Search This Blog

Sunday 29 September 2019

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - துலாம், விருச்சிகம், தனுசு



குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - துலாம், விருச்சிகம், தனுசு


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை விளம்பியும், சுகந்த பரிமளப் பிரியரும், வினோதமான குணமுள்ளவருமான துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       .
     தங்கள் இராசிக்கு தைரியம் மற்றும் ருண ஸ்தானாதிபதியுமான குரு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு,  மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும். பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே சிறப்புத் தரும். சகோதர, சகோதரிகளினால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களின் நயவஞ்சகத்தனத்தால் ஏமாற்றப்படுவீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. புதிது புதிதாக தேவையற்ற செலவுகள் வந்து கைப்பணம் கரையும். தொழில் வளர்ச்சிக்காகச் கூடுதலான முதலீடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை எழும். முதலீடுகளை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும். எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்.   அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். உறவுகளும் பகையாகும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள்  அதிகரிக்கும். தான தர்மமென தர்மச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களான அலைபேசி போன்றவற்றில் அதிக காலம் செலவழிப்பதால், கல்வியில் ஈடுபாடு குறைந்து, கழுத்து வலியே மிச்சமாகும்.  சிலருக்கு, கௌரவ பங்கம், ஊரார் சிரிக்கும் அளவுக்கு அவமானங்கள் ஏற்படும். முரடராய் இருந்தாலும், தைரியமற்ற கோழை ஆகிவிடுவார். சந்தோஷமற்ற, குறிக்கோளற்ற அலைச்சல்களால் சரீர களைப்பு ஏற்படும். சனி சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் அனைத்து இடர்பாடுகளையும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள் என்றால் மிகையாகாது.

       குரு தனது 5 பார்வையாக களத்திர பாவத்தை பார்வையிடுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன தோழர்கள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சேவைகள் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே காதலும், பாசமும் கரைபுரண்டு ஓடும். காதல் விவகாரங்கள் கல்யாணத்தில் முடியும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.
        குரு 7 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் சென்று தெய்வீக அருளைப் பெறுவீர்கள். தந்தையின் புகழ் ஓங்கும். பிள்ளைகளின் மீது காட்டும் அதிக அன்பால் அவர்கள் மனம் மகிழும். தாயாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தந்தை வழி சொத்துக்களில்  ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து சாதகமாய் அமையும். தந்தை  மூலமான எதிர்பாராத ஆதாயங்கள் இருக்கும். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய  அம்மாவாசை படையல்களை முறையாகச் செய்துவர சந்ததிகள் வளம் பெருகும்.
        குரு 9 ஆம் பார்வையாக இலாப பாவத்தைப் பார்ப்பதால் கலைத் துறையினர், ஆடம்பர பொருட்களை விற்பவர்கள், இனிப்பு தயாரிப்பாளர்களின் விற்பனை சூடு பிடித்து இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின்  முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் காரணமாக அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தங்கள் திருமண வயது எய்திய பிள்ளைகளுக்குத் திருமணங்கள் ஏற்பாடாகி, மங்கள காரியங்கள் நிறைவேறும். புதிதிர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம் ஏற்படும்.
         உத்தியோகஸ்தர்கள் – நீங்கள் எடுக்கும் காரியங்களில் காரியத்தடைகள் ஏற்படும். உங்கள் முயற்சிகள் பலிதம் அடையாமல், தோல்வி அடைதல், கீழே பணிபுரிபவர்களால் பிரச்சனை, மேலதிகாரிகளால் குழப்பங்கள், அவர்களுடன் மனஸ்தாபங்கள் ஆகியவை ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் அல்லல், அவஸ்தைகள் ஏற்படும்.
         வியாபாரிகள் - தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும்.  விவசாயப் பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். புதிய சேமிப்புத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்யலாம். செய் தொழிலில் அனுகூலமற்ற மாற்றங்கள் ஏற்படலாம். கமிஷன் ஏஜண்டுகள், நில புரோக்கர்களுக்கு தொழிலில் மந்த நிலை உருவாகும்.
         கலைஞர்கள் – கொஞ்சம் சிரமமான காலம். எதிலும் முழு முயற்சியுடனும், ஆர்வத்துடனும் இறங்கினால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் காய்த்துக் கனியாகும். தயாரிப்புத் தொழிலில் உள்ளவர்கள் போட்ட முதலை எடுக்க மிகவும் சிரமப்பட வேண்டியத்திருக்கும். புதுப்பட பூஜைகளை நல்ல முகூர்த்தம் பார்த்து செய்வது நல்லது. இசைத் துறையில் உள்ளவர்கள் பல போராட்டத்திற்குப் பிறகே புதிய படங்கள் ஒப்பந்தமாகும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.
         விவசாயிகள் ;- புதிய விவசாயக் கருவிகள், வண்டி வாகனங்கள் ஆகியவற்றை வாங்க முயற்சிப்பீர்கள். ஆனால் அதில் தடை, தாமதங்கள் ஏற்பட்டு கடைசியில் சுமுகமாகவே முடியும். கொடி வகைப் பயிர்கள் ஆதாயத்தை அள்ளித் தரும். அரசுக் கொள்முதல் நிலையங்களில் விளைப்பொருட்களை இலாமகரமாக விற்கும் சூழ்நிலை உருவாகும். தெய்வீக வழிபாடுகள் நிறைவேறும். சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
         பெண்கள் - பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் தாமதமின்றி செய்யப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைத்து, உற்பத்தி பெருகி, ஆதாயமும் பெருகும். தகவல் தொடர்புகளில் தாமதமான நிலைகள் ஏற்படும். உடன் பிறப்புகளால் வேண்டாத தொல்லைகள் ஏற்படலாம்.
         மாணவர்கள் - மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும்,  வெற்றிகளும் குவிய உண்மையான உழைப்பு தேவை.  கல்வியில் நல்ல முன்னேற்றங் கணா பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரை, வழிகாட்டுதல்களின் படி நடந்தால் வெற்றி நிச்சியம்.  மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், முக்கியமாக காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற முயல வேண்டும்.

       துலா இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவது அரிது. 60%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். தேய்பிறை அஷ்டமியில் காளி அம்மனுக்கு நெய்விளக்கேற்றி பூஜிப்பது சிறப்பு.
                                                                                                                                                                                                                                                                        

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட சோர்விலாத மனத்தையும், இனிமையான பேச்சையும், கேட்பவர்களுக்கு மறுக்காது கொடுப்பவருமான  விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

        தனம் மற்றும் புத்திர பாவங்களுக்கு அதிபதியான குரு – விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் காலம். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் வருமானங்கள் பெருகி, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். தேவதை போன்ற அழகிய மனைவி அமைவாள். குழலைவிட இனிதான குரலுடைய குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும் புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றம் அடைவர். அந்தஸ்து, கௌரவமும் கூடும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுச் சேவையில் ஈடுபட்டோருக்கு இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடிவரும். அதன் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும். சிலருக்கு தெய்வீக அருளால் கோவிலில் அறங்காவலர் போன்ற பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தர்ம காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.    
       குரு 5 ஆம் பார்வையாக ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து குடும்ப ஆரோக்கியம் குறையும். உடன் பிறப்புக்களுக்கு யோகம் ஏற்பட்டு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். அன்பு தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும்.

        குரு 7 ஆம் பார்வையாக  ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தீர்க்க முடியாது என்று நினைத்த நோய்கள் மருத்துவர்கள் உதவியுடன் நிரந்தரமாக சரியாகும்.  மங்கையருக்கு நிச்சியக்கப்பட்ட மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும்.  வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.  பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  நல்ல செய்திகள் கிடைக்கும்.   

       குரு தனது 9 ஆம் பார்வையால் கர்ம பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல உயர்வான வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, சிறப்பான பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் குவியும். புதிய வீடு, மனை  வாங்கும் யோகங்களும் அமையும்.  விவசாயிகள், தொழில் துறையைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பர்.

         உத்தியோகஸ்தர்கள் -  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும். புதிய தனவரவு, புதிய முயற்சிகளில் வெற்றி, குடும்பத்தில் சுப செலவுகள் ஆகியவை ஏற்படும். எதிலும் அடி எடுத்து வைக்குமுன் நன்கு யோசித்துச் செய்வது இழப்பைத் தவிர்க்கும். ஸ்பெகுலேஷன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கும். அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வீடு அமையும். நிதித் துறை, புலனாய்வுத்துறை, தணிக்கைத்துறைகளில் பணி புரிபவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.
        வியாபாரிகள் – பைனான்ஸ் தொழிலில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இரும்பு, மிஷினரி, உதிரி பாக தொழில்கள் சிறக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப வியாபார நுணுக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலமாக, அதிக லாபம் அடையலாம். தாதுப் பொருட்கள், உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும். அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும்.
       கலைஞர்கள் – கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கு கடுமையான போட்டிகளுக்கிடையே பணிபுரிய வேண்டிய காலமிது. சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு வலுவான காதாபாத்திரங்கள் அமைந்து பேரும் புகழும் கூடும். நாடகத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கும் யோகம் ஏற்படும். மீடியாவில் உள்ளவர்கள் கவனமுடன் செயல்படாவிட்டால் அரசின் கண்டனத்துக்கு ஆளாக நேரும்.
       விவசாயிகள் ;- நெல், வாழை, பழவகைகள், வெற்றிலை, புகையிலை, எண்ணெய் தாவரங்கள் ஆகியவற்றில் நல்ல விளைச்சல் உண்டாகி, அபரிமிதமான ஆதாயம் ஏற்படும். செல்வ நிலை உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். புதிய வாகன யோகங்கள் ஏற்படும். கோவில் கொடை, விழாக்களில் கலந்து கொண்டு உறவுகளுடன் உறவாடி மகிழ்வீர்கள்.
       பெண்கள் ;  பணிபுரியும் பெண்களுக்கு நெடுநாட்களாகத் திட்டமிடப்பட்டிருந்த புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பதவி உயர்வுகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பதால் மனஅமைதி குறையும். சிலர் தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சமயோஜித புத்தியால், முறியடித்து முன்னேறுவர்.
       மாணவர்கள் ; மாணவர்கள் தங்கள்  தேர்வுகளில் வெற்றிபெற கருத்துடன், கவனமாகப் படித்தல் அவசியம். ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், நன்றும், இன்றே செய்என எந்தக் காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாமல் இன்றே செய்து முன்னேற முயல வேண்டும். இல்லையெனில் கல்வியில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. அரிய சாதனைகள் புரிய விடாமுயற்சியே தேவை. விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு பதகங்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். 
                   விருச்சிக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு பலன்களின் வகையில் இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 85%
       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். நாகராஜரை வணங்க நன்மை பயக்கும்.

தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
              தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், சுகவான், தனவான் என வான் போல் உயர்ந்த நாணயமும், நானயமும் உடைய தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசி மற்றும் சுக பாவாதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, ‘ ஜென்ம இராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும் ‘ – என வரும் பழம் பாடல் படி இராம பிரானுக்கே அந்த கதி என்றால் நமக்கு.......? அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு பள்ளமென அலைந்து திரிய நேரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. உங்கள் செயல்பாடுகளில் எப்போதும் ஓர் அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இராஜகோபமும், பொன், பொருள் இலாபமின்மை ஆகியவை ஏற்படும். தகவல் தொடர்பு ஐ. டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்பட்டு, வெளிநாடு செல்வர். குழந்தை இல்லாதவர்கள் புதிதாக குழந்தை தத்தெடுக்க சரியான காலமாகும். சிலருக்குக் குழந்தைகளின் திறமையான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அடிக்கடி மன மாற்றங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதன் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் முகவும் இணக்கமான சூழல் நிலவும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தெய்வ அனுகூலமும், தெய்வீக புருஷர்களை சந்தித்து, இவர்களின் அருளாசி பெறுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.   

       குரு தனது 5 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவங்களைப் பார்வை செய்வதால்  மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் பாதிப்புகள் குறைந்து, சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். தெய்வீக கைங்கரியங்கள் செய்து தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். காதல் விவகாரங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும்   நிவர்த்தியாகும்.

       குரு தனது 7 ஆம் பார்வையாகக் களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஓங்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான உறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்பமான, இணக்கமான வாழ்க்கை வாழ்வார்கள்.  புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விக்கான பிறரின் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

       குரு தனது 9 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் சமுதாயத்துக்கும், மக்களுக்குமான பொதுச் சேவைகளில் ஈடுபட்டுனுயர்வு அடைவார்கள். கோவில் திருப்பணுகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவர். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள், விவசாயம் ஆகியவை  மேம்பாடு அடையும். இலாபமும் கூடும்.  

        உத்தியோகஸ்தரர்கள் -  புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை ஓரளவே சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். முயற்சிகளில் சிரமத்தின் பேரில் வெற்றி கிடைக்கும். மிகுந்த இன்னல்களுக்குப் பிறகே அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் மனமறிந்து நடந்தால் ஆதாயம் பெருகும்.
       வியாபாரிகள் - வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் மனமறிந்து நடந்தால் ஆதாயம் பெருகும் எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது தடங்கல்களுக்குப் பிறகு ஏற்றம் தரும்.  சிலருக்கு மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படும். பழைய கடன்கள் அடைபடும். ஜவுளி, வாசனைப் பொருட்கள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
        கலைஞர்கள் – கலைஞர்களைப் பொறுத்தவரை நல்ல உயர்வான காலம். ஆயினும் நடுநடுவே தடங்கல்களும் இருக்கும். பாடலாசிரியர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை விட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் சிறக்கும். பத்திரிக்கையாளர்கள் வீண் அரசுப் பகைக்கு ஆளாகாமல் தங்கள் வேலைகளை மட்டும் பார்ப்பது நல்லது. சின்னத்திரைக் கலைஞர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளே நிலவும்.     
                 விவசாயிகள் ;- விவசாயத்தில் எதுர்பார்த்த ஆதாயம் இருக்காது. ஆயினும் ஆமணக்கு, கற்றாழை, மூலிகைத் தாவரங்கள் ஆகியவற்றில் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய கடன்கள் உருவாகி மன அமைதி கெடும். கோவில் குளம் என புனித பயணங்கள் மற்றும் வேண்டுதல்களால் ஓரளவு மன நிம்மதி பெறலாம். 
                 பெண்கள்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வராவண்ணம் சுமுகமாகப் போவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று ஆதாயம் பெருகும். அரசுப் பெண் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும், பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலை விஷயமாக குடும்பத்தைப் பிரிய நேரலாம்.        
      மாணவர்கள்; மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் திறன் மேம்பட உழைப்பர்.  கூடிய மட்டும்  முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். எனவே, தேவையற்ற விவகாரங்களில் ஈடுபடாதிருப்பது நல்லது. விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் தங்கள் பணம், பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் எச்சரிக்ககையுடன் ஆடவேண்டும். இல்லையெனில் சிறுசிறு காயங்கள் ஏற்படும்.


       தனுசு இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.  சுமாரான பலன்களே ஏற்படும். 70%
      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க மேன்மை அடையலாம்.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

No comments:

Post a Comment