேற்பும், நல்ல எதிர் காலமும் உண்டு. பெரிய திரைக் கலைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் தேடிவரும். சின்னத்திரை கலைஞர்களுக்கு வேலைப் பளு கூடும். புகழும் பெறுவர். சிலருக்கு பணநெருக்கடிகள் அவ்வப்போது தலை தூக்கும், அரசு விருதுகளும், புகழும், பாராட்டும் கிடைக்கக் கூடிய காலம் இது.
         விவசாயிகள் ;- விவசாயக் கருவிகள், புதிய டிராக்டர் போன்ற வாகனங்கள் வாங்குவதற்கான கடன்கள் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே கிடைக்கும். காய்கறிகள், பழவகைகள், சிறு தானியங்கள், கிழங்கு வகைகள் ஆகியவை சிறப்பான ஆதாயத்தைத் தரும். அதனால், வருமானம் உயர்ந்து பழைய கடன்களை அடைக்க ஏதுவாகும். குலதெய்வ வழிபாடுகள், சுபகாரியங்கள் ஆகியவை சிறு தடைகளுக்குப் பிறகு சிறப்பாக நடக்கும்.
         பெண்கள் – திருமணக் கனவுகள் நனவாகும். அரசுப் பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.  சுயதொழில் புரியும் பெண்களுக்கு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உதவியால் ஆதாயம் அதிகரிக்கும். கடமை தவறாத பணியாளர்களுக்கு உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும். கல்வி நிமித்தமான பயணங்கள் சிறப்பு தரும். தேவையற்ற நட்பு வட்டாரங்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி தொழில் செய்யும் பெண்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.
       மாணவர்கள்;  மாணவர்களுக்கு பல தடைகளுக்குப் பிறகு கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியும் கிட்டும் அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களின் உழைப்பு பெருமை சேர்க்கும். முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப் பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். கல்வியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அரியர் உள்ள மாணவர்கள் அப்பாடங்களை எழுதி வெற்றி பெறுவது எளிது. வாகனங்களை வேகத்தைக் குறைத்து விவேகமாக ஓட்டினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.  
              கடக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு பலன்களின் வகையில் இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 70%
      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். முருகன் வழிபாடு சிறப்பைத் தரும்.


சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
                தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட நெறிமுறைகளுடன் வாழ்பவரும், தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவரும், தன்னம்பிக்கை மிக்கவருமான சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

         சுக பாவமான விருச்சிகத்தில் இருந்து, புத்திர பாவமான தனுசுவுக்கு, விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் புத்திர பாவமேறி, வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். பஞ்சம குரு நற்பலன்களை வாரி வழங்குவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். ஜனன ஜாதகப்படி யோகமான திசைகள் நடக்குமானால் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சியம் கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும்.  மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். கால்நடைச் செல்வங்கள் பெருகும். அரசபதவி கிடைக்கும். முதிப்பும் மரியாதையும் கூடும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றமான காலமாதலால், நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மாணக்கர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு வம்மு வழக்குகள் குறையும். இந்த சாதகமான காலகட்டத்தை நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுபவர்களே புத்திசாலிகள். அதேபோல், உத்தியோகம், தொழில் துறையில் உள்ளவர்களும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. கல்விச் சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் ஆன்மீக, பொதுச் சேவை ஸ்தாபனங்கள் வைத்து நடத்திவருபவர்கள் மிகப் பெரிய வளர்ச்சிகளைக் காண்பர். எதிர்ப்புகள் குறைந்து, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்து முதல் தரமான மதிப்பெண்களைப் பெறுவர். பெண்களுக்குப் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கலாம்.

         குரு தனது 5 ஆம் பார்வையால் பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப மதிப்பு மரியாதைகள் கூடும். தந்தையின் ஆதரவு கிடைப்பதோடு, அவர் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வகையில் பொருளாதார விரயங்கள் ஏற்படலாம்.  தாயாருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். உயர் படிப்புகள் படிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். வரவுக்கு ஏற்ப செலவுகள் அமையும். பிறர் மூலமான வருமானங்கள், காப்பீடு, சேமிப்பு நிறுவனங்கள் மூலமாக வருமானங்களை எதிர்பார்க்கலாம்.
         குரு தனது 7 ஆம் பார்வையால் இலாப பாவத்தைப் பார்வை செய்வதால்  தொழிலில் தங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான விதத்தில் காலம் கழியும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு மூலமான பணிகள் செய்பவர்களுக்கு ஆதாயங்கள் பெருகும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் மற்றும் பொது முன்னேற்றங்கள்  சிறப்படையும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
                     குரு தனது 9 ஆம் பார்வையாக ஜன்ம இராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் தீரும். கருத்து வேற்றுமைகள் மறைந்து பரஸ்பர ஒற்றுமை ஓங்கி, தம்பதியர் இடையே மகிழ்ச்சி நிலவும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதம் இன்றி கிடைக்கும். சமுதாய நற்பணிகள், ஜனசேவை செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் டிரஸ்டிகள் ஆகியோருக்கு  தலைப் பதவிகள் தானே வந்து சேரும். பரம்பரைத் தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இலாபங்கள் அதிகரிக்கும்.

         உத்தியோகஸ்தர்கள் – அரசுப் பணியாளர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் ஏற்படும்.  மதிப்பும் மரியாதையும் கூடும். பல வழிகளிலும் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் இருக்கும். சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கலாம்.

வியாபாரிகள் - புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில்
ஆதாயம் காணலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும்.  விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும்.  சுய தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்யலாம், துணி, நகை, அரிசி ஆலை, நவதானிநம் ஆகிய வியாபாரங்களில் நல்ல இலாபத்தை அள்ளலாம்.

         கலைஞர்கள் – சினிமா, தொலைக்காட்சி போன்ற கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தொடக்கத்தில் சாதகமாக இல்லாவிட்டாலும் பிற்பகுதியில் மேன்மையும் பணவரவும் இருக்கும். தொழில் விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு அடிக்கடி ஏற்படும். வதந்திகள், கிசுசிசுக்கள் காரணமாக காதல் விவகாரங்கள் கசப்பைத் தரலாம்.
   
         விவசாயிகள் ;-  தோட்டம், வயல்வெளி ஆகியவற்றில் புதிய முதலீடுகளை தைரியமாகச் செய்யலாம். விளைச்சல் அதிகரித்து, வருமானமும் கூடும்.  அதன் காரணமாக வீட்டில் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கும். தெய்வ வழிபாடு, தான தருமங்கள் செய்தல் ஆகியவை சிறப்பாக நடக்கும். அரசு மற்றும் வங்கி மூலமாக வாங்க முயற்சிக்கும் கடன்கள் எளிதாகக் கிடைக்கும்.

         பெண்கள் - திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் தாமதமாகும். சிலருக்குத் தடைகளும் வரலாம். பணிபுரியும் பெண்கள்  கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர், செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும்.
         மாணவர்கள்;- மாணவ, மாணவிகளுக்கு நல்ல நண்பர்களின் நட்பால் முன்னேற்றம் நிலவும்.  டி.வி. இன்டர்நெட் ஆகயவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்து பாடங்களை கவனமாகப் படித்தால்  தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  தடகளப் போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
        சிம்ம இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.    பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு  நற்பலன்கள் ஏற்படும். 90%
       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.






கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
      புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட நல்லவரும், பெற்றோரை அன்போடு பேணிக்காப்பவரும், தருமவானும், இரக்க குணமும் உடையவரான கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

          தங்கள் இராசிக்கு சுக மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு –விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, மாறுகிறார். குரு நான்கில் வந்த போதுதானே தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து  வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே ? கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுற்றங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நான்கு கால் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை.  சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் பணியினில் சிக்கல்களும், வருமானக் குறைவுகளும் ஏற்படும். காதல் விவகாரங்களில் வீண்பழி சுமத்தப்படலாம். பிறர் செய்த குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டு தேவையற்ற தண்டனைகள் கூட சிலருக்குக் கிடைக்கலாம்.  மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. வெளி மாநிலங்களில்  சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளி நாட்டில் வேலை பார்த்தவர்கள் தாய்நாடு திரும்பு நேரிடும். புதிய தொழில் வாய்ப்புகள் சிரமத்திற்குப் பிறகே ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் கவனச் சிதறல்களுக்கு ஆளாகாமல் கவனமாகப் படித்தாலே தேர்ச்சி பெற முடியும். நல்ல நட்புக்களை நாடிச் செல்வதே நல்லது. தச்சு வேலை, கட்டிட வேலைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பிரிந்து வேறு இடத்தில் வேலே செய்ய வேண்டியதிருக்கும.
       குரு தனது 5 ஆம் பார்வையால் 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மர்ம ஸ்தானத்தில் ஏற்பட்ட நோய்கள் மறையும். மரண பயம் விலகி ஆயுள்பலம் உண்டாகும். மனைவி மூலமாக வரும் தனத்துக்குப் பஞ்சம் இராது. தடைகள் விலகி மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.  உடல் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அதை தைரியமாக மேற்கொண்டு சுகம் பெறலாம்.
       குரு தனது 7 ஆம் பார்வையாகப் 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக தேறாது என முடங்கிய தொழில்கள் கூட துளிர்த்து எழும். உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கை கூடிவந்து மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வங்கிக் கடன் உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.
      குரு தனது 9 ஆம் பார்வையாக 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். உண்ண உணவு, சுகமான நித்திரை ஆகியவற்றிற்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள்.  கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குடும்பத்தில் நிலவி வந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

                 
         உத்தியோகஸ்தர்கள் - அதிகமான உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். வாகனயோகம் ஏற்படும். பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். பணியிடத்தில்  புகழும் மரியாதையும் கூடும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும், இராணுவம், போலீஸ், நீதி ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உருவாகும்.
         வியாபாரிகள் - தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாட்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. எல்.ஐ.சி முகவர்கள், பர்னிச்சர் வியாபாரம், கமிஷன் ஏஜெண்ட் ஆகியோருக்கு நல்ல தொழில் முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் புதிய மதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
         கலைஞர்கள் – கலைஞர்களைப் பொறுத்தவரை மிகச் சிறப்பான காலமாகும். உங்கள் சிறப்பான தனித் திறமைகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புதுமுக நடிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மீடியா துறைகளில் உள்ளவர்கள் அரசு நெருக்கடிகளுக்கு ஆளாவார்கள். ஓவியம், சிற்பம் ஆகிய தொழில் புரிபவர்களுக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
         விவசாயிகள் – கிழங்கு வகைகள், நெல், கம்பு, சோளம், பழவகைகள், கொடிவகைப் பயிர்கள் ஆகியவை சிறப்பான ஆதாயத்தைத் தரும்.  அரசு வகை உதவிகள் கிடைக்கும். வழக்கு விகாரங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. வீட்டில் சிலருக்கு உடல் உபாதைகள் எழலாம். வரவு செலவுகள் எப்போதும் போல் இருக்கும்.
       பெண்கள் - அரசுப் பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.  சுய தொழில் புரியும் பெண்களுக்கு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உதவியால் ஆதாயம் அதிகரிக்கும். கடமை தவறாத பணியாளர்களுக்கு உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இறைவனின் அருளால் அதற்கான பாக்கியம் உண்டாகும்.
       மாணவர்கள் -  கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியும் கிட்டும் அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களின் உழைப்பு பெருமை சேர்க்கும். இன்பச் சுற்றுலா பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் சொல் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ட்வீட்டர், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.

      கன்னி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.  சுமாரான பலன்களே ஏற்படும். 70%
       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பைத் தரும்.

                                                                                                                   

No comments:

Post a Comment